முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் ஜெயலலிதா அறிவுறுத்தலின் பேரில் கேரள அரசின் புதிய அணை கட்ட தடை கோரி தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு

புதன்கிழமை, 1 ஜூலை 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை: முல்லைப் பெரியாறு பகுதியில் புதிய அணை கட்ட கேரள அரசு மேற்கொள்ளும் முயற்சியை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என, முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில், தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் கூடுதல் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.  முதலமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்ட சட்டப்போராட்டங்களின் பயனாக, முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை முதற்கட்டமாக 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்திக் கொள்ள உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை செயல்படுத்த மேற்பார்வைக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவை மீறி முல்லைப்பெரியாறு பகுதியில் புதிய அணைகட்ட கேரள அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கு தடை விதிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் ஏற்கெனவே மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சர் ஜெயலலிதா அறிவுறுத்தலின்படி, தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில் கடந்த மே மாதம் 7-ம் தேதி மேலும் ஒரு மனு தாக்கல் செய்தது.

கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் 7-ம் தேதி உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில், தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல், முல்லைப்பெரியாறு அணை பகுதியில் புதிய கட்டுமானம் எதையும் கேரள அரசு மேற்கொள்ளக்கூடாது என உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசின் புதிய மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த உத்தரவை எதிர்த்து கேரள அரசு, உச்சநீதிமன்றத்தில் மறுஆய்வு மனு ஒன்றை 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தாக்கல் செய்ததாகவும், அதுவும் நிராகரிக்கப்பட்ட நிலையில், முல்லைப்பெரியாறு பகுதியில் புதிய அணை கட்டுவதற்கான ஆரம்பகட்ட பணிகளை கேரள அரசு கடந்த மே மாதம் 2-ம் தேதி தொடங்கியிருப்பதாகவும், அதுகுறித்த செய்தி, கடந்த மே மாதம் 4-ம் தேதி வெளியாகியிருப்பதாகவும், இது உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறிய செயல் என்றும் தமிழக அரசின் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

எனவே, தமிழக அரசின் ஒப்புதலின்றி முல்லைப்பெரியாறு பகுதியில் கேரள அரசு, எந்தவொரு கட்டுமானப் பணியையும் மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும் என தமிழக அரசு தாக்கல் செய்துள்ள புதிய மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது.  இந்நிலையில் முல்லைப்பெரியாறில் புதிய அணை கட்டும் கேரளாவின் முயற்சிக்கு, தடை விதிக்கக்கோரி முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில் தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் நேற்று கூடுதல் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து