முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாளை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

வெள்ளிக்கிழமை, 1 ஏப்ரல் 2016      ஆன்மிகம்
Image Unavailable

சென்னை, பிரசித்தி பெற்ற மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நாளை 3ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு யாக சாலை பூஜைகள் தொடங்கியது.

‘கயிலையே மயிலை' ‘மயிலையே கயிலை' என்ற புகழுக்குரிய மயிலாப்பூர் கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் கோவில், 7ம் நூற்றாண்டை சேர்ந்த பழமை வாய்ந்த கோவிலாகும். இந்த கோவிலின் கும்பாபிஷேகம் 12 ஆண்டுகளுக்கு பிறகு நாளை காலை 8.30 மணிக்கு நடைபெற உள்ளது. பார்வதி தேவி மயில் வடிவம் எடுத்து சிவபெருமானை பூஜித்த தலம் என்பதால் மயிலாப்பூர் என இத்தலம் புகழ் பெற்றது. தேவாரப் பாடல் பெற்ற திருத்தலமான இத்திருக்கோயிலில் கோசாலை அருகே உள்ள ஆதிகபாலீஸ்வரர் சன்னிதியில், இந்த தெய்வத் தம்பதிகளின் திருமணக் காட்சி ஆண்டுதோறும் நிகழ்த்தப்படுகிறது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பல்வேறு திருப்பணிகள் ரூ.9 கோடி செலவில் நடந்தன. 6 மாத காலத்துக்கு மேல் தொடர்ந்து நடந்து வந்த பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன.கிழக்கு ராஜகோபுரத்தில் 9 கலசங்கள், மேற்கு கோபுரம் 7 கலசங்கள் மற்றும் இதர கலசங்கள் 19 என 36 கலசங்களுக்கு தங்கநீர் தோய்த்து முடிக்கப்பட்டது. ஒரு பெரிய தேர், 4 சிறிய தேர்கள், அறுபத்து மூவர் பல்லக்குகள் என அனைத்து வாகனங்களும் பழுது நீக்கி புதிதாக வண்ணம் தீட்டப்பட்டு உள்ளன.

கபாலீஸ்வரருக்கு 4 கிலோ தங்க நாகாபரணமும், கற்பகாம்பாள் பாவாடைக்கு 2 கிலோ தங்கமும் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இதற்காக ஒரு கோடியே 56 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. கோவில் தெப்பக்குளத்தின் நீர் மறு சுழற்சி மூலம் தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது.

கும்பாபிஷேகத்துக்கான யாகசாலை பூஜைகள் கடந்த மாதம் 29ம்தேதி தொடங்கியது. ஆகம விதிகள் படி யாக பூஜைகளை வேதவாத்தியார் பிரம்ம ஸ்ரீனிவாச சாஸ்திரிகள் தலைமையில், 120 சிவாச்சாரியார்கள் மேற்கொண்டுள்ளனர். இன்று காலை 6 மணியளவில் விசேஷ சாந்தி கும்ப திருமஞ்சனமும், தீர்த்த வினியோகமும் நடக்கிறது.

தற்போது பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் கும்பாபிஷேகம் நாளை காலை 8.45 முதல் 9.50 வரை நடைபெற உள்ளது. முன்னதாக கற்பகாம்பாள் உடனாய கபாலீஸ்வரர் விமானம், சிங்காரவேலர், விநாயகர் ஆகியோர் உட்பட 19 தெய்வத் திருவுருவங்களின் விமானக் கலசங்களுக்கும் கும்பாபிஷேகம் செய்யப்படும்.

கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து ஏப்ரல் 3 முதல் 48 நாட்களுக்கு மண்டல பூஜைகள் நடத்தப்படும். இதில் கலந்துகொண்டாலும் கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டால் கிடைக்கும் கோடி புண்ணிய பலன்கள் முழுமையாகக் கிடைக்கும் என்பது ஐதீகம்.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சென்னை மாநகரின் அனைத்து பகுதிகளில் இருந்து மயிலாப்பூருக்கு 350 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்கு தடையின்றி தரிசனம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. கோவிலை சுற்றி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சிறப்பு காவல் நிலையமும் அங்கு தொடங்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்