முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புத்தாண்டு: கோயில், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு

வியாழக்கிழமை, 1 ஜனவரி 2015      ஆன்மிகம்
Image Unavailable

மதுரை - புத்தாண்டையொட்டி கோயில், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. மேலும்  நேற்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதனால் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பெருமாளை தரிசித்தனர்.
 
ஆங்கில ஆண்டு 2014 நேற்று முன்தினத்துடன் ஓய்ந்தது. நேற்று 2015 மலர்ந்தது. இதை முன்னிட்டு உலகம் முழுவதும் நள்ளிரவானதும் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் புத்தாண்டு வரவேற்கப்பட்டது. மதுரை நகர் முழுவதும் நள்ளிரவு 12 மணி முதல் ஒரு மணி வரை பட்டாசு வெடித்து, மகிழ்ச்சி ஆரவாரத்துடன் கொண்டாடப்பட்டது. கோயில், தேவாலயங்களில் மணி ஓசை எழுப்பி சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடத்தப்பட்டன.

வீடுகளில் இருந்து குடும்பத்துடன் வந்து கோயில்களில் வழிபட்டனர். மீனாட்சி அம்மன் கோயிலில் அதிகாலை பள்ளியறை பூஜையை தொடர்ந்து புத்தாண்டை முன்னிட்டு அம்மன், சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. தங்க கிரீடத்துடன் காட்சி அளித்த அம்மனை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. தொடர்ந்து கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. ஆடிவீதி வரை நீண்ட வரிசையில் 2 மணி நேரத்துக்கும் மேலாக காத்து நி்ன்று பக்தர்கள் தரிசித்தனர். நேற்று புத்தாண்டுடன் வைணவ திருத்தலங்களின் முக்கிய நாளான வைகுண்ட ஏகாதசியும் சேர்ந்து வந்தது கூடுதல் சிறப்பாகும். மதுரையில் தல்லாகுளம் பெருமாள் கோயிலில் நேற்று அதிகாலையில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு அந்த வழியாக பெருமாள் எழுந்தருளினார்.

இங்கு அழகர்கோயில் சாலை வரை நீண்ட வரிசையில் நி்ன்று பக்தர்கள் தரிசித்தனர். மதுரை கூடலழகர் பெருமாள் கோயில், திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பெருமாள் எழுந்தருளும்  திருக்காட்சி நடைபெற்றது.
 
கோயில்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. புத்தாண்டு மழையோடு பிறந்திருப்பது பொதுமக்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை அளிப்பதாக இருந்தது. புத்தாண்டை முன்னிட்டு மதுரையில் முக்கிய ஓட்டல்களில் நள்ளிரவில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. இங்கு ஆடல், பாடல், இசை முழக்கங்களுடன் அமர்க்களமாக இருந்தது. போலீஸ் கட்டுப்பாடு கடுமையாக்கப்பட்டதால் புத்தாண்டு கொண்டாட்டங்களில் கலாச்சார சீரழிவுகள், அத்துமீறல்கள் பெரும்பாலும் தடுக்கப்பட்டு இருந்ததை காண முடிந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து