உத்தரகாசி, ஜன.29 - மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நாட்டில் ஊழல் , விலைவாசி உயர்வு ஆகியவற்றை தடுக்க தவறி விட்டது என்று பா.ஜ.க.மூத்த தலைவர் எல்.கே.அத்வானி குற்றம்சாட்டினார். உத்தர பிரதேசத்தில் வருகிற பிப்ரவரி 8 ம் தேதி தொடங்கி மார்ச் 3 ம் தேதி வரை 403 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.உத்தரகாசி நகரில் நடந்த தேர்தல் பிரச்சார பேரணி ஒன்றில் பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே. அத்வானி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில் - மத்தியில் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி, அதிகரித்துவரும் விலை வாசி , ஊழல் ஆகியவற்றை தடுக்க தவறி விட்டது என்றார்.
உண்மையான ராம ராஜ்யத்தை பா.ஜ..க.வினால் மட்டுமே தர முடியும் என்றும் ஊழல் செய்த மத்திய மந்திரிகள் சிலர் இப்போது சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை அடுத்து சிறையில் கம்பி எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.
பெட்ரோல், கேஸ் போன்ற அத்யாவசி பொருட்களின் விலைகளை மத்திய அரசு உயர்த்தி மக்களின் தலையில் அதிக சுமையை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் மத்தியில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் போது இப்படி பெட்ரோல், கேஸ் விலைகள் உயர்த்தப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
நாட்டின் பாதுகாப்பையும் லஞ்சத்தையும் பா.ஜ.க. எப்போதும் விட்டுக்கொடுக்காது என்றும் அவர் கூறினார்.
பாகிஸ்தானுடன் நடந்த கார்கில் போரில் நாம் வெற்றி பெற்றோம். அது அப்போது மத்தியில் இருந்த பா.ஜ.க. தலைமையிலான அரசுக்குத்தான் பெருமை என்றும் அவர் கூறினார்.
பா.ஜ.க. எப்போதும் ஊழலை எதிர்க்கும் என்றும் எதிலும் எப்போதும் வெளிப்படை தன்மையையே தங்களது கட்சி கடை பிடிக்கும் என்றும் அவர் கூறினார்.
உத்தர பிரதேசத்தில் மாநில வளர்ச்சி திட்டங்களை பா.ஜ.க. வால் மட்டுமே சிறப்பாக செயல்படுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றும் அவர் கூறினார்.