முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

67 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்: முதல்வர் தொடங்கி வைத்தார்

செவ்வாய்க்கிழமை, 24 பெப்ரவரி 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை - தமிழகம் முழுவதும் 67 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் துவக்கிவைத்தார்.

இது குறித்து அரசு வெளியிடுள்ள செய்தி குறிப்பு வருமாறு:-

தமிழக முதல்வர் ஒ.பன்னீர்செல்வம்  சென்னை, திருவான்மியூர், அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில்  வளாகத்தில் வில்வ மரக்கன்றினை நட்டு, தமிழகம் முழுவதும் 67 லட்சம் மரக்கன்றுகள் நடும் மரம் நடும் திட்டத்தினைத் துவக்கி வைத்தார். நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வாகனப் பெருக்கம் போன்ற காரணங்களினால் சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுத்து  சூழலியல் சமன்பாட்டினை நிலைநிறுத்தவும், வனம் மற்றும் மரங்களின் பரப்பை அதிகரித்து, தமிழகத்தின் பசுமைப் போர்வையை மேம்படுத்தும் உன்னத நோக்கில், வனப்பகுதிகளில் மட்டுமின்றி, வனத்திற்கு வெளியே இருக்கும் காலியிடங்களிலும் அதிக எண்ணிக்கையில் மரக்கன்றுகளை நட்டு வளர்த்திடும் வகையில் மாபெரும் மரம் நடும்"" திட்டத்தைச் செயல்படுத்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, கடந்த 23.2.2012 அன்று ராஜாஜி சாலையில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சி பூங்காவில் ஆலமரக்கன்றினை நட்டு தமிழ்நாடு முழுவதும் 64 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தையும், 20.2.2013 அன்று சென்னை கடற்கரை சாலையிலுள்ள நீச்சல் குளத்திற்கு அருகில் ஆலமரக்கன்றினை நட்டு  மாநிலம் முழுவதும் 65 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தினையும், 21.2.2014 அன்று மயிலாப்பூர், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலக வளாகத்தில் ஆலமரக்கன்றினை நட்டு தமிழ்நாடு முழுவதும் 66 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தினையும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்.

இந்த திட்டத்திற்கு பல்வேறு தரப்பினரிடையே மிகுந்த வரவேற்பு உள்ளதால், இந்த ஆண்டு வனத்துறையின் சார்பில் 53 கோடியே 72 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், மாவட்டத்திற்கு 2 லட்சத்து 9 ஆயிரத்து 375 மரக்கன்றுகள் வீதம், தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 67 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நேற்று சென்னை, திருவான்மியூர், அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில்  வளாகத்தில் வில்வ மரக்கன்றினை நட்டு துவக்கி வைத்தார்.

மேலும், மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் அமைச்சர்கள் தமிழ்நாடு அரசின் வனத் துறை சார்பில் இந்த மாபெரும் மரம் நடும் திட்டத்தின் கீழ் இன்று வில்வ மரக்கன்றுகளை நட்டார். இன்று தொடங்கப்பட்டுள்ள இந்த 67 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணியானது இவ்வாண்டு டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கப்படும். மேலும், இம்மரக்கன்றுகள் வனப் பகுதிகளிலும், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும், அரசு மற்றும் தனியார் அலுவலக வளாகங்களிலும், சாலையோரங்களிலும், பூங்காக்களிலும், நடப்பட்டு பராமரித்துப் பாதுகாக்கப்படும். இத்திட்டத்தின் கீழ் ஆலம், அரசம், பாதாம், புன்னை, மகிழம், சிவகுண்டலம், பூவரசு, பாறை, நாவல், வில்வம் உள்ளிட்ட வறட்சியை தாங்கக்கூடிய  பல்வேறு  மரக்கன்றுகள் நடப்படும்.

இந்த  மரம் நடும் திட்ட துவக்க  நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் ஞானதேசிகன், சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை முதன்மைச் செயலாளர்  ஹன்ஸ் ராஜ் வர்மா,  சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் சுந்தரவல்லி, முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் வினோத் குமார் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை ஆணையர் தனபால்,மற்றும்  அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து