முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை அருகே மாயமான விமானத்தை மீட்கும் பணி: மத்திய அமைச்சர் மனோகர் பாரிக்கர் ஆய்வு

சனிக்கிழமை, 23 ஜூலை 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை, சென்னை அருகே 29 பேருடன் மாயமான விமானப்படை விமானத்தை மீட்கும் பணியில் 17 போர்க்கப்பல்கள் மற்றும் 8 விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மேலும் மீட்பு பணி குறித்து மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் நேரில் ஆய்வு நடத்தினார்.

சென்னையை அடுத்த தாம்பரத்தில் இந்திய விமானப்படை தளம் உள்ளது.இங்கிருந்து அந்தமானில் உள்ள போர்ட்பிளேர் நகருக்கு விமானப்படை சரக்கு விமானம் மூலம் வாரந்தோறும் பொருட்கள் கொண்டு செல்லப்படும். ராணுவ வீரர்களும் அனுப்பி வைக்கப்படுவார்கள். அதேபோல், விமானப் படைக்கு சொந்தமான ஏ.என்.-32 ரக சரக்கு விமானம் ஒன்று தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து நேற்று முன்தினம் காலை 8.30 மணிக்கு அந்தமான் தலைநகர் போர்ட்பிளேருக்கு புறப்பட்டு சென்றது. அதில் 2 விமானிகள் உள்பட 6 சிப்பந்திகளும், 23 ராணுவ வீரர்களும் பயணம் செய்தனர். அந்தமான் தீவுக்கும் சென்னைக்கும் இடையேயான தூரம் 1,360 கிலோ மீட்டர் ஆகும். அந்த விமானம் நேற்று முன்தினம் காலை 11.30 மணிக்கு போர்ட்பிளேர் போய்ச் சேர்ந்து இருக்க வேண்டும்.

ஆனால் கிளம்பிச் சென்ற 15 நிமிடத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. ரேடாரின் பார்வையில் இருந்து விமானம் மாயமானது. அதாவது, சென்னையில் இருந்து கிழக்கே சுமார் 370 கிலோ மீட்டர் தொலைவில் வங்காள விரிகுடா கடலுக்கு மேலே நடுவானில் 23 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது, விமானம் திடீரென்று காணாமல் போய்விட்டது.

மாயமான அந்த விமானம் கடலில் விழுந்து மூழ்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. காணாமல் போன விமானத்தை தேடி கண்டுபிடிக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம் காலை 9.15 மணிக்கு அந்த விமானம் ரேடார் திரையில் இருந்து மாயமான போது சென்னையில் இருந்து கிழக்கே கடல் பகுதியில் 151 நாட்டிக்கல் மைல் தொலைவில் காணாமல் போய் இருந்தது. எனவே அந்த இடத்தை மையமாக கொண்டு தேடுதல் பணி நடந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு சிறிது நேரம் தேடும் பணி நிறுத்தப்பட்டது.

நேற்று 2-வது நாளாக தேடும் பணி நடந்தது. இது வரை எந்த பயனுள்ள தகவலும் கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து விமானத்தை தேடும் பணி தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. விமானத்தில் இருந்த 29 பேரின் கதி என்ன ஆனது என்பது இன்னமும் உறுதியாக தெரியவில்லை. விமானம் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு கடலில் விழுந்து இருப்பதால் அதில் இருந்த 29 பேரும் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப் படுகிறது.

மாயமான விமானம் சென்னைக்கு கிழக்கே கடலுக்குள் சுமார் 200 மைல் தொலைவில் விழுந்து விட்டதாக கணிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியை நேற்று காலை 17 போர்க் கப்பல்கள் முற்றுகையிட்டு தேடும் பணியில் ஈடுபட்டுள்ளன. 8 விமானங்களும் அந்த விமானத்தை தேடி வருகின் றன.இதற்கிடையே சிந்து கோஷ் எனும் நீர்மூழ்கி கப்பல் வேறொரு பணிக்காக வங்க கடலில் சென்று கொண்டிருந்தது. அந்த கப்பல் நேற்று முன்தினம் இரவே உடனடியாக சென்னை கடல் பகுதிக்கு வரவழைக்கப்பட்டுள்ளது.

சிந்து கோஷ் நீர் மூழ்கி கப்பல் கடலுக்கு அடியில் இருந்து வரும் சத்தங்களை மிகவும் துல்லியமாக பதிவு செய்யும்  நவீன வசதி கொண்டது. எனவே மாய மான விமானத்தின் கருப்புப் பெட்டியில் இருந்து ஏதாவது சிக்னல் வருகிறதா? என்பதை அந்த நீர்மூழ்கி கப்பல் ஆய்வு செய்து வருகிறது. அந்த சிக்னல் கிடைக்கும் பட்சத்தில் கடலுக்குள் அந்த விமானம் எந்த இடத்தில் விழுந்து மூழ்கி கிடக்கிறது என்பதை மிகவும் துல்லியமாக கண்டு பிடித்து விட முடியும்.

விமானத்தில் உள்ள கருப்புப் பெட்டி கடலுக்குள் விழுந்து மூழ்கினாலும் அதில் இருந்து சுமார் 1 மாதத்துக்கு சிக்னல் வெளியாகியபடி இருக்கும். எனவே அந்த சிக்னல் மூலம் மாயமான விமானத்தை கடலுக்குள் கண்டுபிடித்து விட முடியும் என்று அதிகாரிகள் நம் பிக்கை தெரிவித்தனர். இந்நிலையில், தேடுதல் மற்றும் மீட்பு பணிகளை நேரில் பார்வையிட்டு துரிதப்படுத்துவதற்காக பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பரிக்கர் டெல்லியில் இருந்து நேற்று சென்னை வந்தார். டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் தாம்பரம் விமானப்படை தளத்தை வந்தடைந்தார். தேடுதல் பணிகளின் முன்னேற்றம் தொடர்பாக ராணுவ அதிகாரிகள் அவரிடம் விளக்கம் அளித்தனர். அங்கிருந்து விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் தேடுதல் வேட்டை நடந்துவரும் வங்காள விரிகுடா கடல் பகுதியை மனோகர் பரிக்கர் பார்வையிட்டார். முன்னதாக சென்னை புறப்படுவதற்கு முன் டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மனோகர் பாரிக்கர், மாயமான  விமானத்தை தேடும் பணி முழுவீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளது. மாயமான விமானம் பற்றி இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. விமானத்தை தேடும் பணியில் ஐஎன்எஸ் ஸ்வாலா இணைய உள்ளது என்று தெரிவித்துள்ளார். பருவ நிலை மாற்றம் காரணமாக விமானத்தை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்