முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கு: தயாநிதி மாறனிடம் சி.பி.ஐ. விசாரணை

திங்கட்கிழமை, 30 நவம்பர் 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி - பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று சுமார் 6 மணிநேரம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் நேற்று முதல் டிசம்பர் 5-ம் தேதி வரை தினமும் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை சிபிஐ அலுவலகத்தில் தயாநிதி மாறன் நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சில தினங்களுக்கு முன் உத்தரவிட்டிருந்தனர் இருப்பினும், தயாநிதி மாறனை காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதிகள் அப்போது சிபிஐக்கு அனுமதி மறுத்துவிட்டனர். 

கடந்த 2004-07-ம் ஆண்டு  காலகட்டத்தில், தி.மு.க.வை சேர்ந்த தயாநிதி மாறன் மத்திய அமைச்சராக இருந்தபோது, 700-க்கும் மேற்பட்ட தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக பெற்றதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சிபிஐ விசாரணையில் இருந்து வருகிறது. இந்த வழக்கில் தயாநிதி மாறனை கைது செய்ய இடைக்கால தடை விதித்து சுப்ரீம் கோர்ட்  ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்துள்ளது.  கடந்த ஆட்சியில் எத்தனையோ ஊழல்கள் நடைபெற்றன. நாட்டிற்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்திய மாபெரும் ஊழலான ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கி திமுகவைச் சேர்ந்த ஆ.ராசா கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

பின்னர் அவர் ஜாமீனில் வெளி வந்தார். பின்னர் கலைஞர் டி.வி.யின் முறைகேடான பண பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் கனிமொழி, தயாளு அம்மாள் மீது அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் கனிமொழி சிறைக்கு செல்ல வேண்டியதாயிற்று. அதன் பிறகு தயாநிதி மாறன் மீதான முறைகேடுகள் அம்பலமாகின. அதாவது ஒரு குறிப்பிட்ட தொலைக்காட்சிக்கு சட்டவிரோதமாக பி.எஸ்.என்.எல் தொலைபேசி இணைப்புகளை அவர் கொண்டு சென்றதாக குற்றம் சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தான் தற்போது அவர் சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக அவர் ஆஜராகி உள்ளார்.

நேற்று காலை சி.பி.ஐ. அதிகாரிகள் முன் தயாநிதி மாறன் ஆஜரானார். அவரிடம் மாலை வரை சுமார் 6 மணிநேரம் தொடர்ச்சியாக கிடுக்குப்பிடி விசாரணை நடத்தப்பட்டது. சட்டவிரோத டெலிபோன் இணைப்புகள் மற்றும் ஒரு குறிப்பிட்ட தொலைக்காட்சி ஆதாயமடைந்தது எப்படி என்பது பற்றியும் சி.பி.ஐ. அதிகாரிகள் தயாநிதி மாறனிடம் மீண்டும் துருவி துருவி விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் தயாநிதி மாறன் சிபிஐ அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு முன்னுக்கு பின் முறனாக பதில் அளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்