முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை அடையாறு புற்றுநோய் மையம் ரூ 120 கோடி மதிப்பீட்டில் வலுப்படுத்தப்படும் சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 25 ஆகஸ்ட் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை: சென்னை, அடையாறு புற்று நோய் மையம், மாநில உயர்நிலை மையமாகவும், ஒப்புயர்வு மையமாகவும் 120 கோடி ரூபாய் செலவில் வலுப்படுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக சட்டபேரவையில் கேள்வி நேரம் முடிந்த பின்னர் பேரவை விதி 110-ன் கீழ் முதலமைச்சர் ஜெயலலிதா அறிக்கை ஒன்றை அளித்தார். 22 நலத்திட்டங்கள் அடங்கிய அந்த அறிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:
""விசையுறும் பந்தினைப் போல் - உள்ளம்
வேண்டியபடி செலும் உடல் கேட்டேன்""
என்று சொன்னதைச் செய்யும் உடல் வேண்டி உருகுகிறார் மகாகவி பாரதியார்.

நோயற்ற வாழ்வாகிய குறைவற்ற செல்வத்தைப் பெற்றால் தான் அறிவுச் செல்வம்  உட்பட அனைத்துச் செல்வங்களையும் எளிதில் பெற்று மனித வளக் குறியீட்டில் தமிழகம் சாதனை படைக்க முடியும் என்பதால் தான் எனது தலைமையிலான அரசு, தமிழக மக்களின் உடல் நலன் பேணும் பல்வேறு நடவடிக்கைகளை கடந்த நான்கு ஆண்டுகளில் எடுத்து அதில் வெற்றியும் கண்டிருக்கிறது. இதன் காரணமாக, தாய் சேய் நலத்தை பேணிக் காப்பது, தொற்றும் மற்றும் தொற்றா நோய்களை தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவது உள்பட அனைத்திலும் தமிழ்நாடு முன்மாதிரி மாநிலமாக திகழ்கிறது.

சுகாதாரச் சேவைகள் மேலும் செம்மையுற்று, அதன் பயன்கள் மக்களை சென்றடையும் வகையில், நடப்பாண்டில் பின் வரும் புதிய திட்டங்களை இந்த மாமன்றத்தில் அறிவிப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். 1. ஆரம்ப சுகாதாரச் சேவைகளை வலுப்படுத்த கடந்த நான்காண்டுகளில் 172 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் துவங்கப்பட்டுள்ளன. இவை மட்டுமல்லாது 122 ஆரம்ப சுகாதார நிலையங்கள் 30 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனைகளாக மேம்படுத்தப்பட்டு உள்ளன. இதன் தொடர்ச்சியாக, நடப்பு ஆண்டில் 10 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் 6 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், 10 ஆரம்ப சுகாதார நிலையங்கள் 12 கோடி ரூபாய் செலவில் 30 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் செவிலியர்களுக்கு இருப்பிட வசதிகள் ஏற்படுத்தும் வண்ணம், 60 ஆரம்ப சுகாதார நிலையங்களில் 6 கோடி ரூபாய் செலவில் செவிலியர் குடியிருப்புகள் கட்டப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

2. பாதுகாப்பான தரமான ரத்தம் மற்றும் ரத்தக் கூறுகள் நோயாளிகளின் தேவைக்கேற்ப உரிய நேரத்தில் கிடைக்கச் செய்வது இன்றியமையாததாகும். அறுவை சிகிச்சைக்கு ரத்தம் தேவைப்படுவது மட்டுமல்லாது, டெங்கு போன்ற நோய்களினால் ஏற்படும் இறப்பை தடுப்பதற்கும் ரத்தம் அவசியமாகும். தமிழ்நாட்டில் அரசு அங்கீகாரம் பெற்ற 281 ரத்த வங்கிகளும், 415 ரத்த சேமிப்பு மையங்களும் செயல்பட்டு வருகின்றன. நடப்பு ஆண்டில் 12 புதிய ரத்த வங்கிகள், 10 ரத்த சேமிப்பு மையங்கள் மற்றும் 10 ரத்த சேகரிப்பு பிரிவுகள் 12 கோடியே 12 லட்சம் ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

