முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் ஜெயலலிதாவின் அரசுக்கு களங்கம் ஏற்படுத்த மதுவிலக்கு மூலம் அரசியல் ஆதாயம்தேட எதிர்கட்சிகள் முயற்சி அமைச்சர் நத்தம் விசுவநாதன் குற்றச்சாட்டு

செவ்வாய்க்கிழமை, 4 ஆகஸ்ட் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஆக 04, தமிழகத்தில் அ.தி.மு.கவின் செல்வாக்கு மக்கள் மத்தியில் அதிகரித்து கொண்டே செல்வதை கண்டு பொறுத்து கொள்ள முடியாமலும் முதல்வர் ஜெயலலிதாவின் அரசுக்கு களங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் மதுவிலக்கு என்ற ஆயுதத்தின் அரசியல் ஆதாயம் தேட எதிர்கட்சிகள் முனைந்துள்ளது என்று அமைச்சர் நத்தம் விசுவநாதன் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து மின்சாரம்,மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் நேற்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, மதுவின் ஊற்றுக்கண்ணாக விளங்கும் திமுக தாங்கள் ஆளும் மாநிலங்களில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தாத பாரதி ஜனதா மற்றும் காங்கிரஸ் , மதுவின் துணைக்கொண்டு மாநாடுகள் மற்றும் கூட்டங்களை நடத்திக்கொண்டிருக்கும் உதிரிகட்சிகள் யெல்லாம் இன்று மதுவிலக்கு குறித்து பேசுவதும், இதற்காக சில அரசியல் கட்சிகள் 4.8.2015 அன்று தமிழ்நாட்டில் பந்த் நடத்தப்போவதாக அறிவித்திருப்பதும் சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களது தலைமையிலான அரசு நிகழ்த்தி வரும் சாதனைகள் மற்றும் திட்டங்கள் காரணமாக அனைத்திந்திய அண்ணா முன்னேற்ற கழகத்தின் செல்வாக்கு அதிகரித்து கொண்டே இருப்பதை கண்டு பொறுத்து கொள்ள முடியாமல் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அரசுக்கு களங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் எதை ஆயுதமாக பயன்படுத்தலாம் என்று ஆழ்ந்து யோசித்து மதுவிலக்கு என்ற ஆயுதத்தின் மூலம் அரசியல் ஆதாயம் தேட எதிர்கட்சிகள் முனைந்துள்ளன என்பது அவற்றின் போக்கிலிருந்து தெள்ளத்தெளிவாகிறது.

மதுவிலக்கு என்பது அரசின் கொள்கை வரையறைக்கு உட்பட்டது. வன்முறை போராட்டங்கள் மூலம் அரசின் கொள்கைகள் நிர்ணயிக்கப்படுவதில்லை. இது அனைத்து எதிர்கட்சிகளுக்கும் நன்றாக தெரியும். எனவே தான் மதுவிலக்கு அமுல்படுத்தபட வேண்டும் என்றும் கூறும் அதே நேரத்தில் மதுவிலக்கை உடனடியாக அமுல்படுத்த முடியாது என்றும் இதே தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர். அப்படியெனில் பந்த் போன்ற போராட்டங்கள் மதுவிலக்கிற்காக நடத்தப்படுபவை அல்ல என்பது தெள்ளத்தெளிவாகிறது. அரசியல் ஆதாயங்களுக்காக தான் தற்போது மதுவிலக்கு பற்றி பல்வேறு கட்சிகளும் பேசி வருகின்றன.

31.7.2015 அன்று  கன்னியாகுமரி மாவட்டம் உண்ணாமலைக்கடை சந்திப்பில் அமைந்துள்ள ஒரு மதுபானக்கடையை அகற்றுவது தொடர்பாக தீக்குளிப்பு போராட்டம் நடத்த காவல் துறையிடம் மதுவிற்கு எதிரான மக்கள் இயக்கம் அனுமதி கேட்டு அந்த மனு காவல்துறையினரால் நிராகரிக்கப்பட்ட நிலையில் பாரதிய  ஜனதா கட்சியை சேர்ந்தவரும், உண்ணாமலைக்கடை பேரூராட்சி தலைவருமான திரு.ஜெயசீலன் மற்றும் திரு. சசிபெருமாள் ஆகியோர் உண்ணாமலைக்கடை சந்திப்பில் இருந்து 150 மீட்டர் தூரத்தில் தனியார் தோட்டத்தில் அமைந்துள்ள 130 அடி உயர அலைபேசி கோபுரத்தின் மீது ஏறி போராட்டம் நடத்தி உள்ளனர். அங்கு கூடியிருந்த மக்களிடம் சம்பந்தப்பட்ட கடை 7 நாட்களுக்குள்  மாற்றப்பட்டு விடும் என்ற எழுத்துப்பூர்வமான உத்தரவாதத்தை டாஸ்மாக் மேலாளர் அளித்துள்ளார். 40 அடி உயரம் வரை சென்ற திரு.ஜெயசீலன் கீழே  இறங்கிவிட்டார். சசிபெருமாள் கீழே இறக்க தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வீரர்கள் கோபுரத்தின் உச்சிக்கு சென்றபோது, அங்கே அவர் நினைவில்லாமல் இருந்தது தெரிய வந்தது. சசிபெருமாளை கீழே இறக்கி குழித்துறையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு காவல் துறையினர் கொண்டு சென்றனர். சசிபெருமாள ஏற்கெனவே இறந்து விட்டதாக அங்குள்ள மருத்துவ அதிகாரி தெரிவித்ததையடுத்து, பிரேதப் பரிசோதனைக்காக ஆசாரிபள்ளத்தில் உள்ள மருத்துவமனைக்கு சசிபெருமாளின் உடல் எடுத்துச் செல்லப்பட்டது.

