முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தலித் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் தாக்குதலுக்கு பார்லியில் கண்டனம் : எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

சனிக்கிழமை, 30 ஜூலை 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - மாட்டிறைச்சி விவகாரத்தில் தலித் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராக அதிகரித்து வரும் தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து லோக்சபையில் எதிர்க்கட்சிகள் பிரச்சினை எழுப்பி வெளிநடப்பு செய்தன.  குஜராத்தின் உனா மாவட்டத்தில் தோலுக்காக பசுவை கொன்றதாக கூறி தலித் இளைஞர்களை பசு ஆர்வலர்கள் கடுமையாக தாக்கிய சம்பவமும், மத்தியப் பிரதேச மாநிலம் மண்டசோரில் பசு இறைச்சி வைத்திருந்ததாக இரு பெண்களைத் தாக்கிய சம்பவமும் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பாராளுமன்ற லோக்சபை நேற்று கூடியதும் தலித்துகள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராக அதிகரித்து வரும் இந்த சம்பவங்களைத் தடுக்காமல் அரசு மெத்தனமாக செயல்பட்டு வருவதைக் கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் பிரச்சினை எழுப்பினர்.  கேள்வி நேரத்துக்கு பிறகு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசியதாவது:  மத்தியப் பிரதேசம், குஜராத், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலித்துகளுக்கு எதிரான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பசு பாதுகாப்பு சங்கத்தினர் தங்களுக்கென தனி சட்டத்தை உருவாக்கி தலித்துகளை தாக்கி வருகின்றனர். பாஜக ஆளும் மாநிலங்களில் அவர்களுக்கு ஊக்கமும் அளிக்கப்படுகிறது. இது மிகவும் கண்டனத்துக்குரியது. பசு பாதுகாப்பு சங்கம் போன்ற அமைப்புகளுக்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும்.

மத்தியப் பிரதேசத்தில் எருமை இறைச்சியை கொண்டு சென்ற இரு பெண்கள் தாக்கப்பட்டுள்ளனர். எருமை இறைச்சியை வாங்கிய தற்கான ரசீதை அவர்கள் காண்பித்த பிறகும், அது பசுவின் இறைச்சிதான் என கூறி போலீஸார் முன்னிலையிலேயே அவர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.  மேலும் ஆண்கள் மாட்டிறைச்சியை கொண்டு வந்திருந்தால் கொலை செய்திருப்போம் என அந்த அப்பாவி பெண்களை மிரட்டியுள்ளனர். தடயவியல் அறிக்கையும், அவர்கள் கொண்டு சென்றது எருமையின் இறைச்சி என்று நிரூபித்துள்ளது.
நாடு முழுவதும் 80 நிமிடத்துக்கு ஒரு தலித் தாக்கப்படுகிறார்.

3 தலித் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகின்றனர். 2 பேர் கொல்லப்படுகின்றனர் என தேசிய குற்றவியல் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. ஆனால் அரசோ முந்தைய காலக்கட்டங்களிலும் இத்தகைய சம்பவங்கள் நடந்திருப்பதாக முன்னுதாரணம் காட்டி சமாதானம் தெரிவிக்கிறது. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகே இத்தகைய சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.  இதுகுறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பதிலளிக்கையில் ‘‘இது சட்டம் ஒழுங்கு பிரச்சினை. தவிர இது ஒரு மாநிலம் சம்பந்தப்பட்டது. இந்த விவகாரத்தில் மத்தியப் பிரதேச அரசு ஆக்கப்பூர்வமாகவும், துரித கதியிலும் செயல்பட்டது. தொடர்ந்து விசாரணையும் நடக்கிறது. குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத் தப்பட்டு நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்கும்’’ என்றார்.   ராஜ்நாத் சிங்கின் இந்த விளக்கத்தால் கடும் அதிருப்தி அடைந்த காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சி யினர் அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பி அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்