அடிலெய்டு டெஸ்ட்: இந்திய விக்கெட்டுகள் சரிவு

 

அடிலெய்டு, ஜன. 28 - அடிலெய்டு நகரில் நடைபெற்று வரும் 4-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறும் நிலையில் உள்ளது. இந்திய அணி முக்கிய விக்கெட்டுகளை இழந்ஏது தடுமாறி வருகிறது.  இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டை இழந்து 604 ரன்னைக் குவித்து ஆட்டத்தை டெக்ளெர் செய்தது. இதில் கேப்டன் கிளார்க் மற்றும் பாண்டிங் இருவரும் இரட்டை சதம் அடித்தனர்.  பின்பு 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸி. அணி 5 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்னை எடுத்து ஆட்டத்தை டெக்ளெர் செய்தது. இதில் பாண்டிங் 60 ரன்னையும், கிளார்க் 37 ரன்னையும், வார்னர் 28 ரன்னையும் எடுத்தனர். 

இந்திய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 378 ரன்னை எடுத்தது. இதில் கோக்லி சதமும்,  காம்பீர் 34 ரன்னையும், டெண்டுல்கர் 25 ரன்னையும், சகா 35 ரன்னையும் எடுத்தனர். 

இந்திய அணி 2-வது இன்னிங்சில் 500 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கை ஆஸி. அணி வைத்தது. ஆனால் இந்திய அணி வழக்கம் போல இந்த ஆட்டத்திலும் ரன் எடுக்க திணறுகிறது. 

4-வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2-வது இன்னிங்சில் 56 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்னை எடுத்து இருக்கிறது. 

இந்த இன்னிங்சில் இந்திய அணியின் 6 முக்கிய விக்கெட்டுகள் விழுந்து விட்டன. பெளலர்கள் மட்டுமே மிச்சம். ஆஸி. அணி தற்போது வெற்றியின் விளிம்பில் உள்ளது.

இந்திய அணியின் 2-வது இன்னிங்சில் கேப்டன் சேவாக் 65 ரன் எடுத்தார். தவிர, லக்ஷ்மண் 35 ரன்னையும், டிராவிட் 25 ரன்னையும் கோக்லி 22 ரன்னையும் எடுத்தனர். காம்பீர் 3 ரன்னிலும், டெண்டுல்கர் 13 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். 

ஆஸ்திரேலிய அணி தரப்பில், 2-வது இன்னிங்சில் முன்னணி வேகப் பந்து வீச்சாளரான ஹாரிஸ் 2 விக்கெட்டையும், லியான் 3 விக்கெட்டையும் எடுத்தனர்.