சசிபெருமாளின் மரணம் வருத்தத்திற்குரியது. வேதனை அளிக்கிறது, துரதிர்ஷ்டவசமானது என்றாலும், அவர் நடத்திய போராட்டம் காந்திய வழியில் இல்லை என்பது தெள்ளத் தெளிவாகிறது. அஹிம்சை வழியிலான போராட்டங்கள் மட்டுமே ஒரு குறிக்கோளை அடைய வழிவகுக்கும். இதைத்தான் மகாத்மா காந்தி கடைபிடித்தார். ஆனால், தன்னை காந்தியவாதி என்று சொல்லிக் கொண்டு, கோபுரத்தின் உச்சியில் ஏறி தற்கொலை செய்து கொள்வேன் என்று அச்சுறுத்துவது காந்திய வழிமுறையா? இதைத் தான் இதைத் தான் தினமணி நாளிதழும், தன்னை காந்தியவாதி என்று கூறிக் கொள்ளும் ஒருவர் செல்லிடப் பேசி கோபுரத்தில் ஏறி அதன் உச்சிக்கு சென்று அமர்ந்ததும், தற்கொலை செய்து கொள்வேன் என்று அச்சுறுத்தியதும் எப்படி சரி? 60 வயதான சசிபெருமாள் 175 அடி உயர் செல்லிடப்பேசி கோபுரத்தின் உச்சியில் கடும் வெயிலில் 5 மணி நேரம் அமர்ந்து நடத்திய போராட்டம் அறப்போட்டமல்ல. காந்திய வழிமுறையும் அல்ல! மதுவிலக்கு வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த மகாத்மா காந்தி இன்று இருந்திருந்தால் சசிபெருமாள் செயலை நிச்சயமாக ஆமோதித்திருக்க மாட்டார். கண்டனம் தெரிவித்திருப்பார். போராட்டம் என்பது வெறியாக மாறிவிடக் கூடாது. காந்தியவாதியாக அறப் போராட்டம் நடத்தி வந்த சசிபெருமாள் வன்முறையாளராக மாறிவிட்டது மிகப் பெரிய சோகம் என்று தெரிவித்து இருக்கிறது.

சசிபெருமாளின் இறப்பை வைத்து அரசியல் நடத்துவது அருவருக்கத்தக்கதும், கண்டனத்திற்குரியதும் ஆகும். தமிழ்நாட்டில் 23 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த மதுவிலக்கை 1971-ம் ஆண்டு ரத்து செய்து அதன் மூலம் மதுவின் கொடிய பழக்கத்திற்கு தமிழக மக்களை ஆட்படுத்திய திமுக தலைவர் கருணாநிதி தற்போது மதுவிலக்கு பற்றி பேசுவது வேடிக்கையானதும், வினோதமானதும் ஆகும். மதுவிலக்கு பற்றி பல எதிர்க்கட்சிகள் பேசுவதைப் பார்த்து, தானும் இதில் அரசியல் ஆதாயம் தேடிக் கொள்ளலாம் என்ற நினைப்பில் தற்போது கருணாநிதி மதுவிலக்கு குறித்து பேசிக் கொண்டிருக்கிறார். ஆட்சிக் கட்டில் கனவில் உள்ள கருணாநிதி தான் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று பூசி மெழுகி, பின்னர் தற்போது முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டுமென 10.8.2015 அன்று திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று சொல்வது அரசியல் ஆதாயம் தேடுவது அல்லாமல் வேறு என்ன?
1971ம் ஆண்டில் முதறிஞர் ராஜாஜி அவர்கள் கொட்டும் மழையில் கருணாநிதியின் இல்லத்திற்கு சென்று மதுவிலக்கை ரத்து செய்ய வேண்டாம் என மன்றாடி கேட்டுக் கொண்ட போதும், அதை எடுத்தெறிந்து மதுவிலக்கை ரத்து செய்த கருணாநிதி மதுவிலக்கை பற்றி பேச ஏதேனும் அருகதை உள்ளதா? புதிய மது ஆலோகளுக்கு அனுமதி அளிப்பதில்லை என பல ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வந்த விதியை தளர்த்தி திமுக வைச் சார்ந்த இரண்டு முன்னாள் மத்திய அமைச்சர்கள் மற்றும் அவருக்கு வேண்டிய இருவர் உள்ளிட்ட ஐந்து நபர்களுக்கு புதிய மது ஆலைகளை நடத்த அனுமதி வழங்கிய கருணாநிதிக்கு மதுவிலக்கு பற்றி பேச என்ன யோக்யதை?

