முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இத்தாலி பூகம்பத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 250-ஆக அதிகரிப்பு

வியாழக்கிழமை, 25 ஆகஸ்ட் 2016      உலகம்
Image Unavailable

ரோம்  - மத்திய இத்தாலியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 250 ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இத்தாலியின் தலைநகரான ரோமிலிருந்து 170 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள நார்சியாவை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

தரைமட்டமான சில மலைப்பிரதேச கிராமங்களில் இடிபாடுகளில் சிக்கியுள்ளோரை மீட்புப் படையினர் காப்பாற்ற தொடர்ந்து போராடி வருகின்றனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர், சிலர் உயிருக்குப் போராடி வருகின்றனர், எத்தனை பேர் என்று உறுதியாக சொல்ல முடியாத எண்ணிக்கையில் பலரும் கட்டிட இடிபாடுகளுக்கிடையே சிக்கியுள்ளனர்.

போர்க்களம் போல் காட்சியளிக்கும் நார்சியாவில் அவசரநிலை சேவைக்குழுப்பணியாளர்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளோர்களை மீட்கும் கடினமான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.மிக மோசமாக பாதிக்கப்பட்ட அமட்ரைஸ் கிராமத்திற்குச் சென்று வந்த இத்தாலி பிரதமர், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று கவலை வெளியிட்டிருந்தார்.

மேலும் மத்திய இத்தாலியில் பின்னதிர்வுகள் தொடர்ந்து ஏற்பட்ட வண்ணம் இருந்ததால் டெண்ட்டுகளில் நூற்றுக்கணக்கானோர் பீதியில் உறக்கமின்றி உட்கார்ந்திருந்தனர். அமட்ரைஸ், அக்குமோலி, மற்றும் அர்குவாட்டா ஆகிய கிராமங்களிலும் இதனை சுற்றியுள்ள பகுதிகளிலேயே அதிக மக்கள் பலியாகியுள்ளனர்.அகுவில்லாவில் 2009-க்குப் பிறகு இத்தகைய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது .

“கிட்டத்தட்ட பாதிக்கும் மேலான கிராமம் மறைந்து போனது” என்று அமட்ரைஸ் மேயர் செர்ஜியோ பிரோசி தெரிவித்தார், மேலும் ஒரு டவுன் செண்டரை பார்வையிட்ட போது பயங்கர வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்ற இடம் போல் காட்சியளித்ததாக அவர் தெரிவித்தார்.பயங்கர நிலநடுக்கம் என்பதால் சுமார் 150 கிமீ தொலைவில் உள்ள ரோமிலும் கட்டிடங்கள் குலுங்கின. பெஸ்காரா டெல் ட்ராண்டோ என்ற அர்குவாட்டா அருகில் உள்ள பகுதியில் உடல்கள் பூங்காவில் பரவலாக வைக்கப்பட்டுள்ள காட்சி நிலநடுக்கத்தின் கோரத்தை உணர்த்துவதாக நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்

மலையில் உள்ள இயற்கை எழில் மிகுந்த அமட்ரைஸில் நிலநடுக்கம் தாக்கியபோது, கோடையின் உச்சம் என்பதால், பயணிகள் அதிகம் குவிந்தனர். அதிகாலை உள்ளூர் நேரம் 3.36 மணிக்கு பூகம்பம் தாக்கியது, 13-ம் நூற்றாண்டு கிராம கடிகார கோபுரத்தில் கடிகாரம் நின்று போனது.பூமிக்கு கீழே 4 கிமீ ஆழத்திலேயே பூகம்பம் ஏற்பட்டதால் ரிக்டர் அளவுகோலில் 6.2ஆக இருந்த போதும் விளைவுகள் படுமோசமாகிப் போனது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்