முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருஞானசம்பந்தர் குருபூஜை மதுரை ஆதினத்தில் 5 நாட்கள் நடக்கிறது

சனிக்கிழமை, 14 மே 2016      ஆன்மிகம்
Image Unavailable

மதுரை  - மதுரை ஆதினத்தை 2500 ஆண்டுகளுக்கு முன்பாக நிறுவியருளிய திருஞானசம்பந்த பெருமாள் குருபூஜைப் பெருவிழா 5 நாட்கள் மதுரை ஆதீனத்தில் நடக்கிறது. சைவ சமயக்குரவர் நால்வரில் முதல்வரும், தமிழ்ச் சமுதாயத்தின் தனிப்பெரும் தலைவருமான திருஞானசம்பந்தப் பெருமானின் குருபூஜைப் பெருவிழா மே மாதம் 20-ம் நாள் வெள்ளி அன்று விநாயகர் பூஜையுடன் ஆரம்பம் ஆகிறது. மறுநாள் 21-ம் நாள் சனிக்கிழமை முருகர் பூஜையும், 22-ம் நாள் ஞாயிற்றுகிழமை திருஞானசம்பந்தப் பெருமாள் திருஅவதாரம் செய்த திருநாளும் நடைபெறுகிறது.

அன்று காலை 11 மணி அளவில், திருஞானசம்பந்தப் பெருமான் ஆதீன முகப்பிற்கு எழுந்தருளி, திருக்கண் சாத்துதல் நடைபெறுகிறது. 23-ம் நாள் திங்கட்கிழமை காலையில் மீனாட்சி அம்மன் கோயிலிலிருந்து திருஞானசம்பந்தப் பெருமான் ஆதீன முகப்பிற்கு எழுந்தருளி திருக்கண் சாத்தியபின், ஆதீனப் திருமடாலயத்தில் திருஞானசம்பந்தப் பெருமான் “ ஞானப்பால் அருந்தும்” சிறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. மறுநாள் 24-ம் நாள் செவ்வாய்கிழமை அதிகாலை 4 மணிக்கு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் இணை ஆணையர், உதவி ஆணையர், கண்காணிப்பாளர்கள், பேஷ்கார், சிவாச்சார்யார்கள், யானை, ஒட்டகம், மேள, தாளப் பரிவாரங்களுடன் குருமகா சன்னிதானம் அவர்களையும், ஆதீன இளவரசரையும் திருக்கோயிலுக்கு அழைத்துச் செல்கிறார்கள்.

அங்கு அனைத்து சன்னதிகளிலும் அர்ச்சனை செய்யப் பெற்று சன்னிதானம் தரிசனம் செய்கிறார்கள். பின்னர், திருக்கல்யாண மண்டபத்தில் திருஞானசம்பந்தப் பெருமானுக்கு அலங்காரங்கள் செய்வித்து தீபாராதனை செய்யப் பெற்று, ஆவணி மூலவீதிகளில் வலம் வந்து, மதுரை ஆதீனக் கொலு மண்டபத்தில் திருஞானசம்பந்தப் பெருமாள் எழுந்தருளி திருமறை, வேத பாராயணங்களுடன் சிறப்பு பூஜை நிகழ்கிறது. அதன் பின்னர், மீனாட்சி அம்மன் திருக்கோயிலிலிருந்து 63 நாயன்மார்கள் அடங்கிய சப்பரங்கள் மதுரை ஆதீன முகப்பிற்கு எழுந்தருளி சிறப்புப் பூஜைகள் நடைபெறுகிறது.

அதன் பின்னர் திருஞானசம்பந்தப் பெருமானையும், 63 நாயன்மார்களையும், மீனாட்சி அம்மன் திருக்கோவிலுக்கு வழி அனுப்பி வைத்து விட்டு, ஆதீனத் திருமடாலயத்தில் குருமகாசன்னிதானம் வைகாசி மூலக் குருபூஜைக்கு எழுந்தருளுகிறார்கள். அங்கு, மிகப்பெரிய சிறப்பு பூஜை நடைபெறும். திருஞானசம்பந்தப் பெருமான் தனது துணைவியார் தோத்திரப் பூரணாம்பிகையோடு, “தம்மை உணர்ந்து வாழ்ந்த உண்மைச் சீடர்கள்” சிலரோடும் சிவஜோதியில் ஐக்கியம் ஆகின்றார்கள். அதன் பின்னர், குருமகாசன்னிதானம் எல்லோருக்கும் ஆசிர்வாதம் வழங்கி, மாகேஸ்வர பூஜையில் கலந்து கொள்ள ஆணை பிறப்பிக்கிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்