திருச்சி, மார்ச் 25 - தமிழ்நாட்டில் கிரானைட் கொள்ளைமூலம் கருணாநிதி குடும்பத்திற்கு கிடைத்தது ரூ. 80 ஆயிரம் கோடி என்ற தகவலை ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஜெயலலிதா தெரிவித்தார். அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா நேற்று தனது முதல்கட்டப் பிரச்சாரத்தை ஸ்ரீரெங்கம் தொகுதியில் துவக்கினார். அவர் போட்டியிடும் இந்தத் தொகுதியில் தனக்கு வாக்களிக்குமாறு வாக்காளர்களை அவர் கேட்டுக்கொண்டார். அப்போது கூடியிருந்த ஆயிரக்கணக்கான பெண்கள் மத்தியில் அவர்பேசும்போது, இந்த அரசு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவில்லை. அதற்காக அவர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரிசிக்கடத்தலை தடுக்கவில்லை. முல்லைப் பெரியாறு பிரச்சனை, காவிரி ஆற்றுப் பிரச்சனை, பாலாறு பிரச்சனை இதில் எதிலும் நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீதிபதிகள், வக்கீல்கள், அரசு ஊழியர்கள் தாக்கப்படுகிறார்கள். அரசு ஊழியர்களுக்கு எதையும் செய்யாத ஒரே அரசு கருணாநிதி அரசு. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லாமல் போய்விட்டது. ரெளடிக் கும்பலை அடக்க முடியவில்லை. மணல் கொள்ளை மூலம் ரூ.50 ஆயிரம் கோடி ஊழல், கிரானைட் ஊழல் மூலம் ரூ.80 ஆயிரம் கோடி பணம் கருணாநிதி குடும்பத்திற்கு போய்ச் சேர்ந்துள்ளது. குரங்கு கையில் சிக்கிய பூமாலை போல் ஆகிவிட்டது தமிழகம். அ.தி.மு.க ஆட்சியில்தான் தமிழகம் வளர்ச்சி அடையும். கடந்த 5 ஆண்டுகாலமாக மைனாரிட்டி தி.மு.க அரசில் உள்ள பிரச்சனைகளை நீங்கள் நன்கு அறிவீர்கள். தமிழ்நாட்டை மீட்டெடுக்க முன்னேற்றப் பாதையில் செல்ல உங்கள் வாக்குகளை எனக்கு அளித்து வெற்றி பெறச் செய்யுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.