முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்கள் மன்றத்தின் மகாராணி முதல்வர் ஜெயலலிதா மேயர் சைதை துரைசாமி பாராட்டு

திங்கட்கிழமை, 6 ஜூலை 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை: முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நாளுக்கு நாள் செல்வாக்கு பெருகி வருகிறது. மக்கள் மன்றத்தின் மகாராணியாக ஜெயலலிதா இருக்கிறார் என்று சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் மேயர் சைதை துரைசாமி கூறினார். ஆர்.கே. நகர் தொகுதியில் வெற்றி 2016 சட்டமன்ற தேர்தலிலும் தொடரும் என்று அவர் கூறினார். சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மேயர் சைதை துரைசாமி பேசியதாவது:–

நீதிமனறத்தில் சூதுமதியாளர் பின்னிய சூழ்ச்சி வலையை அறுத்தெறிந்து, நேர்மையை நிலை நிறுத்தி, நியாயத்தை வென்றெடுத்து நீதி என்னும் வேள்வியில் புடம் போட்ட தங்கமாய் மிளிரும் நமது முதலமைச்சர், எனது கடவுள் புரட்சித்தலைவி அம்மா, இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வகுத்துத்தந்துள்ள விதிமுறைகளின்படியும், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படியும், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு, மக்களை சந்தித்தார்.

மக்கள் மன்றத்தில், மக்கள் அன்பிலே நீந்தி மக்களின் பாசத்தை ஏந்தி மக்கள் ஆதரவை முழுமையாகப் பெற்று மக்கள் நம்பிக்கையை வென்றெடுத்திருக்கிறார். இந்திய தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் எந்த அரசியல் வரலாறும் இதுவரை கண்டிராத வகையில் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் எதிர்த்துப் போட்டியிட்ட அத்தனை பேரையும் டெபாசிட் இழக்கச் செய்து இதுவரை இந்தியா கண்டிராத இமாலய சாதனை வெற்றியைப் பெற்று ஒரு புதிய சரித்திரத்தை முதலமைச்சர் அம்மா படைத்திருக்கிறார்.

டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் அம்மாவை எதிர்த்துப் போட்டியிட்டால் நிச்சயத் தோல்வி என்பது மட்டுமல்ல; டெபாசிட்டே காலி என்பதை உணர்ந்துகொண்ட கருணாநிதி, நீதித்துறையையும் தேர்தல் ஆணையத்தையும் கொச்சைப்படுத்தி அறிக்கை வெளியிட்டு, தேர்தல் புறக்கணிப்பு நாடகத்தை அரங்கேற்றினார். டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழகத்திற்கே ஒப்பில்லாத தலைவர் எங்கள் அம்மாதான்.- தமிழ்நாட்டில் என்றென்றும் அம்மாவின் ஆட்சிதான் என்று, சரித்திரம் காணாத வாக்கு வித்தியாத்தில் வெற்றி பெறச் செய்து 2016ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு ஒரு கட்டியம் சொல்லி இருக்கிறார்கள், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி வாக்காளப் பெருமக்கள்!

அம்மா பெற்ற இந்த மகத்தான வெற்றியை தமிழகமே கொண்டாடுகிறது. அம்மாவின் மக்கள் செல்வாக்கைக் கண்டு உலகமே வியந்து பாராட்டுகிறது. ஆனால் இங்குள்ள சில எதிர்க்கட்சிகள் மட்டும் மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள மறுத்து வித விதமான பொய்களை விற்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். அம்மாவின் மக்கள் செல்வாக்கை மாற்ற வழியில்லையே என்று தங்களுக்குள்ளேயே அழுது புலம்பி மருண்டு மயங்கி நீதிமன்ற தீர்ப்பையும் விமர்சிக்கின்றார்கள்; மக்கள் மன்றத் தீர்ப்பையும் விமர்சிக்கிறார்கள்; மக்களை மக்களே ஆளும் ஜனநாயகத்தில், மக்கள் மன்றமும் நீதிமன்றமும்தான் தலையாய மாமன்றங்கள் ஆகும்.

அதனால் தான் நீதிமன்றங்களின் தீர்ப்பை நீதி தேவதையின் தீர்ப்பு என்றும், மக்கள் மன்றத்தின் தீர்ப்பை மகேசன் தீர்ப்பு என்றும் போற்றுகிறார்கள். இப்படி மக்கள் மதிக்கின்ற, மக்களின் மரியாதையைப் பெற்றுள்ள நீதிமன்றமானாலும் சரி, மக்கள் மன்றமானாலும் சரி, வழங்குகின்ற எந்த தீர்ப்பானாலும் தங்களுக்கு ஆதரவான தீர்ப்பு என்றால் சரி என்கிறார்கள், பாராட்டுகிறார்கள்! தங்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக வழங்கப்படுகின்ற நியாயமான தீர்ப்பை ஏற்றுக்கொள்ள மனமின்றி உண்மை நிலையை திரித்து மனம் போன போக்கில் விமர்சிக்கிறார்கள்.

