முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லஞ்சப் புகாரில் உம்மன் சாண்டி பதவி விலக கேரளாவில் கவர்னர் உரையை புறக்கணித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

வெள்ளிக்கிழமை, 5 பெப்ரவரி 2016      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம் - கேரளாவில் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடரான நேற்று, லஞ்சப் புகாரில் சிக்கிய உம்மன் சாண்டி பதவி விலகக்கோரி கவர்னர் உரையை புறக்கணித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். கேரளாவில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசை கண்டித்தும், பார் ஊழல், சோலார் பேனல் மோசடி விவகாரம் தொடர்பாக முதல்வர் உம்மன்சாண்டி பதவி விலக வேண்டும் என்றும் இடதுசாரி கூட்டணி கட்சியினர் போராடி வருகிறார்கள். கடந்த சட்டசபை கூட்டம் நடந்தபோது எதிர்க்கட்சியினரின் போராட்டம் காரணமாக நிதி அமைச்சர் மாணி பதவி விலகும் நிலை ஏற்பட்டது. அதுபோல இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் நடக்கும் போது முதல்வர் உம்மன்சாண்டி பதவி விலகக்கோரி போராட்டத்தில் ஈடுபடுவோம் என எதிர்க்கட்சியினர் அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில் கேரள சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதில், அரசின் திட்டங்கள், சாதனைகள் குறித்து கவர்னர் சதாசிவம் உரை நிகழ்த்துவார் என்றும் கூறப்பட்டது. அதன்படி, நேற்று காலை சட்டசபை கூட்டம் தொடங்கியதும் கவர்னர் சதாசிவம் உரை நிகழ்த்த தொடங்கினார். அப்போது சபையில் இருந்த இடதுசாரி கட்சியினர் எதிர்க்கட்சி தலைவர் அச்சுதானந்தன் தலைமையில் லஞ்ச புகாரில் சிக்கிய முதல்வர் உம்மன்சாண்டி பதவி விலகக் கோரி கோஷங்கள் எழுப்பினர். மேலும் ஊழல் அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் பிடித்து கோஷமிட்டனர்.

அவர்களை கவர்னர் சதாசிவம் அமைதியாக இருக்கும்படி கேட்டுக்கொண்டார். எதிர்க்கட்சியினரின் கோஷம், எனக்கு எதிரானது அல்ல, என்று எனக்கு தெரியும். இருந்தாலும் சட்டசபையின் முதல் கூட்டத்தொடரில் கவர்னர் உரை நிகழ்த்துவது என்பது அரசியல் மரபு. அதைத்தான் நான் நிறைவேற்ற வந்துள்ளேன். அதற்கு எதிர்க்கட்சியினர் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆனாலும் எதிர்க்கட்சியினர் கோஷத்தை நிறுத்தவில்லை. பின்னர் அவர்கள் கவர்னர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். சட்டசபை வராண்டாவில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பினர். இதனால் சட்டசபை வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்