1996ம் ஆண்டிலிருந்து மதுவிலக்கு செயல்படுத்தப்படும் என அவ்வப்போது வாக்குறுதியை அளித்து, அவற்றை காற்றில் பறக்கவிட்டு, மக்களை ஏமாற்றிய கருணாநிதி இப்போது மதுவிலக்கை பற்றி பேசுவது அரசியல் ஆதாயத்திற்கு தான் என்பது எல்லோருக்கும் தெரியும். அரசியல் லாபத்திற்காக தான் மதுவிலக்கு பற்றி அரசியல் கட்சிகள் பேசுவதாக சில நாட்களுக்கு முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்ததை இங்கு சுட்டிக்காட விரும்புகிறேன். அவர் அன்மையில் வெளியிட்ட அறிக்கையில், மதுக்கடைகளை மூடவேண்டும் என்று கோரிக்கை வலுவாக மேலெழுந்திருக்கிறது. மக்களின் இந்த மனநிலையைப் பயன்படுத்திக் கொண்டு அரசிய்ல லாபம் அடையலாம் என்று எண்ணும் சிலர் மதுவிலக்கு மாவீரர்களாக வேடம் போடுகிறார்கள். உண்மையிலேயே அவர்கள் மக்கள் மீது அக்கறை கொண்டவர்கள்தானா என்ற ஜயம் நமக்கு எழுகிறது, என்று கூறி இருக்கிறார். மேலும், மீண்டும் மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட்டால் தற்போது இருக்கும் அரசியல் தொடர்புகளை பயன்படுத்தி முன்பு செய்ததை விட இன்னும் தீவிரமாக கள்ளச் சாராயத் தொழிலில் அவர்கள் ஈடுபடக் கூடும், என்றும் கூறியுள்ளார். அதே தொல் திருமாவளவன் தற்போது மதுவிலக்கை வற்புறுத்தி கடையடைப்புக்கு ஆதரவு தெரிவித்து இருப்பது எந்த அரசியல் நெருக்கடியின் காரணமாக என்பதை அவர் தான் விளக்க வேண்டும்.

பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை கொண்டு வருவதற்கான ஏர்பாட்டை உடனே செய்ய வேண்டும் என்றும், பூரண மதுவிலக்கை உடனே அமல்படுத்து தமிழ அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதே தமிழிசை சவுந்தரராஜன், காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி திருச்சி பொதுக்கூட்டத்தில் புதிய மதுக்கொள்கையை காங்கிரஸ் கட்சி கொண்டு வரும் என்று பேசியதற்கு பதில் அளிக்கையில், இந்தப் புதிய மதுக் கொள்கையை கொண்டு வருவோம் என ராகுல் பேசியுள்ளார். அப்படியெனில், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் அப்படிப்பட்ட மதுக்கொள்கையை ஏன் கொண்டு வரவில்லை, என்று வினவி இருக்கிறார். அவரது கருத்து சரியானது தான். அவர் கூறிய அதே வார்த்தைகள் பாரிதிய ஜனதாவுக்கு்ம,  தமிழிசை சவுந்தரராஜனுக்கும் பொருந்தும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். குஜராத் நீங்கலாம், பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் உள்ள ஏனைய மாநிலங்களில், முழு மதுவிலக்கை அமல்படுத்த நடவடிக்கைகள் எடுத்து பின்னர் தமிழகத்தில் மதுவிலக்கு பற்றி தமிழிசை சவுந்தரராஜன் பேசட்டும். பூரண மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத் மாநிலத்தில் கூட, மது பானம் கள்ளச்சந்தையில் அதிக அளவில் கிடைக்கிறது என்பது தமிழிசைக்கு தெரியாதா?  அவ்வாறு தெரியவில்லை எனில் 31-8-2014தேதியிட்ட the hindu ஆங்கில நாளிதழில் வந்துள்ள கட்டுரையை படித்து தெரிந்து கொள்ளலாம்என தெரிவித்துகொள்கிறேன். மேலும் குஜராத்தில் உருவாக்கப்பட்டு வரும் Gujarat international Finance and tec(GIFT) Cityயில் மதுவிலக் கை தளர்த்த அரசு முடிவு எடுக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளனவே ம.தி.முக பொதுச்செயலாளர் வைகோ ஒருபடி மேலே சென்று வன்முறையை கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்.கலிங்கப்பட்டியில் உள்ள ஒரு மதுபானக்கடையை மூட வலியுறுத்தி 1-8-2015 அன்று அங்கு ஒருபோராட்டம் நடைபெற்றது. அந்தப்போராட்டத்தில் வை.கோவின் தாயாரும் பங்கேற்றார். ஆனால் 2-8-2015 அன்று வை.கோ முன்னிலையில் நடைபெற்ற அந்தப்போராட்டத்தில் வை.கோவின் தாயார் கலந்து கொள்ள வில்லை. அப்படியென்றால் 2-8-2015 அன்று வன்முறை வெடிக்கும்,மதுபானக்கடைசூறையாடப்படும் என்பதால் தான் தனது தாயாரை கலந்து கொள்ள வேண்டாம் என்று வை.கோ கூறியுள்ளாரா?- வைகோவின் தாயார் கலந்து கொள்ளாததிலிருந்தே கலிங்கப்பட்டியில் நடைபெற்ற கலவரம் திட்டமிட்டு நடத்தப்பட்டதோ என்ற ஐயம் எழுகிறது.

தற்போது கலிங்கப்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடை முந்தைய மைனாரிட்டி திமுக ஆட்சி காலமான 2009லிருந்து இதே இடத்தில் செயல்பட்டு வருகிறது. இவ்வளவு காலமாக வாய் திறக்காத வை.கோ 2-8-2015 அன்று போராட்டம் நடத்தியது அரசியல் ஆதாயம் தேடுவதற்காக அல்லாமல் வேறு எதற்காக?-

மதுவைப்போன்று புகையிலையும் தீமை விளைவிக்கும் பொருள்தான் என்பது வை.கோவிற்கு தெரியாதா?-2000ம்ஆண்டிலிருந்து புகையிலைபபொருட்கள் வாணிபத்தில் ஈடுபட்டுட வரும் tobacco Depot என்ற நிறுவனத்தில் வைகோவின் புதல்வர் ஜி.துரை வையாபுரி பங்குதாரராக உள்ளாரே,இதற்கு வை.கோவின் பதில் என்ன?-

மதுப்பழக்கம் என்பது ஒரு சமூக பிரச்சினை எனவேதான் தமிழக முதலமைச்சர் புரட்சி தலைவிஅம்மா அவர்களின் தலைமையிலான அரசு மதுவினால் ஏற்படக்கூடிய தீமைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த பேரணிகள்,முகாம்கள்,கருத்தரங்குகள், துண்டு பிரசுரங்கள், விநியோகம் செய்தல் போன்ற பல்வேறு நடவடிக் கைகளை எடுத்து வருகிறது.
வழிபாட்டு தலங்கள்.பள்ளிக்கூடங்கள், கல்லு◌ாரிகள்,ஆகியவற்றிற்கு அருகே மதுமபானக்கடைகள் இருப்பதாக சொல்வது முற்றிலும் தவறானது ஆகும்.மதுபானக்கடைகள் இருப்பதாக சொல்வது முற்றிலும் தவறானதுஆகும்.மதுபான விற்பனைக்கான விதிகளில் குறிப்பிட்டுள்ள வழிமுறைகள் தவறாமல் கடைபிடிக்கப்படுகின்றன.

மேலும் தேசிய நெடுஞ்சாலைகளில் இயங்கி வந்த 504 டாஸ்மாக் கடைகள் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளன. மதுவிலக்கு பற்றி பேசுவதாலும் அதற்கென போராட்டம் நடத்துவதாலும் தேர்தல் களத்தில் வாக்குகளைப் பெற்று விடலாம் என்று நினைத்து அரசியல் ஆதாயம் தேடுபவர்களை பற்றி தமிழக மக்களுக்கு நன்றாக தெரியும்.தமிழகம் வளர்ச்சிப்பாதையில்,முன்னேற்ற பாதையில் மனித வள குறியீட்டில் பீடு நடை போட்டுகொண்டிருக்கின்ற இந்த சமயத்தில் அரசுக்கு எதிராக எதுவுமே இல்லை என்பதால் மதுவிலக்கு குறித்து போராட்டம் நடத்தி தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சி தலைவி அம்மா அவர்களின் அரசுக்கு களங்கம் கற்பிக்கலாம் என்று மனப்பால் குடிப்பவர்களின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது.

இவ்வாறு மின்சாரம்,மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து