முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சைக்கிள் பயன்பாட்டை ஊக்குவிக்க அகிலேஷ் திட்டம்

வியாழக்கிழமை, 18 செப்டம்பர் 2014      இந்தியா
Image Unavailable

 

லக்னோ,செப்.19 - நெதர்லாந்து பாணியில் சைக்கிள் பயன்பாட்டை ஊக்குவிக்க உத்தரப் பிரதேசத்தில் ஆளும் சமாஜ்வாதி கட்சி திட்டமிட்டுள்ளது. இதற்காக அந்நாட்டுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

சமீபத்தில் நெதர்லாந்து நாட்டுக்கு சுற்றுப் பயணம் சென்று வந்த உ.பி. முதல்வர் அகிலேஷ், உபியில் முதலீடு செய்வது குறித்து அங்குள்ள பல நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். மேலும் நெதர்லாந்தை போல் உ.பி.யிலும் சைக்கிள் பயன்பாட்டை ஊக்குவிப்பது குறித்தும் பேச்சு வார்த்தை நடத்தினார்.

இதைத் தொடர்ந்து, நெதர்லாந்து தூதர் அல்போன்ஸஸ் ஸ்டோலிங்கா தலைமையிலான குழுவினர் உபிக்கு வந்து அகிலேஷுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் இருதரப்புக்கும் இடையே சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன்படி, உ.பி.யில் முதல் கட்டமாக சில முக்கிய நகரங்களில் 60 கி.மீ. தொலைவுக்கு சைக்கிள்களுக்காக பிரத்யேக பாதை அமைக்கப்பட உள்ளது.

இதுகுறித்து நொய்டா, கிரேட்டர் நொய்டா மற்றும் யமுனா எக்ஸ்பிரஸ்வே தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் தலைவர் ராமா ராமன் கூறியதாவது::-- முதல்வரின் திட்டமான இது, முதல்கட்டமாக ஆக்ரா, நொய்டா, லக்னோ உட்பட மூன்று நகரங்களில் செயல்படுத்தப்படும். இதன்படி, சைக்கிள்களுக்கு என சாலை ஓரங்களில் தனிப்பாதை மற்றும் நிறுத்துமிடங்கள் அமைக்கப்படும். இந்த திட்டத்தை ஊக்குவிக்க நெதர்லாந்து வல்லுநர் குழு நமக்கு உதவும் இவ்வாறு அவர் கூறினார்.

முதல் கட்டமாக நொய்டாவில் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக வளாகங்களுக்குள் சைக்கிளை தவிர வேறு வாகனங்களுக்கு தடை விதிப்பது குறித்து உ.பி. அரசு ஆலோசித்து வருகிறது. குறிப்பாக, கவுதம் புத்தர் பல்கலைக்கழகத்தில் இந்தத் திட்டம் முதலில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக அப்பல் கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜே.பி.சர்மா உ.பி. அரசுக்கு உறுதி அளித்துள்ளார்.

உலகிலேயே முதன்முறையாக நெதர்லாந்தில் சைக்கிள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் முயற்சி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. இதன் பலனாக அங்கு இப்போது 27 சதவிகித அளவுக்கு பொதுமக்களின் போக்குவரத்து சாதனமாக சைக்கிள்கள் பயன்படுத்தப் படுகின்றன. குறிப்பாக, தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் மட்டும் சைக்கிள் பயன்பாடு 38 சதவிகிதமாக உள்ளது.

சைக்கிள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் பொருட்டு, அதன் மீதான மாநில அரசின் வாட் வரியை நீக்கி உத்தரவிட்டுள்ளார் அகிலேஷ். இதுகுறித்து உ.பி. அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "மாநிலத்தின் விவசாயிகள், மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் என பெரும்பாலானவர்கள் சைக்கிள்களை நகரம் மற்றும் கிராமங்களில் பயன்படுத்துகின்றனர். எனவே அவர்களின் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் சைக்கிளுக்கு வாட் வரி நீக்கப்படுகிறது" என கூறப்பட்டுள்ளது. இதன்மூலம், இனி ரூ.3,500-க்கும் குறைவான விலையில் சைக்கிள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்