மும்பை மாநகராட்சியில் ரூ.40 ஆயிரம் கோடி ஊழலா?

 

தானே,பிப்.12 - மும்பை,தானே மாநகராட்சிகளில் ரூ.40 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாகவும் இது குறித்து சிவசேனா கட்சியிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் சரத்பவார் கோரியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலையொட்டி தீவிர பிரசாரம் நடந்து வருகிறது. தானே நகரில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் முதல்வர் பிரித்விசவாணும் சரத்பவாரும் கலந்துகொண்டு பேசினார். அப்போது மத்திய விவசாய அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவருமான சரத்பவார் பேசும்போது கூறியதாவது:-

தானே, மும்பை ஆகிய மாநகராட்சிகளில் சிவசேனா கட்சி ரூ.40 ஆயிரம் கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளது. இது குறித்து சிவசேனா கட்சியிடம் விசாரணை நடத்த வேண்டும். இந்த இரண்டு மாநகராட்சிகளின் வளர்ச்சிக்காக மத்திய அரசு ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை ஒதுக்கி வருகிறது. இதை சிவசேனா கட்சி முறைகேடாக பயன்படுத்தி வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் மும்பை மாநகராட்சியில் ரூ. 40 ஆயிரம் கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளது. இதற்கு பாரதிய ஜனதா கட்சிதான் காரணம் என்று சிவசேனா கட்சி தலைவர் ராஜ்தாக்கரேயே கூறியுள்ளார். மும்பை மாநகராட்சியை நிர்வகிப்பதில் ஒரு காலத்தில் ராஜ்தாக்கரேயும் முக்கியப்பங்கு வகித்தார். இதுகுறித்து விசாரணைக்கு முதல்வர் பிரித்வி சவாண் உத்தரவிட வேண்டும். அப்போதுதான் யாருக்கு ஓட்டுப்போட வேண்டும் என்று மக்கள் முடிவு செய்வார்கள். மும்பையின் வளர்ச்சியில் சிவசேனாவும் பாரதிய ஜனதாவும் ஆர்வம் காட்டவில்லை. மும்பையின் இந்த நிலைமைக்கு இந்த இரண்டு கட்சிகளும்தான் காரணமாகும். இவ்வாறு சரத்பவார் கூறினார்.