பின்லேடன் தகவலை பாக். மருத்துவர்தான் கொடுத்தார்

வாஷிங்டன், ஜன.29 - ஒசாமா பின்லேடன் குறித்து பாகிஸ்தான் அரசு கைது செய்துள்ள மருத்துவர் சகில் அப்ரிதான் முக்கிய தகவல் கொடுத்ததாக அமெரிக்கா வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளது. அமெரிக்க பாதுகாப்பு துறை செயலாளர் லியோன் பெனட்டா, சி.பி.எஸ். தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இதனை தெரிவித்துள்ளார். அபோதாபாத்தில் தங்கியிருப்பது பின்லேடன்தான் என்பதை அவரது மரபணு மூலம் அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ.விடம் உறுதி செய்ததும் அப்ரிதான். இவர் மீது பாகிஸ்தான் குற்றம் சாட்டி கைது செய்திருப்பதற்கு மிகவும் வருந்துகிறேன் என்றும் பெனட்டா தெரிவித்தார். இருப்பினும், அபோதாபாத் வளாகத்தில் பின்லேடன் தங்கியிருந்தது பற்றி பாகிஸ்தானுக்கு முன்பே தெரியுமா என்பதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என்றும் அவர் கூறினார். இதனிடையே அபரிதியை விடுவித்து அமெரிக்காவிடம் ஒப்படைப்பதன் மூலம் அப்ரிதி விவகாரத்தில் சுமூக தீர்வு காண முடியும் என்று பாகிஸ்தான் நம்புவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.