முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை தல்லாகுளத்தில் விடிய விடிய கள்ளழகருக்கு எதிர்சேவை நடந்தது

ஞாயிற்றுக்கிழமை, 3 மே 2015      ஆன்மிகம்
Image Unavailable

மதுரை, மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான எதிர்சேவை தல்லாகுளத்தில் விடிய விடிய நடந்தது. பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்தவாறு இன்று அழகர் ஆற்றில் இறங்குகிறார்.

மதுரையில் நடைபெறும் சித்திரை திருவிழா சைவ,வைணவ ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் நடத்தப்படுகிறது. இதையொட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் 12 நாட்கள் இவ்விழா கோலாகலமாக நடைபெற்றது. அழகர் கோவிலில் இருந்து கள்ளழகர் நேற்று முன்தினம் மாலை மூலஸ்தானத்தில் இருந்து மேற்கு புறத்தில் உள்ள தாயார் சன்னதி அருகே தங்க பல்லக்கில் எழுந்தருளினார். பின்னர் பதினெட்டாம்படி கருப்பணசாமி மண்டபத்தில் இருந்து வானவேடிக்கை முழங்க மதுரை நோக்கி புறப்பாடாகினார். அப்போது பக்தர்கள் சூட தீபாராதனை காட்டி வணங்கி வழியனுப்பி வைத்தனர். அவருடன் பல பக்தர்கள் கள்ளழகர் வேடமணிந்து பின்தொடர்ந்து வந்தனர். வழிநெடுக இருந்த மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தபடி நேற்று மதுரை மூன்றுமாவடிக்கு காலை 7 மணிக்கு வந்த அவருக்கு எதிர்சேவை அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கள்ளழகரை எதிர்கொண்டு வரவேற்றனர். அங்கு கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என பக்தி கோஷமிட்டு சூட தீபாராதனை காட்டி வழிபட்டனர். அதன்பிறகு மதுரை சர்வேயர் காலனி, ரிசர்வ் லைன் உட்பட பல மண்டகப்படிகளில் எழுந்தருளி இரவு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலுக்கு வந்தார். அங்கு கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். அப்போது அவருக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடி கொடுத்த மாலை சாத்தப்பட்டது. பின்னர் சிறப்பு பட்டாடை அணிந்து கருப்பண சுவாமி திருக்கோவில் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளினார். அதன்பிறகு இன்று அதிகாலை அங்கிருந்து புறப்பட்டு கோரிப்பாளையம் வழியாக பக்தர்கள் வெள்ளத்தில் ஆழ்வார்புரம் வந்து வைகை ஆற்றில் இறங்குகிறார். அப்போது அங்கு கூடி நிற்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் செம்பு பாத்திரத்தில் தீபமேற்றி வழிபடுவார்கள். அங்கு பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து