முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க.வுக்கு மகத்தான வெற்றியை தேடி தாருங்கள்

செவ்வாய்க்கிழமை, 22 ஏப்ரல் 2014      அரசியல்
Image Unavailable

சென்னை, ஏப்.23 - தமிழ் நாடு தலை நிமிரும் வகையிலும், இந்தியாவின் எதிர்காலத்தை மனதில் வைத்தும், அனைவரும் வாக்குகளை பதிவு செய்திட வேண்டும் என்று வாக்காளர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகம் முழுவதும் அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளிலும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்த பிரச்சாரம் செய்த முதல்வர் ஜெயலலிதா சென்னையில் 3 நாட்கள் பிரச்சாரம் செய்தார். நேற்று இரவு சென்னை தி.நகரில் தமிழகம் புதுவை உட்பட 40 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் ஆலந்தூர் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்கள் உட்பட 41 பேரையும் ஒரே மேடையில் ஏற்றி அறிமுகம் செய்து வைத்து பேசினார். இத்துடன் அவர் தனது தேர்தல் பிரச்சார உரையை நிறைவு செய்தார். அதே நேரத்தில் நேற்று மாலை 6 மணியுடன் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் முடிந்தது. இதையடுத்து வீடுவீடாக சென்று பூத் சிலிப் அளித்து வாக்கு சேகரிக்கும் பணி தொடங்கி உள்ளது. இந்நிலையில் வாக்காளர் அனைவரும் சிந்தித்து செயல்படவேண்டும் என்றும் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். 

இது குறித்து அவர் வாக்காளர்களுக்கு எழுதிய கடிதம் வருமாறு:_

என் அன்புக்குரிய வாக்காளப் பெருமக்களே! 24.4.2014 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளுக்கான பொதுத் தேர்தலும், ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலும் நடைபெற உள்ளன.

இந்தத் தேர்தல்களையொட்டி கடந்த 3.3.2014 முதல் 37 பொதுக்கூட்டங்களிலும், சென்னை பெருநகரில் 17 இடங்களிலும், ஆக மொத்தம் 54 இடங்களில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொண்டு, இந்த தேசத்தின் எதிர்காலம் குறித்த என்னுடைய கனவுகளையும், கவலைகளையும், திட்டங்களையும் பற்றி உங்களிடையே எடுத்துக் கூற வாய்ப்பு கிடைத்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.  

நான் செல்லும் இடமெல்லாம் வாக்காளப் பெருமக்களாகிய நீங்கள் வரலாறு கண்டிராத வகையில் பல லட்சக்கணக்கில் திரண்டிருந்து நல்லாதரவு வழங்கினீர்கள்.  உங்களுடைய உற்சாகமான பங்கேற்பு காரணமாக என்னுடைய தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் எல்லோரும் கண்டு வியப்படையும் வகையில் வெற்றிகரமாக அமைந்தன.  நீங்கள் காட்டிய அன்பு என்னை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.  உங்கள் அனைவருக்கும் முதற்கண் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.  

தமிழக மக்களை, திராவிட இயக்கத்தின் பெயரைச் சொல்லியும், பேரறிடர் அண்ணாவின் பெயரைச் சொல்லியும் வஞ்சித்து, அரசியலை தன் குடும்ப வளர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்திக் கொண்ட திரு. கருணாநிதியின் சுயநல போக்கினைக் கண்டு வெகுண்டெழுந்து புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கினார்.  

தன் மீது நம்பிக்கை வைத்து அன்பு காட்டிய மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப நல்லாட்சி நடத்தினார் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள்.  அவருடைய நல்லாசியுடனும், அவருடைய வழியிலும் அரசியல் பயணத்தைத் தொடங்கிய நான், என்னுடைய வாழ்வை உங்களுக்காகவே முழுமையாக அர்ப்பணித்து வாழ்கிறேன்.  எனக்கென்று தனிப்பட்ட வாழ்வு எதுவும் இல்லை.  உங்கள் வளர்ச்சி தான் எனது மகிழ்ச்சி.  உங்களுடைய உயர்வு தான் எனக்கு நிம்மதி.  எனவே தான், என்னுடைய ஆட்சிக் காலம் என்பது ஏழை, எளிய மக்களுக்காகவும், சமூக நீதி காப்பதற்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், சிறுபான்மை சமூகங்களின் பாதுகாப்புக்கும், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் உயர்வுக்கும் தொண்டு செய்வதாக எப்பொழுதும் அமைகிறது.  

