முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீலகிரி தொகுதியில் ஆ.ராசாவை முற்றுகையிட்ட பொதுமக்கள்

செவ்வாய்க்கிழமை, 15 ஏப்ரல் 2014      தமிழகம்
Image Unavailable

 

நீலகிரி, ஏப்.16 - நீலகிரி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆ.ராசா, நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அவிநாசி பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, அவரது வாகனம் முற்றுகை யிடப்பட்டதை தொடர்ந்து, தான் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பதாகக் கூறி 5 நிமிடம் உட்கார்ந்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. 

அவிநாசியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஆ.ராசா, தெக்கலூர் பேருந்து நிலையம் அருகே வந்தபோது, பொதுமக்களும் போராட்டக் குழுவினரும் ஆ.ராசாவின் வாகனத்தை முற்றுகையிட்டனர். 

அவிநாசி அத்திக்கடவு நிலத்தடி நீர் செறிவூட்டும் போராட்டக் குழு மற்றும் பொதுமக்களின் நிலையை நேரில் பார்த்த ஆ.ராசா, மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக, போராடு வோம் என கோஷமிட தொடங்கினார். 

இதை சற்றும் எதிர்பார்த்திராத பொதுமக்கள் மற்றும் போராட்ட குழுவினர், எச்சரிக்கை...எச்சரிக்கை.... என்றபடி ஆ.ராசாவின் வாகனத்தை முற்றுகையிட்டனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. 

அங்கிருந்த போராட்டக் குழு மற்றும் பொதுமக்களிடம் ஆ.ராசா பேசிய போதும், அங்கிருந்தவர்கள் சமாதானமடையவில்லை. இதை யடுத்து அங்கிருந்தவர்கள், நீங்கள் 5 வருடம் இருந்தீர்கள், அவிநாசி அத்திக்கடவு திட்டத்துக்காக என்ன செய்தீர்கள் என்று கேட்டனர். 

அதற்கு, உலக வங்கி உதவி யுடன் இந்த திட்டத்தை நிறை வேற்றித் தருவேன். இந்தமுறை எம்.பி ஆனதும் இந்த திட்டத்தை நிறைவேற்றித்தருவதாக உறுதி யளித்ததோடு, கடந்தமுறை நான் ஜெயிலில்தான் இருந்தேன் என பதில் சொன்னாராம் ஆ.ராசா. 

மறுபடியும், நீங்கள் ஜெயிலுக் குப் போய் விட்டால் நாங்கள் என்ன செய்வது என்று கேட்ட போது... ஒருகணம் திகைப்படைந்து நானும் உங்களுடன் போராடத் தயார் என்றபடி சாலையில் உட்கார்ந்து சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கத் தயார் என்றார். 

இதையடுத்து, தெக்கலூர் - வெள்ளாண்டிபாளையம் சாலை யில் ராசாவின் வாகனத்துக்கு முன், போராட்டக் குழு அமர்ந்திருந்த சாலைப் பகுதிக்கு சென்று தானும் சாகும் வரை உண்ணா விரதம் என்று சொல்லி 5 நிமிடங்கள் அமர்ந்தார். பின், வாகனத்தை முற்றுகையிட்டவர்கள் திகைத்து நின்று பார்க்க, உடன் வந்த வாகனங்களும் ஆ.ராசா அருகில் வர, அங்கிருந்து வாகனத்தில் 5 நிமிடத் தில் ஏறிப்பறந்தார் ஆ.ராசா. 

இதையடுத்து, அப்பகுதியில் நிலவிய ஒரு மணி நேர பரபரப்பு முடிவுக்கு வந்தது. . 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்