தன்மீது கருணாநிதி போட்ட 11 பொய் வழக்குகளையும் நீதிமன்றங்களில் நேருக்கு நேர் சந்தித்து பொய் வழக்குகளை பொடிப்பொடியாக்கி நீதியை நிலைநாட்டிய புனித தலைவி எங்கள் அம்மா. அதைப் போலவே மக்கள் மன்றமும் கடந்த 2011ம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தலில் அம்மாவை முதலமைச்சராக்கி, அண்ணா தி.மு.க.விற்கு அறுதிப் பெரும்பான்மையுடனான வெற்றியை அளித்தார்கள். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலிலும்,நடைபெற்ற திருச்சி (கிழக்கு), சங்கரன்கோயில், புதுக்கோட்டை, ஏற்காடு, ஸ்ரீரங்கம், ஆலந்தூர் சட்டமன்ற இடைத் தேர்தல்களிலும், தொடர்ந்து நடைபெற்ற தூத்துக்குடி, திருநெல்வேலி, கோயம்பத்தூர் மாநகராட்சி மற்றும் பிற உள்ளாட்சி இடைத் தேர்தல்களிலும், அம்மாவுக்கே மக்கள் வெற்றிக் கனிகளை பரிசாகத் தந்தார்கள்.

அதன்பின் 2014ம் ஆண்டு, நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில், எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லாது தனித்துப் போட்டியிட்டு, 39ல் 37 இடங்களில் வெற்றி பெற்று தமிழகம் இதுவரை காணாத மகத்தான வெற்றியை அம்மாவுக்கு மக்கள் அளித்தார்கள். இப்போது டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலிலும் போட்டியிடும் துணிவில்லாத திமுகவையும் மற்ற கட்சிகளையும் நிராகரித்தும், போட்டியிட்ட கம்யூனிஸ்ட்டுக்கு படுதோல்வியைத் தந்தும், மக்கள் மன்றம் மகத்தான வெற்றியை அம்மாவுக்கு வழங்கியுள்ளது.

அம்மாவின் செல்வாக்கு நாளுக்கு நாள் பெருகி வருகிறது என்பதை ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் வாக்குப்பதிவு அன்று கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆர்வத்துடன் காலை முதல் மாலை வரை வரிசையாக நின்று வாக்களித்ததை படம்பிடித்து அனைத்து செய்தி ஊடகங்களும் மக்களின் எழுச்சியை செய்தியாக வெளியிட்டன. அதற்குப் பிறகும் மக்கள் தந்த அந்த தீர்ப்பினை கொச்சைப்படுத்தும் நோக்கத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் எதிர்கட்சிகளுக்கு மீண்டும் மக்கள் 2016ல் தக்க பாடம் புகட்டுவார்கள். இது சத்தியம்.

அம்மாவின் அருமை பெருமைகளை, ஆற்றல் சிறப்புகளை, அறிவுத் திறமைகளை மக்கள் நன்கு புரிந்து கொண்டிருக்கிறார்கள்.
அந்தப் புரிதலின் நிரூபணம்தான் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகரில் அம்மாவுக்கு மக்கள் அளித்த மகத்தான வெற்றி! வீழ்ந்து விட்டார் அம்மா, இனி நாம் வாழ்ந்துவிடலாம் என்று எண்ணி இறுமாந்திருந்த திமுகவின் உச்சந்தலையில் ஆணி அடித்து, மக்கள் ஏமாந்து நிற்கும் வேளையில் ஏற்றம் பெற்றுவிடலாம் என்று பூரித்துக் கிடந்த பிற அரசியல் கட்சிகளையும் கை கட்டி வாய்ப்புதைத்து மக்கள் மன்றத்திலே நிற்க வைத்த மக்கள் மன்றத்தின் மகாராணி, 2016ம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கு முன்னோட்டமே இந்த மாபெரும் வெற்றி என்று தமிழகமே கொண்டாடும் மகத்தான வெற்றியை ஈட்டித்தந்த மக்கள் இதயங்களை ஆளுகின்ற பேரரசி தமிழ்த்தாயின் தவப்புதல்வி தமிழகத்தின் விடிவெள்ளி முதலமைச்சர் அம்மாவுக்கு சென்னை மாநகராட்சி தனது இதயமார்ந்த பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும், வணக்கத்தையும் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு மேயர் சைதை துரைசாமி கூறினார். அப்போது மாமன்ற உறுப்பினர்கள் மேஜையில் தட்டி பலத்த ஆரவாரம் செய்தார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து