திருப்பரங்குன்றம், ஜன. - 17 - திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தை பொங்கலை முன்னிட்டு நேற்று முன்தினம் சுவாமிகளுக்கு மண்பானையுடன் பொங்கல் படைக்கப்பட்டது. திருப்பரங்குன்றம் கோயிலில் தினமும் வெண்கல பானையில் பிரசாதம் தயாரிக்கப்பட்டு சுவாமிகளுக்கு படைக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். தைப்பொங்கலை முன்னிட்டு கோயில் மடப்பள்ளியில் மண் பானையில் பொங்கல் தயாரித்து அதில் மஞ்சள் கிழங்கு, வாழை இலை, கரும்பு துண்டு வைத்து எடுத்து செல்லப்பட்டு மூலவர்கள் சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், துர்க்கை அம்மன், சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள் முன்பு பானையுடன் பொங்கல் படைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மகாதீப தூபாராதனைகள் நடந்தது. பின்னர் உற்சவர் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை முன்பு மண் பானைகள் வைக்கப்பட்டு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது. மண் பானையுடன் சுவாமிகளுக்கு பொங்கல் படைக்கப்படுவது தை பொங்கலன்று மட்டுமே.