முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடல் பகுதியை கண்காணிக்கும் தொழில்நுட்ப சேவை: மத்திய அமைச்சர் துவக்கினார்

வியாழக்கிழமை, 16 ஏப்ரல் 2015      அரசியல்
Image Unavailable

சென்னையை அடுத்த எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் ‘கப்பல் போக்குவரத்து மேலாண்மை அமைப்பு (வி.டி.எம்.எஸ்)’ எனும் புதிய தொழில்நுட்ப சேவையின் தொடக்க விழா நடந்தது. விழாவில், மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் கப்பல்துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, இந்த புதிய சேவையை தொடங்கி வைத்தார்.

துறைமுகத்தில் நங்கூரம் இடும் பகுதிகள், பிற பகுதிகள், சேவைகள் உள்ளிட்ட அனைத்து விதமான பணிகளும், 30 கி.மீ.க்கு உட்பட்ட கப்பல் அசைவுகளும் இந்த சேவையின் மூலம் இனி தீவிரமாக கண்காணிக்கப்படும். துறைமுக பகுதியில் ஏற்படும் ஆரம்ப கால எண்ணை கசிவினையும் இனி கண்டறிய முடியும். இதற்காக மிக உயர் அதிர்வெண் தொடர் அமைப்பு கொண்ட கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. தவிர, இயற்கை சீற்றங்கள் ஏற்படுவது குறித்து முன்கூட்டியே இந்த சேவையின் மூலம் அறியலாம். இந்த புதிய சேவை ரூ.14.10 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது.

விழாவில், எண்ணூர் காமராஜர் துறைமுக தலைவர்-மேலாண்மை இயக்குனர் எம்.ஏ.பாஸ்கராச்சார், பொது மேலாளர் (கடல்சார் சேவைகள்) கேப்டன் ஏ.கே.குப்தா, இயக்குனர் (செயல்) சஞ்சய்குமார், சென்னை துறைமுக பொறுப்பு கழக தலைவர் அதுல்யா மிஸ்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவில்,அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-–

இந்தியாவில் முக்கியமானதும், பெரியதுமான துறைமுகங்களில் எண்ணூர் காமராஜர் துறைமுகமும் ஒன்று. இந்தியாவில் உள்ள 12 துறைமுகங்களில், எண்ணூர் காமராஜர் துறைமுகம் மட்டுமே தனியார் மூலம் செயல்பட்டு வருகிறது. மற்ற துறைமுகங்களுக்கெல்லாம் சவால் அளித்திடும் வகையில் இந்த துறைமுகம் செயல்பட்டு வருகிறது.
கப்பல்கள் நிறுத்தப்படும் இடங்கள் தற்போது 2-ல் இருந்து 6-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், 2 கப்பல் நிறுத்தும் இடங்கள் அதிகரிக்கப்பட முயற்சி நடந்து வருகிறது. கடந்தாண்டை காட்டிலும் சரக்கு கையாளுகை 10 சதவீதம் உயர்ந்துள்ளது. துறைமுகம் நன்றாக இயங்கி வருகிறது.

தற்போது, தொடங்கப்பட்டுள்ள வி.டி.எம்.எஸ். சேவை மிகவும் முக்கியமான, இந்த காலகட்டத்துக்கு தேவையானதாகும். கதிரலை கருவி, அதி நவீன கேமரா மூலம் கடலில் மிகப்பெரிய பரப்பளவு எல்லைகளை இந்த கருவி துல்லியமாக படமெடுக்கும் சக்தி கொண்டது. கடலில் எண்ணை கசிவு ஏற்படுவது என்பது நமக்கு மிகப்பெரிய தலைவலியாகவே இருந்துவந்தது. ஆனால், இந்த சேவையின் மூலம் இனி கடலில் ஆரம்பகட்ட எண்ணை கசிவு கண்டறியப்படுவதுடன், எந்த கப்பலில் இருந்து எண்ணை கசிவு ஏற்படுகிறது என்பதையும் கண்டறிய முடியும்.இதன் மூலம் கடல் மாசுபடுவதை தடுப்பதுடன், கசிவு ஏற்படுத்தும் கப்பல்கள் கண்டறியப்பட்டு உரிய இழப்பீடும் பெற முடியும். மேலும், கடலில் வருகிற கப்பல்களில் என்ன சரக்கு இருக்கிறது? எவ்வளவு இருக்கிறது? என்பதையும் அறியலாம். இதன் மூலம் வேலை எளிதாக்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்பான செயல்பாட்டில் நாட்டின் அனைத்து துறைகளுமே முன்னேறி வருகிறது.இவ்வாறு அவர் பேசினார்.

இந்த சேவை குறித்து துறைமுகத்தின் பொது மேலாளர் (கடல்சார் சேவைகள்) கேப்டன் ஏ.கே.குப்தா கூறியதாவது:-–

வி.டி.எம்.எஸ். என்பது கதிரலை கருவி (ரேடார்), சி.சி.டி.வி., ஏ.ஐ.எஸ்., வானிலை ஆய்வு ஆகியவை உள்ளடங்கிய ஒருங்கிணைந்த சேவையாகும். இதில் உள்ள கருவிகள் துறைமுகம் மற்றும் அருகிலுள்ள கடலோரங்களில் கப்பல்களின் இயக்கத்தை ஒட்டுமொத்தமாக படமாக எடுத்து வழங்கும். கப்பல்களை சரியான கப்பல் தளங்களில் நிறுத்துதல், ஆழமற்ற கடல் பகுதிகளில் பயணிப்பதையும் தடுக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து