3. தமிழ்நாட்டில் குழந்தைகளின் இறப்பு விகிதத்தை குறைப்பதற்கு, பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை மையங்களை அரசு மருத்துவமனைகளில் எனது தலைமையிலான அரசு அமைத்து வருகிறது. தற்போது 64 பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை மையங்கள் செம்மையாக செயல்பட்டு வருகின்றன. இதனை, மேலும் வலுப்படுத்தும் வகையில், தாம்பரம், திருத்தணி, குடியாத்தம்,
ராஜபாளையம் மற்றும் விருதாச்சலம் ஆகிய 5 மருத்துவமனைகளில், பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை மையம் 3 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும். மேலும், குழந்தைகளுக்கு ஏற்படும் டெங்கு, மூளைக் காய்ச்சல், சாலை விபத்து மற்றும் தற்செயலாக விஷம் அருந்துவது போன்ற அபாயகரமானவற்றிலிருந்து அவர்களை காப்பாற்ற, ராஜபாளையத்தில் 20 படுக்கை வசதி கொண்ட குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவும், தீவிர சிகிச்சைக்குப் பின் நிலைப்படுத்தப்பட்ட குழந்தைகளை அடுத்த 48 மணி நேரத்திற்கு பராமரிக்கும் 5 படுக்கை வசதி கொண்ட ஸ்டெப் டவுன் வார்டும், 1 கோடியே 10 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும்
என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

4. தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவிக்கும் தாய்மார்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை முடிந்து கட்டணம் ஏதுமின்றி மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அழைத்துச் செல்லப்படும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் இதுவரை சுமார் 3 லட்சம் பிரசவித்த தாய்மார்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகள் பயனடைந்துள்ளனர். இத்திட்டத்தை மேலும் செம்மையாக செயல்படுத்த 20 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு 20 வாகனங்கள், 1 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் வாங்கி வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

5. விபத்துகளினால் ஏற்படும் உயிர் இழப்புகளை குறைப்பதற்கும், விலை மதிப்பற்ற மனித உயிர்களை காப்பாற்றவும் ‘108 அவசரகால ஆம்புலன்ஸ் சேவை’ மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் இந்த ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கை 406-லிருந்து 751-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் நடப்பு ஆண்டில், முதல் கட்டமாக 50 பழைய ஆம்புலன்ஸ்களுக்கு பதிலாக புதிய ஆம்புலன்ஸ்கள் 5 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

6. ஆபத்தான நிலையில் உள்ள இளம் குழந்தைகளுக்கு இளம் சிசு பராமரிப்பு மையம் சிறப்பாக சிகிச்சை அளித்து வருகிறது. இவைகளை வலுப்படுத்தும் பொருட்டு, முதல் கட்டமாக 10 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் 8 மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் செயல்பட்டு வரும் இளம் சிசு பராமரிப்பு மையங்களுக்கு 10 கோடியே 8 லட்சம் ரூபாய் செலவில் வெண்டிலேட்டர் போன்ற புதிய உபகரணங்கள் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

7. புற்று நோய் போன்ற தொற்றா நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்த எனது தலைமையிலான அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மதுரை, கோயம்புத்தூர், தஞ்சாவூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய 4 இடங்களில் மண்டல புற்று நோய் மையங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. புற்று நோயை குணப்படுத்த அடையார் புற்று நோய் மையம் சிறப்பாக செயல்பட்டு வருவதால் அதை ஒப்புயர்வு மையமாக தரம் உயர்த்த வேண்டும் என்று பாரத பிரதமருக்கு நான் கடிதம் எழுதியிருந்தேன். எனது கோரிக்கையினை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. இதன்படி, சென்னை, அடையாறு புற்று நோய் மையம், மாநில உயர்நிலை மையமாகவும், ஒப்புயர்வு மையமாகவும் 120 கோடி ரூபாய் செலவில் வலுப்படுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், மார்பக புற்று நோயை கண்டறிந்து உறுதி செய்ய 15 மாவட்ட தலைமை மருத்துவமனைகளுக்கு 2 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில், மேமோகிராபி மருத்துவக் கருவிகள் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்