முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை கைது செய்துள்ள 27 மீனவர்களையும் 71 மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்க நேரிடையாக தலையிடுங்கள் பிரதமர்க்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

வெள்ளிக்கிழமை, 12 பெப்ரவரி 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை - இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்ட 27 மீனவர்களையும் 71 மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்கு இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் இலங்கை அரசிடம் பேசி நடவடிக்கை எடுப்பதற்கு பிரதமர் மோடி நேரடியாக அறிவுறுத்த வேண்டியும்,  10-2-2016 அன்று இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 12 மீனவர்கள் மற்றும் 2 மீன்பிடி படகுகளையும் சேர்த்து அனைத்து மீனவர்களையும் விடுவிப்பதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். முதல்வர் ஜெயலலிதா பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று அனுப்பிய கடிதத்தில் எழுதியிருப்பதாவது:- தமிழக மீனவர்கள் தங்களது பாரம்பரி மீன்பிடி பகுதியில் மீன்பிடிக்கும் போது அவர்களை தடை செய்வதும், கைது செய்யும் நடவடிக்கையையும் இலங்கை கடற்படை மேற்கொண்டு வருகிறது.

இது துரதிர்ஷ்டவசமானது. இந்த கைது நடவடிக்கைள் தொடர்ந்து நடந்து வருகிறது. கடந்த 10-2-2016அன்று ராமேஸ்வரத்தில் இருந்து 12 மீனவர்கள் இரு எந்திர படகுகளில் மீன் பிடிக்கச்சென்றனர். அவர்களை 11-2-2016 அன்று தடுத்து நிறுத்திய இலங்கை கடற்படை கைது செய்து இலங்கையில் உள்ள தலைமன்னாருக்கு கொண்டு சென்றது. பாக்ஜல சந்தியில் பாரம்பரிய நீர் எல்லை பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கும் உரிமையை தமழக அரசு முழுமையாக ஆதரித்து வருகிறது.

தமிழக மீனவர்கள்  பாரம்பரிய நீர் எல்லையில் மீன் பிடிப்பதை இலங்கை கடற்படை தொடர்ந்து தடுத்து வரும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. மேலும் தமிழக மீனவர்களை கைது செய்து தாக்குதலும் நடத்தி வருகிறது. இந்த நடவடிக்கைகள் தொடர்வதற்கு அனுமதிக்க முடியாது. இதுபோன்ற இலங்கை கடற்படையின் தாக்குதல்களை  இந்திய அரசின் முயற்சிகள் மூலம் நிறுத்த வேண்டும். மீனவர்களுடன் படகுகளையும் பறிமுதல் செய்யும் இலங்கை கடற்படையினர், மீனவர்களை விடுவித்தாலும் அவர்களது படகுகளை விடுவிப்பது இல்லை. இதனால் பல மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு அவர்களுக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்துகிறது.

படகுகளை நீண்ட காலம் வைத்திருத்தல், அதனை பயன்படுத்தாமல் அப்படியே போட்டு வைத்தல் காரணமாக அந்த படகுகள் பருவ மழையில் சேதமடைந்துள்ளன. இந்த படகுகள் மீனவர்களின் வாழ்வாதாரம் ஆகும். அந்த படகுகளை மீட்டு புதுப்பித்து அதனை  இந்திய அரசு விரைவில் தர வேண்டும். சர்வதேச கடல்சார் எல்லை கோடு (ஐ.எம்.பி.எல்)  பிரச்சினை இந்திய சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது என்பதை தாங்கள் அறிவீர்கள். கடந்த 1974 மற்றும் 1976-ம் ஆண்டுகளில் இந்தியா-இலங்கை இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை நான் எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன்.

தமிழக அரசும் இதில், தன்னையும் ஒரு வாதியாக இணைத்துக் கொண்டுள்ளது. நமது மீனவர்கள்  ஆழ்கடல்  மீன்பிடி படகுகளை  வாங்குவதற்கு ரூ.30 லட்சம் மானியத்தை அளிக்கும் திட்டத்தை  எனதுஅரசு அறிமுகப்படுத்தியது. இந்தியாவிலேயே முதன்முறையாக இந்த திட்டத்தை எனது அரசு அறிமுகப்படுத்தியது. ஆழ்கடல் மீன்பிடிப்பு மற்றும் உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கு மத்திய அரசிடம் ரூ.1520 கோடி நிதி உதவியை கேட்டுள்ளேன். மேலும் அந்த உள்கட்டமைப்பை பராமரிக்க ஆண்டுதோறும் ரூ.10 கோடியை மத்திய அரசு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளேன். தமிழக அரசின் இந்த கருத்துவிற்கு விரைவில் மத்திய அரசு விரைவில் அனுமதி அளிக்க வேண்டும்.

ஆயிரக்கணக்கான தமிழக மீனவர்களின் வாழ்வாதாரங்களை சூழ்ந்துள்ள துயரங்களுக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும். இலங்கை கடற்படையால் பிடித்து வைக்கப்பட்டுள்ள 27 மீனவர்களையும் 71 மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்கு இந்திய வெளியுறவுத்துறை, இலங்கை அரசிடம் பேசி நடவடிக் கை எடுப்பதற்கு தாங்கள் நேரடியாக அறிவுறுத்த வேண்டுகிறேன். தற்போது (10-2-2016)இலங்கையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 12 மீனவர்கள் மற்றும் 2 மீன் பிடி படகுகளையும் சேர்த்து அனைத்து மீனவர்களையும் விடுவிப்பதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்