உங்கள் அன்புச் சகோதரியாகிய என்னுடைய ஆட்சியில் விலையில்லா அரிசி; மாதந்தோறும் தலா 1,000/_ ரூபாய் முதியோர் ஓய்வூதியம்; கிராமப்புற வறுமையை ஒழிக்க எண்ணற்ற பொருளாதார வளர்ச்சித் திட்டங்கள்; பெண்கள் அனைத்து நிலைகளிலும் 

சுய நம்பிக்கையோடு முன்னேறிச் செல்ல எண்ணற்ற சிறப்புத் திட்டங்கள் போன்றவற்றை செயல்படுத்தி வருகிறேன்.  

எனக்கு பெரிதும் மகிழ்ச்சி அளிப்பது, வருங்கால தலைமுறையினருக்கு தரமான கல்வி தந்திட நான் மேற்கொண்ட பல்வேறு திட்டங்களாகும்.  தமிழக மாணவ, மாணவிகள் தொடக்கக் கல்வி முதல் உயர் கல்வி வரை தரமான கல்வி பெற இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் செய்யப்படாத வகையில் பல்வேறு உதவிகளும், வசதிகளும் எனது ஆட்சியில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

லட்சக்கணக்கான மாணவ, மாணவியருக்கு ஆண்டுதோறும் விலையில்லா மடிக் கணினி வழங்கி வருவதன் மூலம் அறிவியல், தகவல் தொழில்நுட்பப் புரட்சியில் உலகிற்கே முன்னோடி மாநிலமாக தமிழ் நாடு திகழ்கிறது.  தமிழ் நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களைக் கண்டு அதை பின்பற்ற ஏனைய இந்திய மாநிலங்களும், சில வெளிநாடுகளும் முயற்சிப்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.  

மக்கள் நலன் காக்கும் இவை போன்ற இன்னும் பல்வேறு முன்னோடித் திட்டங்களை இந்த நாட்டிற்கு அளித்து, எல்லோரும் எல்லாமும் பெறுகின்ற உன்னத நிலையை ஏற்படுத்த வேண்டும் என்ற ஆவல் என் உள்ளத்தில் இருக்கிறது.  அதை செயல்படுத்திட உங்கள் அன்பும், ஆதரவும் எனக்கு எந்நாளும் தேவை.  

தமிழ் நாட்டில் பலமுறை ஆட்சி நடத்திய திமுக, தமிழ் மக்கள் கொடுத்த வாய்ப்பின் காரணமாக கிட்டத்தட்ட 17 ஆண்டு காலம் மத்திய அமைச்சரவையில் தொடர்ந்து அங்கம் வகித்தது.  ஆனால், கருணாநிதி தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை பயன்படுத்தி மக்களுக்கு நன்மை செய்வதற்கு பதிலாக, தமிழர்களுக்கு எண்ணற்ற துரோகங்களையும், தீமைகளையும் தான் செய்தார்.  

கருணாநிதியின் சுயநல, வஞ்சக போக்கிற்கு எடுத்துக்காட்டுகள் தான், உலக அரங்கில் தமிழர்களை தலைகுனியச் செய்த 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் நாட்டிற்கு இழைப்பை ஏற்படுத்திய 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஊழலும்; இலங்கையில் அப்பாவி தமிழ்ப் பொதுமக்கள் லட்சக்கணக்கில் கொன்று குவிக்கப்பட்டதற்கு அவர் பங்கேற்ற கூட்டணி அரசு வழங்கிய ஆயுதமும், ஆதரவும்.  எத்தனை வாய்ப்பு கிடைத்தாலும், அத்தனை வாய்ப்பையும் 

கருணாநிதியும், திமுக_வினரும் தங்கள் சுயநலத்திற்காக மட்டுமே பயன்படுத்துவார்கள் என்பது வரலாறு.

காங்கிரஸ் கட்சியின் தவறான பொருளாதார கொள்கைகள் காரணமாக நாடு முழுவதும் பெட்ரோல், டீசலில் ஆரம்பித்து வெங்காயம் வரை அனைத்துப் பொருட்களின் விலைகளும் உயர்ந்தன.  இந்திய ரூபாயின் மதிப்பு மளமளவென சரிந்தது.  பணவீக்கம் உயர்ந்தது.  

திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் நிலக்கரி சுரங்க ஊழல், ஹெலிகாப்டர் பேரத்தில் ஊழல், காமன்வெல்த் விளையாட்டில் ஊழல் என பல லட்சம் கோடி ரூபாய் மக்கள் பணம் ஊழலால் விரயமானது.  இது போன்ற கொடுமைகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்திட வாக்காளப் பெருமக்களாகிய உங்களுக்கு இந்தத் தேர்தல் மூலம் ஒரு பொன்னான வாய்ப்பு கிடைத்திருக்கிறது.  

வாக்காளப் பெருமக்களாகிய நீங்கள், இந்திய நாட்டின் எதிர்காலத்தை மனதில் வைத்தும்; தமிழ் நாட்டின் சிறப்புத் தேவைகளை கருத்தில் கொண்டும்; அனைத்து மக்களின் நல்வாழ்வுக்காகவும் பாடுபடுகின்ற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

மத்தியில் ஆட்சி அமைக்கின்ற வாய்ப்பு காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்தாலும்,  பாரதீய ஜனதா கட்சிக்கு கிடைத்தாலும், அவை, தமிழகத்தின் உரிமைகளையும், தமிழ் மக்களின் தேவைகளையும் பற்றி சிறிதும் கவலைப்பட்டதில்லை.  அதற்கு ஓர் எடுத்துக்காட்டு தான் தமிழகத்தின் வாழ்வாதாரமான காவேரி நதிநீர்ப் பிரச்சனையில் காங்கிரஸ் கட்சியும், பாரதீய ஜனதா கட்சியும் தங்களுடைய வெளி மாநில வாக்கு வங்கிக்காகவே மவுனம் காத்த துரோகச் செயல்.  இந்தக் கட்சிகளின் நண்பனாக பல ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொண்டிருந்த திமுக தன்னுடைய சுயநலனுக்காக தமிழர்களின் உரிமைகளை பலியிட்டது.  திமுக தலைவர் கருணாநிதியின் எண்ணத்தில் மேலோங்கி இருப்பது தமிழகர்களின் நலன் அல்ல.  தன் குடும்பத்தின் நலன் மட்டுமே.  இதற்கு ஒரு தீர்வு காண இந்தத் தேர்தலை வாக்காளர்களாகிய நீங்கள் பயன்படுத்த வேண்டும். 

இந்திய நாடு முழுவதும் `அமைதி', `வளம்', `வளர்ச்சி' ஏற்படவும், தமிழ் நாட்டின் உரிமைகள் பாதுகாக்கப்படவும்; தமிழ் நாட்டிற்கு உரிய நிதி ஆதாரங்கள் மத்திய அரசிடமிருந்து கிடைத்திடவும்; புதிய மத்திய அரசில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வலுவான முறையில் பங்கேற்பதன் அவசியத்தை தமிழகம் மற்றும் புதுச்சேரி வாக்காளப் பெருமக்களாகிய நீங்கள் அனைவரும் நன்கு அறிவீர்கள். 

எனவே, தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும், ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதியிலும் போட்டியிடும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களுக்கு இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். தந்த வெற்றிச் சின்னமாம் `இரட்டை இலை' சின்னத்தில் வாக்களித்து, அவர்கள் அனைவரையும் மகத்தான வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று எனதருமை வாக்காளப் பெருமக்களாகிய உங்கள் அனைவரையும் அன்புடன் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்.  

குறிப்பாக, இந்தத் தேர்தலில் முதல் முறையாக வாக்களிக்கப் போகும் இளைய தலைமுறை வாக்காளர்கள், தங்கள் வாக்குகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து, மக்கள் நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை வலுப்பெறச் செய்யும் வகையில் `இரட்டை இலை' சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.  

வாக்காளப் பெருமக்களே! தமிழ் நாடு தலை நிமிரும் வகையிலும், இந்திய நாட்டின் எதிர்காலத்தை மனதில் வைத்தும், நீங்கள் அனைவரும் வாக்குப் பதிவு நாளான 24.4.2014 அன்று காலையிலேயே வாக்குச் சாவடிக்கு சென்று உங்கள் வாக்குகளை பதிவு செய்திட வேண்டும் 

என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்