முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க. - காங்கிரஸ் கொள்ளை கூட்டணியை ஒழிக்க வேண்டும் : முதல்வர் ஜெயலலிதா பரபரப்பு பேச்சு

புதன்கிழமை, 27 ஏப்ரல் 2016      தமிழகம்
Image Unavailable

மதுரை : நாடாளுமன்ற தேர்தலில் கொடுத்த பலமான அடியை விட சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்கு சம்மட்டி அடி கொடுங்கள் என்றும், தி.மு.க. - காங்கிரஸ் கொள்ளை கூட்டணியை ஒழிக்க வேண்டும் என்றும் மதுரை பிரச்சாரக் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா பேசினார்.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தல் மே 16-ல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா நேற்று மதுரை சுற்றுச்சாலை, பாண்டிகோயில் அருகில் உள்ள அருள்மிகு பாண்டி முனீஸ்வரர் திடலில் நடைபெற்ற  தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று, மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தருமபுரி மற்றும் தஞ்சாவூர் வடக்கு ஆகிய மாவட்டங்களுக்கு உட்பட்ட 47 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் கழக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது., காங்கிரஸ்-தி.மு.க. நடத்திய மத்திய கூட்டணி ஆட்சியில் நடைபெற்ற நிலக்கரி சுரங்க ஊழல், 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்திய 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், மும்பை ஆதர்ஷ் அடுக்குமாடி குடியிருப்பு வீட்டுவசதியில் ஊழல், காமன்வெல்த் நாடுகளின் விளையாட்டுப் போட்டியில் ஊழல் என விளையாட்டிலே கூட விளையாடிய கூட்டணி தான் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி என்பதை மறவாதீர்கள்.

முன்பு ஆட்சியில் இருந்த போது சுருட்டியது போதாதென்று மேலும் சுருட்ட வாய்ப்பு கேட்டு உங்களை தேடி வாக்கு கேட்க தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணிக் கட்சியினர் வருவார்கள். மறுபடியும் உங்கள் வாக்குகளைப் பெற்று கொள்ளையடிக்கலாம் என்ற எண்ணத்தில் உங்களை தேடி அதே கொள்ளைக் கூட்டம் வரும்.  அவர்களுக்கு, அந்த தி.மு.க-வுக்கு, இந்தத் தேர்தலில், கடந்த 2011-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் நீங்கள் கொடுத்த அடியை விட, 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் கொடுத்த அடியை விட, பலமான அடியை நீங்கள் கொடுத்தால் தான் அந்தக் கொள்ளைக் கூட்டம் நிரந்தரமாக ஒழியும்.  தி.மு.க - காங்கிரஸ் கொள்ளைக் கூட்டணியையும் ஒழிக்க வேண்டும்.  அதற்கு 2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நீங்கள் கொடுத்த அடியை விட, 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் கொடுத்த பலமான அடியை விட, வரும் சட்டமன்றத் தேர்தலில் நீங்கள் சம்மட்டி அடி கொடுத்து, அந்தக் கூட்டணியை, கொள்ளைக் கூட்டணியை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்.  தி.மு.க-காங்கிரசுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

2006 முதல் 2011 வரை நடைபெற்ற திமுக ஆட்சி ஒரு அராஜக ஆட்சி.    தமிழகம் ஒரு அமைதிப் பூங்காவாக மாற வேண்டும் என்று தான் நீங்கள் 2011-ஆம் ஆண்டில் ஒரு அமைதிப் புரட்சியை ஏற்படுத்தினீர்கள். உங்களது எண்ணப்படியே இன்றைக்கு தமிழகம் ஒரு அமைதிப் பூங்காவாக இருந்து வருகிறது.  யாரும் எந்த வித அச்ச உணர்வும் இன்றி வாழ முடிகிறது. நடமாட முடிகிறது.  தங்களது சொத்துகளை அனுபவிக்க முடிகிறது. அன்றைய தி.மு.க. அரசும், தி.மு.க.-வினரும் காவல் நிலையங்களுக்கு சென்று காவலர்களை அச்சுறுத்திய காரணத்தினால் தான் சட்டம்-ஒழுங்கு அப்போது சீர்குலைந்திருந்தது. அதை மாற்றி சட்டத்தின் ஆட்சியை நிலை நிறுத்தியது நான் தான்.

இன்று  எந்த அரசியல்வாதியும் காவல் நிலையத்திற்கு சென்று காவலர் பணிகளில் தலையீடு செய்ய முடியாது.  எனவே தான் சட்டம்-ஒழுங்கு சீராக பராமரிக்கப்படுகிறது.  குற்றங்கள் குறைந்து வருகின்றன. அன்றைய தி.மு.க. ஆட்சியில் அமைச்சர்கள் முதல் அடிமட்ட தொண்டர்கள் வரை, சமூக விரோத கும்பல் உதவியுடன் நிலம் மற்றும் வீட்டு உரிமையாளர்களை மிரட்டி அவர்களின் சொத்துகளை அபகரித்தனர்.

2011-ம் ஆண்டு நான் ஆட்சி பொறுப்பேற்ற பின், நில அபகரிப்பு புகார்கள் விசாரணை செய்யப்பட வேண்டும்; நில அபகரிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டேன். பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் 3,264 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு எதிரிகள் கைது செய்யப்பட்டனர்.  3,678 கோடி ரூபாய் மதிப்புள்ள  5,193 ஏக்கர் நிலம் மற்றும் 35 லட்சத்து 78 ஆயிரம் சதுர அடி வீட்டுமனைகள் நில அபகரிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டு நில உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

1,084 வழக்குகளில் குற்றப் பத்திரிகைகள் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளன. இதில் 3 வழக்குகளில்  எதிரிகள் தண்டனை பெற்றுள்ளனர். சிறப்பு நீதிமன்றங்களில் இந்த வழக்குகள் விரைந்து முடிவுக்கு வர நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன. சட்டம் ஒழுங்கு நிலைமை சீரமைக்கப்பட்டு உள்ளதோடு மட்டுமல்லாமல் குற்றங்களும் தற்போது குறைந்துள்ளன. கடந்த மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற கொலைகள், ஆதாயக் கொலைகள், கூட்டுக் கொள்ளைகள், கொள்ளைகள், களவு வழக்குகள், சொத்து சம்பந்தமான வழக்குகள் என பல்வேறு குற்றங்களின் எண்ணிக்கை தற்போது  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் குறைந்துள்ளன.

மதுவிலக்கைப் பற்றி இப்பொழுது பல அரசியல் கட்சித் தலைவர்களும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.  அதனால்,  அ.தி.மு.க. கருத்தினை இப்போது தெரிவிக்க விரும்புகிறேன். எனது தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைத்தவுடன், மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்பட்டு பூரண மதுவிலக்கு என்ற நிலை எய்தப்படும்.  முதலில் சில்லறை மதுபானக் கடைகள் திறந்திருக்கும் நேரம் குறைக்கப்படும்.  கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்படும். பின்னர் சில்லறை மதுபானக் கடைகளுடன் இணைந்த பார்கள் மூடப்படும்.  குடிப்பழக்கத்திற்கு உள்ளாகி உள்ளோரை மீட்பதற்கான மீட்பு நிலையங்கள் ஏற்படுத்தப்படும். இவை அனைத்தும் செயல்படுத்தப்பட்டு படிப்படியாக பூரண மதுவிலக்கு என்னும் லட்சியத்தை நாம் அடைவோம். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago