திருச்செந்தூர், பிப்.- 13 - திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணி சுவாமி கோவிலில் கடந்த சனிக்கிழமையன்று தை உத்திர வருஷாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாம் திருக்கேவிலில் மூலவரான சுப்பிரமணியர் பிரதிஷ்டை செய்தது தை உத்திர நட்சத்திரத்தில் தான் என்பதால் ஆண்டுதோறும் தை நட்சத்திரத்தன்று வருஷாபிஷேகம் நடைபெறும். இதனையொட்டி இந்த ஆண்டு தை உத்திர வருஷைபிஷேகத்தை முன்னிட்டு திருக்கோவிலில் சனிக்கிழமை அதிகாலை 4மணியளவில் நடை திறக்கப்பட்டு 4.30 மணியளவில் விஸ்வரூப தரிசனமும், 5 உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. திருக்கோவில் மகாமண்டபத்தில் மூலவர், வள்ளி, தெய்வானை அம்பாளுக்கும், குமரவிடங்கப்பெருமான் சன்னதியில் ஸ்ரீ சண்முகருக்கும், பெருமாள் கோவில் முன் பெருமாளுக்கும் 5 கும்ப கலசங்கங்கள் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து காலை 8.45 மணிக்கு மூலவர், வள்ளி, தெய்வானை, ஸ்ரீசண்முகர், பெருமாள் ஆகிய சுவாமி விமானங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இரவில் மூலவருக்கு பக்தர்கள் வழங்கிய புஷ்பங்களால் புஷ்பாஞ்சலி நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்ட இந்த தை உத்திர வருஷாபிஷேகம் இந்த ஆண்டு சிறப்பாக நடைபெற்றது.