முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி கோவில் உண்டியலில் 17 ஆயிரம் துணிகர திருட்டு

திங்கட்கிழமை, 23 மார்ச் 2015      ஆன்மிகம்
Image Unavailable

திருமலை - திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியல் பணத்தை திருடிய ஆசாமி சிக்கினார். பலத்த பாதுகாப்புகளை மீறி நடந்துள்ள இந்த சம்பவம் பக்தர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆந்திரா, தெலுங்கானா, தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வெளிநாடுகளை சேர்ந்த பக்தர்கள் தினமும் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். விசேஷ நாட்கள், விடுமுறை நாட்களில் பக்தர்கள் மணிக்கணக்கில் காத்திருந்து தரிசனம் செய்கின்றனர்.

அவ்வாறு தரிசனம் செய்யும் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனாக கோயிலில் உள்ள பிரதான உண்டியலில் காணிக்கை செலுத்துகின்றனர். இது தவிர கோயில் பகுதியில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள மொபைல் உண்டியல்களிலும் ஏராளமான பக்தர்கள் காணிக்கை செலுத்தி வருகிறார்கள். உண்டியல் மற்றும் பக்தர்களை பாதுகாக்கும் வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமிராக்களும் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சுவாமியை தரிசனம் செய்ய நேற்று அதிகாலை 5 மணியளவில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்தனர். அப்போது இலவச தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்ய வந்த ஆசாமி ஒருவர் கூட்ட நெரிசலை பயன்படுத்தி உண்டியலில் பணம் செலுத்துவது போல் கைவிட்டு அதில் இருந்த காணிக்கை பணத்தை திருடியுள்ளார்.

இந்த காட்சிகள் கோயிலில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராக்களில் பதிவானது. இதை பார்த்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றி தகவலறிந்த உதவி பாதுகாப்பு கண்காணிப்பு அலுவலர் கிரிதர் தலைமையிலான அதிகாரிகள் பதிவான காட்சிகளை வைத்து உண்டியலில் திருடிய நபரை அதிரடியாக மடக்கி பிடித்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் சித்தூர் மாவட்டம் ராமகுப்பத்தை சேர்ந்த சுதாகர் நாயுடு என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து உண்டியலில் திருடப்பட்ட காணிக்கை பணம் ரூ. 17 ஆயிரத்து 300ஐ அதிகாரிகள் மீட்டனர். இது குறித்து உதவி பாதுகாப்பு கண்காணிப்பு அலுவலர் கிரிதர், திருமலை குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சுதாகர் நாயுடுவை கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து