முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துருக்கியில் சிக்கித் தவித்த தமிழக தடகள வீரர்கள் நாடு திரும்பினர்

செவ்வாய்க்கிழமை, 19 ஜூலை 2016      விளையாட்டு
Image Unavailable

சென்னை, ராணுவப் புரட்சியின்போது துருக்கியில் சிக்கித் தவித்த தமிழக தடகள வீரர்-வீராங்கனைகள் நேற்று சென்னை வந்தனர். அவர்களை உறவினர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

பள்ளிகள் இடையேயான உலக விளையாட்டுப் போட்டி துருக்கியில் உள்ள டிராப்சோனில் நடந்தது. இந்தப் போட்டியில் இந்தியா சார்பில் 149 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். தமிழகத்தைச் சேர்ந்த 11 வீரர், வீராங்கனைகள் இதில் அடங்குவார்கள்.துருக்கியில் ஏற்பட்ட திடீர் ராணுவ புரட்சியால் தமிழக தடகள வீரர், வீராங்கனைகள் தவித்தனர். அவர்கள் விவரம் வருமாறு:-

அஜீத்குமார், பிரவீண், பூபேஸ்வர் நவீன், மணிராஜ் (தடகள மாணவர்கள்), தமிழ்ச் செல்வி, பிரியதர்ஷனி, ஹேமமாலினி, சான்ட்ரா பெரோசா மார்ட்டின், சம்யஸ்ரீ (தடகள மாணவிகள்), பவிகா துகார் (நீச்சல் வீராங்கனை).டிராப் சோன் பகுதியில் ராணுவ புரட்சியால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. புரட்சி முறியடிக்கப்பட்டு சகஜ நிலை திரும்பியது. இதனால் போட்டியில் பங்கேற்க சென்ற தமிழகத்தை சேர்ந்தவர்கள் பத்திரமாக இருப்பது தெரிய வந்தது.போட்டிகள் நேற்று முடிவடைந்ததை தொடர்ந்து திட்டமிட்டபடி வீரர், வீராங்கனைகள் துருக்கியில் இருந்து புறப்பட்டு நேற்று நாடு திரும்பினர்.டிராப்சோனில் இருந்து அங்காரா சென்று அங்கிருந்து இஸ்தான்புலுக்கு வந்தனர். இஸ்தான்புல் நகரில் இருந்து நேற்று முன் தீனம் இரவு புறப்பட்டு வீரர், வீராங்கனைகள் நேற்று அதிகாலை 5 மணியளவில் டெல்லி திரும்பினர்.தமிழக தடகள வீராங்கனைகள் டெல்லி வந்த தகவலை சென்னை வீராங்கனை தமிழ்ச்செல்வியின் தந்தை வெங்கடேசன் தெரிவித்தார்.தமிழக தடகள வீராங்கனைகள் 9 பேர் நேற்று பிற்பகல் 1.15 மணியளவில் டெல்லியில் இருந்து புறப்பட்டு மாலை 5 மணியளவில் சென்னை வந்து சேர்ந்தனர். அவர்களுக்கு பெற்றோர் மற்றும் நண்பர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்