முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் முதலிடம் 21 மாணவர்களுக்கு ரூ 10.50 லட்சம் ஊக்கத்தொகை ஜெயலலிதா பரிசளித்து பாராட்டினார

புதன்கிழமை, 1 ஜூலை 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை: பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாநில அளவில் முதல் இடத்தைப் பெற்ற 21 மாணவ மாணவிகளுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் 10 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் வழங்கி வாழ்த்தினார். .

தமிழகத்தில் அனைத்து மாணவ மாணவியரும் கல்வியில் சிறந்து விளங்கிடவும், சமுதாயத்தில் உயர்ந்த நிலையை எய்திடவும், கல்வி கற்பதற்கு வறுமை ஒரு தடையாக இருக்கக் கூடாது என்ற உயரிய நோக்கிலும் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு கட்டணமில்லா கல்வி, கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள், விலையில்லா மிதி வண்டிகள், சீருடைகள், பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், மடிக்கணினி, கல்வி உபகரணப் பொருட்கள், காலணிகள், இடைநிற்றலைக் குறைக்க ஊக்கத் தொகை போன்ற பல்வேறு ஆக்கபூர்வமான திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

முதல்வர் ஜெயலலிதா வழிகாட்டுதலின் பேரில், தேவைக்கேற்ப ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு அனைத்து பள்ளிகளிலும் தரமான கல்வி வழங்கப்பட்டு வருவதால் 2015-ஆம் ஆண்டு 12-ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 90 புள்ளி ஆறு விழுக்காடு, 10-ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 92.9 விழுக்காடு என தேர்ச்சி சதவீதத்தில் சாதனை படைக்கப்பட்டுள்ளது - மேலும், தமிழ்நாட்டில் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு பள்ளிகளில் பயின்ற மூன்று மாணவ - மாணவியர் முதல் இடத்தையும், ஆறு மாணவியர் இரண்டாம் இடத்தையும் பத்து மாணவ - மாணவியர் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

பள்ளிக் கல்வித் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை, வனத்துறை ஆகிய துறைகளால் நடத்தப்படும் பள்ளிகளில் பயின்று 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகளில் தமிழை ஒரு மொழிப் பாடமாகக் கொண்டு மாநில அளவில் 72 மாணவ - மாணவியர் முதலிடத்தையும், 216 மாணவ - மாணவியர் இரண்டாம் இடத்தையும், 710 மாணவ - மாணவியர் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

ஆண்டுதோறும் 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பில் தமிழை ஒரு மொழிப் பாடமாகக் கொண்டு அரசு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்களைப் பெற்று, மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவ - மாணவியர்களுக்கு காசோலைகள், பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி, அவர்களின் மேற்படிப்புகளுக்கான செலவினையும் தமிழ்நாடு அரசே ஏற்றுக் கொள்கிறது.

முதல்வர் ஜெயலலிதா சமூக பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் அரசு குழந்தைகள் இல்லம் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நடத்தும் சிறுவர் இல்லங்களில் தங்கிப் பயிலும் மாணாக்கர்களுக்குள் 12-ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் மாநில அளவில் முதல் இடத்தைப் பெறும் மாணவ, மாணவிகளுக்கும் இந்த ஆண்டு முதல் 50 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். மேலும், 12-ஆம் வகுப்பில் தமிழை ஒரு மொழிப் பாடமாகக் கொண்டு அரசு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்களைப் பெற்று மாநில அளவில் முதல் இடம் பெறும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ 10 ஆயிரம் என இதுவரை வழங்கப்பட்டு வந்ததையும், சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறையின் கீழ் இயங்கும் அரசு குழந்தைகள் காப்பகங்கள் மற்றும் அரசு சேவை இல்லங்கள் ஆகியவற்றில் பயின்ற மாணவ - மாணவிகளுக்கு தலா ரூ 6 ஆயிரம் என இதுவரை வழங்கப்பட்டு வந்ததையும் உயர்த்தி, இந்த மாணவ - மாணவிகளுக்கும் பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாநில அளவில் முதலிடம் பெறும் மாணவ - மாணவிகளுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படுவதைப் போல, இந்த ஆண்டு முதல் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகள், சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறையின் கீழ் இயங்கும் குழந்தைகள் காப்பகங்கள் மற்றும் அரசு சேவை இல்லங்களில் தமிழை, ஒரு மொழிப் பாடமாகக் கொண்டு பயின்று 12-ஆம் வகுப்புத் தேர்வில் முதல் இடம் பெறும் மாணவ, மாணவிகளுக்கும் பரிசுத் தொகையாக தலா ரூ 50 ஆயிரம் வழங்கப்பட வேண்டுமென்று முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, 2014-2015ஆம் கல்வியாண்டில், 12-ஆம் வகுப்பில் தமிழை ஒரு மொழிப் பாடமாகக் கொண்டு அரசு பொதுத் தேர்வில் மாநில அளவில் முதல் இடத்தைப் பெற்ற 2 மாணவிகளுக்கு பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் தலா 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகள்;

பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்குள் மாநில அளவில் முதல் இடத்தைப் பெற்ற 4 மாணவர் மற்றும் 4 மாணவிகளுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகள்;

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்குள் மாநில அளவில் முதல் இடத்தைப் பெற்ற 2 மாணவிகள் மற்றும் ஒரு மாணவருக்கு தலா 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகள்;

மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் கீழ் இயங்கும் பார்வையற்றோருக்கான பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்குள் மாநில அளவில் முதல் இடத்தைப் பெற்ற ஒரு மாணவன் மற்றும் செவித்திறன் குறைந்தோருக்கான பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்குள் மாநில அளவில் முதல் இடம் பெற்ற ஒரு மாணவி ஆகியோருக்கு தலா 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகள்;

சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறையின் கீழ் இயங்கும் அரசு குழந்தைகள் காப்பகங்கள் மற்றும் அரசு சேவை இல்லங்களில் பயிலும் மாணாக்கர்களுக்குள் மாநில அளவில் முதல் இடத்தைப் பெற்ற 2 மாணவிகளுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகள்;

சமூகப் பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் அரசு குழந்தைகள் இல்லம் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நடத்தும் சிறுவர்கள் இல்லங்களில் தங்கிப் பயிலும் மாணாக்கர்களுக்குள் மாநில அளவில் முதல் இடத்தைப் பெற்ற ஒரு மாணவர் மற்றும் ஒரு மாணவிக்கு தலா 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகள்;

வனத்துறையின் கீழ் இயங்கி வரும் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்குள் மாநில அளவில் முதல் இடத்தைப் பெற்ற ஒரு மாணவி மற்றும் ஒரு மாணவருக்கு தலா 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகள்;

என 12-ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் மாநில அளவில் முதல் இடத்தைப் பெற்ற 21 மாணவ மாணவிகளுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் 10 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் வழங்கி வாழ்த்தினார்.

இந்த நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி. வீரமணி, தலைமைச் செயலாளர் கு.ஞானதேசிகன், தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் . சபிதா, ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து