முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டப் பணி முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்

சனிக்கிழமை, 23 ஜூலை 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை : வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர் - விம்கோநகர் வரையிலான மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டப்பணிகள் 3 ஆண்டுகளில் நிறைவடையும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். மேலும், நிலத்தடி வழித் தடத்தில் ஒரு பகுதியான கோயம்பேடு முதல் நேரு பூங்கா வரை இந்த ஆண்டு இறுதிக்குள் பயணிகள் சேவை, துவக்கப்படும் என்றும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர் - விம்கோ நகர் வரையிலான முதற்கட்ட மெட்ரோ ரயில் விரிவாக்கத்திற்கான திட்டத்தை சென்னை ஆர்.கே.நகரில் முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது.,

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான சாத்தியக்கூறு ஆய்வு 2003-ம் ஆண்டு அப்போதைய எனது தலைமையிலான அரசால் மேற்கொள்ளப்பட்டு, அந்த ஆய்வின் அடிப்படையில் தான் வண்ணாரப்பேட்டை முதல் சென்னை விமான நிலையம் வரையிலான 23 கிலோ மீட்டர் தூர வழித் தடம் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையம் முதல் பரங்கிமலை வரையிலான 22 கிலோ மீட்டர் தூர வழித் தடம் என இரு வழித் தடங்கள் தெரிந்தெடுக்கப்பட்டன. இந்த நடவடிக்கையின் மூலம் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு எனது தலைமையிலான அப்போதைய அரசு வித்திட்டது.

14,600 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டத்திற்கு 2007-ம் ஆண்டு, நவம்பர் மாதம் மாநில அரசும், 2009-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மத்திய அரசும் ஒப்புதல் வழங்கியது. இத்திட்டத்திற்காக, 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு மே மாதம் வரை அப்போதைய தி.மு.க. ஆட்சியில் 1,143 கோடி ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டது. 2011-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கடந்த ஜூ ன் மாதம் வரை 11,596 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கு தேவையான நிதியை ஒவ்வொரு ஆண்டும் முழுமையாக ஒதுக்கி, திட்டப் பணிகள், குறித்த காலத்தில் முடிவுறத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எனது தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.

இத்திட்டத்திற்காக இதுவரை தமிழக அரசு 2,383 கோடி ரூபாயை பங்கு மூலதனமாகவும், 1,854 கோடி ரூபாயைச் சார்நிலைக் கடனாகவும், 82.51 கோடி ரூபாயை மானியமாகவும் வழங்கியுள்ளது. மத்திய அரசு 1,950 கோடி ரூபாயைப் பங்கு மூலதனமாகவும், 365 கோடி ரூபாயைச் சார்நிலைக் கடனாகவும் வழங்கியுள்ளது. ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையின் மூலம் 7,095 கோடி ரூபாய் கடன் பெறப்பட்டுள்ளது.

2011-ம் ஆண்டு வரையிலான அப்போதைய தி.மு.க ஆட்சியில் சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகளில் 3 சதவீதமே முடிவடைந்திருந்தது. எனது தலைமையிலான அரசு 2011-ம் ஆண்டு மே மாதம் பொறுப்பேற்ற பின்னர் பணிகளை விரைந்து செயல்படுத்தியதன் காரணமாக உயர்த்தப்பட்ட வழித் தடங்கள் மற்றும் மெட்ரோ நிலையங்களை பொறுத்தவரை 98 சதவீதப் பணிகளும், நிலத்தடி வழித் தடங்கள் மற்றும் மெட்ரோ நிலையங்களை பொறுத்த வரையில் 65 சதவீதப் பணிகளும், பணிமனையை பொறுத்த வரையில் 100 சதவீதப் பணிகளும் தற்போது முடிவுற்றுள்ளன.

கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் சேவை 29.6.2015 முதல் வழங்கப்படுகிறது. உயர்த்தப்பட்ட வழித் தடப் பகுதியான சின்னமலை முதல் விமான நிலையம் வரை அடுத்த மாதத்திலும், ஆலந்தூர் முதல் புனித தோமையர் மலை வரை வரும் அக்டோபர் மாதத்திலும், நிலத்தடி வழித் தடத்தில் ஒரு பகுதியான கோயம்பேடு முதல் நேரு பூங்கா வரை இந்த ஆண்டு இறுதிக்குள்ளும், பயணிகள் சேவை, துவக்கப்பட்டு விடும். மீதமுள்ள பகுதிகளில் அனைத்துப் பணிகளும் 2017-ம் ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்பட்டு விடும்.

வடசென்னைப் பகுதியில் பெருகி வரும், போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, அப்பகுதி மக்களும் மெட்ரோ ரயில் சேவையை பெற்றிடும் வகையில், மெட்ரோ ரயில் திட்டத்தின் வழித் தடத்தை வண்ணாரப்பேட்டையிலிருந்து திருவொற்றியூர் - விம்கோ நகர் வரையிலான 9 கிலோ மீட்டர் தூரத்திற்கு நீட்டிப்பதற்கான கருத்துரு 2010-ம் ஆண்டு, மத்திய அரசுக்கு அப்போதைய தி.மு.க அரசால் அனுப்பி வைக்கப்பட்டது. எனினும், முந்தைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு, இதற்கான ஒப்புதலை வழங்கவே இல்லை. நான் ஏற்கெனவே தெரிவித்தபடி, எனது அரசு மேற்கொண்ட முயற்சியின் காரணமாகவும், வெங்கையா நாயுடுவின் ஒத்துழைப்பின் காரணமாகவும், தற்போது மத்திய அரசு இத்திட்டத்திற்கு ஒப்புதலை வழங்கியுள்ளது.

இந்த வழித் தடத்தில், 8 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்படும். இதில், சர் தியாகராயா கல்லூரி, கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை, மற்றும் டோல்கேட் மெட்ரோ நிலையங்கள் எனது சட்டமன்றத் தொகுதியான ராதாகிருஷ்ணன் நகர் பகுதியில் அமைக்கப்படுவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் 45.1 கிலோ மீட்டர் நீளத்திற்கான, மெட்ரோ வழித் தடங்கள் எதிர்காலத் தேவைக்கு போதாது என்பதால் எனது தலைமையிலான அரசு, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்டத்தில் மூன்று வழித் தடங்களைச் செயல்படுத்த முடிவெடுத்துள்ளது. இவ்வழித்தடங்களில், இரண்டு வழித் தடங்கள் வடசென்னை பகுதியான மாதவரத்திலிருந்து, செயல்படுத்தும் வகையில் தற்போது விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகின்றது.

இத்திட்டங்களுக்கு நிதியுதவி பெறுவதற்காக ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையின் 2016-ம் ஆண்டுக்கான சுழல் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இத்திட்டம் மத்திய அரசின் ஒப்புதலுக்கு விரைவில் அனுப்பப்படும். மத்திய அரசு அதற்கான ஒப்புதலை விரைந்து வழங்க வேண்டும் என இத்தருணத்தில் வெங்கையா நாயுடு அவர்களைக கேட்டுக் கொள்கிறேன்.

இன்று (நேற்று) அடிக்கல் நாட்டி துவக்கி வைக்கப்பட்ட வண்ணாரப்பேட்டை முதல், திருவொற்றியூர்-விம்கோ நகர் வரையிலான மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் மூன்று ஆண்டுகளில் முடிக்கப்பட்டு அதன் மூலம் வடசென்னை மக்கள் பெரிதும் பயன் பெறுவர். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா  பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்