முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரோந்து பணிகளை மேம்படுத்த 100 பைக் - 250 நவீன சைக்கிள்கள் காவல்துறையினருக்கு முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்

வியாழக்கிழமை, 30 ஜூன் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை : சென்னை பெருநகர காவல்துறையினரின் ரோந்து பணியினை மேம்படுத்தும் வகையில் 100 இருசக்கர வாகனங்களையும், 250 நவீன மிதிவண்டிகளையும் தலைமை செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா வழங்கி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:-

மாநிலத்தின் அமைதியைப் பேணிப் பாதுகாப்பது, சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பது, குற்றங்கள் நிகழாமல் தடுப்பது, குற்றவாளிகளைக் கண்டுபிடித்து தக்க தண்டனை பெற்றுக்கொடுப்பது போன்ற பல்வேறு முக்கிய பணிகளை காவல்துறை ஆற்றி வருகின்றது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த காவல்துறையின் பணிகள் மேலும் சிறக்க புதிய காவல் நிலையங்கள் மற்றும் காவலர் குடியிருப்புகளைக் கட்டுதல், காவல்துறை அலுவலகங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், ரோந்து பணிகளை மேற்கொள்ள புதிய வாகனங்களை வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரச சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

சென்னை பெருநகர காவல்துறையின் ரோந்துப் பணியினை மேம்படுத்தவும், மக்கள் நெருக்கம் நிறைந்த பகுதிகளிலும், குறுகலான தெருக்களிலும் ரோந்து பணியினை தீவிரப்படுத்தும் வகையிலும், ஜிபிஎஸ் கருவிகள், மின்னணு அறிவிப்பு பலகைகள், தொலை தொடர்பு கருவிகள் போன்ற நவீன உபகரணங்கள் பொருத்தப்பட்ட நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை முதலமைச்சர் ஜெயலலிதா ஏற்கெனவே வழங்கியுள்ளதன் காரணமாக சென்னை பெருநகர காவல்துறையினர் ரோந்துப் பணிகள் சிறப்பாக மேற்கொண்டு வருகிறார்கள்.

சென்னை பெருநகர காவல்துறையினரின் ரோந்து பணியினை மேலும் மேம்படுத்தும் வகையில் 1 கோடியே 12 லட்சம் ரூபாய் செலவில் வாங்கப்பட்ட 100 இருசக்கர வாகனங்களையும், 250 மிதிவண்டிகளையும் முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று தலைமைச் செயலகத்தில் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த ரோந்து பணியில் ஈடுபடும் சென்னை பெருநகர காவல்துறையின் ரோந்து காவலர்களுக்கு, தனிப்பட்ட முறையில் வடிவமைக்கப்பட்ட மேல்சட்டை, தலைக்கவசம் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. இருசக்கர வாகனங்களிலும், மிதிவண்டிகளிலும் ஒலி எழுப்பான்கள், எல்இடி விளக்குகள் உள்ளிட்ட கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் ரோந்து காவலர்கள் குறுகிய தெருக்களிலும், மக்கள் நெருக்கடி உள்ள பகுதிகளிலும் ரோந்து பணிகளை மேற்கொள்ள இயலும்.

போக்குவரத்து விதிகளை மீறும் வாகனஓட்டிகளுக்கு விதிக்கப்படும் உடனடி அபராதங்களுக்கு மின்னணு ரசீது வழங்கும் முறையினை மேலும் நவீனப்படுத்தும் வகையில், சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினரின் பயன்பாட்டிற்காக, 1 கோடி ரூபாய் செலவில் வாங்கப்பட்ட 100 உயர்ரக மின்னணு ரசீது கருவிகளை வழங்கும் அடையாளமாக 5 போக்குவரத்து காவலர்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா உயர்ரக மின்னணு ரசீது கருவிகளை வழங்கினார்.

போக்குவரத்து விதிகளை மீறும் வாகனஓட்டிகளுக்கு விதிக்கப்படும் உடனடி அபராதங்களுக்கு மின்னணு ரசீது வழங்கும் திட்டத்தின் கீழ் ஏற்கெனவே 300 மின்னணு ரசீது வழங்கும் கருவிகள் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினரின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் நேற்று முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கிய 100 உயர்ரக மின்னணு ரசீது கருவிகள் மூலம் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் தங்கள் பணியினை மேலும் செம்மையாக செய்ய இயலும்.

இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் முனைவர் பா.இராம மோகன ராவ், தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன்உள்துறை முதன்மைச் செயலாளர். அபூர்வ வர்மா, காவல்துறை தலைமை இயக்குநர் அசோக் குமார், சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  இவ்வாறு அந்து செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்