முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவுடனான நல்லுறவு தொடரும்: ரணில் விக்கிரமசிங்கே நம்பிக்கை

வியாழக்கிழமை, 20 ஆகஸ்ட் 2015      உலகம்
Image Unavailable

கொழும்பு - இந்தியாவுடனான இலங்கையின் நல்லுறவு தொடரும் என்றும் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து நல்லாட்சி அமைக்க வேண்டும் என்றும் அந்நாட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.  இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அதிக இடங்களில் வென்று ஆட்சியைக் கைப்பற்றியது. ரணில் விக்கிரமசிங்கே இன்று பிரதமராக பதவியேற்க உள்ளார்.

இந்நிலையில் கொழும்பில் செய்தியாளர்களிடம் ரணில் விக்கிரமசிங்கே கூறியதாவது:  மக்களின் பிரச்சினைகளை அடையாளம் கண்டு அந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காண நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சியினரையும் இணைத்துக் கொள்வோம். இந்த நடவடிக்கையில் இருந்து நாம் விலகப் போவதில்லை. நான் பிரதமராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்ட பின் நானும் ஜனாதிபதியும் இணைந்து கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாட்டை ஏற்படுத்துவோம்.  நல்லாட்சியை அங்கீகரித்து அதன் பின்னர் உடன்பாட்டு அரசியலை முன்னெடுப்போம்.

இதில் நாம் ஒன்றிணைவோம். எவரும் இதிலிருந்து விலகிவிட முடியாது. நாம் சுதந்திரமும் நீதியுமான தேர்தலை எதிர்கொண்டோம். எதிர்காலத்தில் நாம் நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு நல்லாட்சியை பலப்படுத்துவோம். அதற்குப் பின்னர் நாம் கட்சி அரசியல் பற்றி சிந்திக்க முடியும். இந்தியா, சீனாவுடனான இலங்கையின் நல்லுறவு தொடரும். நாட்டுக்கு நன்மை பயக்கும் அனைத்து நடவடிக்கைகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்படும். இவ்வாறு ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்