முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீக்கப்பட்ட பாரதீய ஜனதா தலைவரை அக்கட்சி பாதுகாக்கிறது: மாயாவதி குற்றச்சாட்டு

புதன்கிழமை, 27 ஜூலை 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - பா.ஜனதாவில் இருந்து நீக்கப்பட்ட தயாசங்கர்சிங் கடைசியாக ஜார்கண்டில் காணப்பட்டார். இதனைத் தொடர்ந்து பா.ஜனதா அவரை பாதுகாக்கிறது என்று மாயாவதி குற்றம் சாட்டிஉள்ளார்.  உத்தரபிரதேச மாநில பா.ஜனதா துணைத்தலைவராக இருந்த தயாசங்கர்சிங், பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதியை தரக்குறைவாக பேசியது பகுஜன் சமாஜ் கட்சியினரிடையே மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தியதுடன், பாராளுமன்றத்திலும் அந்த கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.  இதைத்தொடர்ந்து தயாசங்கர் சிங்கின் கட்சிப்பதவிகள் அனைத்தும் பறிக்கப்பட்டதுடன்,

கட்சியில் இருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டார். அவரது அவதூறு கருத்துகளுக்காக மத்திய மந்திரி அருண் ஜெட்லி பாராளுமன்றத்தில் வருத்தம் தெரிவித்தார்.  தனது கருத்துகளுக்காக தயாசங்கர் சிங் வருத்தம் தெரிவித்திருந்த நிலையில், அவர் மீது உத்தரபிரதேச போலீசார் வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கைகளை தொடங்கி உள்ளனர். தற்போது அவர் தலைமறைவாகி உள்ளார். இவ்விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  இதற்கிடையே தயாசங்கர் குடும்பத்தினரை அவதூறாக பேசியதாக பகுஜன் சமாஜ் கட்சியினர் மற்றும் மாயாவதி மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் பா.ஜனதாவில் இருந்து நீக்கப்பட்ட தயாசங்கர்சிங் கடைசியாக ஜார்கண்டில் காணப்பட்டு உள்ளார். கடந்த 24-ம் தேதி ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள தியோகார் கோவிலுக்கு சென்று உள்ளார். இதுதொடர்பான புகைப்படம் வெளியாகி உள்ளது.இந்நிலையில் பாராளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மாயாவதி, ”தயா சங்கர் சிங் இப்போது ஜார்கண்டில் உள்ளார். அங்கு பாரதீய ஜனதா ஆட்சி செய்கிறது, இதனுடைய பொருள் பாரதீய ஜனதா அவரை பாதுகாக்கிறது என்பதே,” என்று கூறிஉள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்