நெல்லை பிப்-23 - சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் போட்டியிட தேர்தல் மன்னன் பத்மராஜன் உள்பட 2 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் நேற்று துவங்கியது. முதல்நாளாக பல்வேறு முக்கிய தலைவர்களை எதிர்த்து போட்டியிட்ட தேர்தல் மன்னன் பத்மராஜன் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் அலுவலர் செல்வராஜிடம் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த பத்மராஜன் கடந்த 10 ஆண்டுகளாக முக்கிய தலைவர்களை எதிர்த்து போட்டியிடுவதை ஒரு கொள்கையாக கொண்டுள்ளார். இதுவரை அவர் 127 முறை வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளார். நேற்று 128வது முறையாக சங்கரன்கோவில் இடைத்தேர்தலுக்கு வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளார். அதற்கான டெபாசிட்
தொகை ரூ.5 ஆயிரத்தையும் அவர் வழங்கினார்.
இதே போல் அமைதிபுரட்சி என்ற அமைப்பின் தலைவர் ஸ்ரீ ராமச்சந்திரன் என்பவரும் சங்கரன்கோவில் இடைத்தேர்தலுக்காக வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளார். சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த இவர் தேர்தல் அலுவலர் செல்ராஜிடம்
தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். ஆனால் இவர் டெபாசிட் தொகையை
செலுத்தாமல் வேட்புமனு தாக்கல் செய்திருப்பதுதான் வேடிக்கை.