முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக ஹஜ் பயணிகளுக்கு கூடுதல் இடம் ஒதுக்குங்கள்: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

ஞாயிற்றுக்கிழமை, 5 ஜூலை 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை: இந்த ஆண்டு தமிழகத்தில் இருந்து ஹஜ் பயணம் செய்ய விரும்பி விண்ணப்பித்துள்ளவர்களுக்கு கூடுதல் இடம் ஒதுக்கக் கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து அவர் பிரதமர் மோடிக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் இருந்து இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள 15,032 பேர் ஹஜ் கமிட்டியிடம் விண்ணப்பம் செய்தனர். ஆனால் மும்பையில் உள்ள இந்திய ஹஜ் கமிட்டி தமிழ்நாட்டில் இருந்து இந்த ஆண்டு 2,585 பேருக்கு மட்டுமே ஹஜ் யாத்திரைக்கு ஒதுக்கீடு செய்து கொடுத்துள்ளது. ஹஜ் 2015 வழிகாட்டு விதிமுறைகளின்படி முன்பதிவு அடிப்படையில் 1699 ஹஜ் பயணிகள் தேர்வானார்கள். பொதுப்பிரிவில் 886 பேர் தேர்ந்து எடுக்கப்பட்டனர். மற்றவர்கள் தேர்வு செய்யப்படவில்லை. இதனால் ஹஜ் பயணத்துக்கு விண்ணப்பித்தவர்களில் 12 ஆயிரம் பேர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

முந்தைய ஆண்டுகளில் மத்திய அரசு கூடுதல் இடங்களை ஒதுக்கீடு செய்தது. இதனால் தமிழ்நாட்டில் இருந்து நிறைய பேர் ஹஜ் பயணம் செல்ல முடிந்தது. 2013-ம் ஆண்டு 3,696 பேரும், 2014-ம் ஆண்டு 2,858 பேரும் ஹஜ் பயணம் மேற்கொண்டனர். இந்த ஆண்டு தமிழ்நாட்டில் இருந்து ஹஜ் பயணம் செல்ல கூடுதல் இடங்கள் ஒதுக்கீடு செய்து தர வேண்டும் என்று வெளியுறவு அமைச்சகத்தை மத்திய அரசு கேட்டுக் கொள்ள வேண்டும்.  இவ்வாறு பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு ரம்ஜான் நோன்பு கஞ்சி தயாரிக்க அரிசி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். தற்போது ஹஜ் பயணத்துக்கு கூடுதல் இடம் ஒதுக்கக் கோரி பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். ஆக சிறுபான்மை இனத்தவர்க்காக அனைத்து நன்மைகளையும் ஜாதி மத பேதம் பார்க்காமல் முதல்வர் ஜெயலலிதா செய்து வருகிறார். அதனால் அவரை மத நல்லிணக்கத்தின் பேரரசி என்று ஆன்மீகத் தலைவர்களும் புகழ்கிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து