முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவிரி நதிநீர் பிரச்சனை: காங்கிரசுடன் சேர்ந்து பா.ஜனதாவும் நாடகமாடுகிறது: ஜி.கே.வாசன்

செவ்வாய்க்கிழமை, 6 செப்டம்பர் 2016      அரசியல்
Image Unavailable

சென்னை, காவிரி நதிநீர் பிரச்சனையில் கர்நாடக காங்கிரசுடன் சேர்ந்து பா.ஜனதாவும் நாடகமாடுகிறது என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

திருச்சியில்ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக வந்த த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி 1993-ல் ஜி.கே.மூப்பனாரின் தலைமையில் எவ்வளவு எழுச்சியுடன் இருந்ததோ அதே எழுச்சியுடன்தான் தற்போது இருக்கிறது.த.மா.கா.வில் இருந்து பிரிந்து விலகி சென்றவர்களால் எந்தவித பாதிப்பும் இல்லை. இக்கறைக்கு அக்கறை பச்சை என்ற ரீதியில் பதவிக்கு ஆசைப்பட்டு அவர்கள் சென்றுள்ளார்கள். உண்மையான காமராஜர், மூப்பனாரின் தொண்டர்கள் த.மா.கா.வில் என்னுடன் என்றும் இருப்பார்கள். த.மா.கா.வை கலைத்துவிட்டு மீண்டும் காங்கிரசில் இணைவேன் என்று வதந்தி பரப்புவர்கள் பற்றி எனக்கு தெரியாது. தமிழ்நாட்டில் உண்மையான காங்கிரசாக தமிழ் மாநில காங்கிரஸ்தான் செயல்படுகிறது.உள்ளாட்சி தேர்தலில் எங்கள் பலத்தை நிரூபிப்போம். கடந்த ஒரு மாதத்தில் 56 ஊர்களுக்கு சென்று கூட்டங்களை நடத்தியுள்ளோம். 7 ஆயிரம் மக்கள் பிரதிநிதிகளை சந்தித்து பேசியுள்ளேன். உள்ளாட்சி தேர்தலில் முதல் நிலை வெற்றியுள்ள பகுதிகளை கண்டறிந்து அதனை உறுதிப்படுத்தும் பணிகளையும், எங்கெல்லாம் இரண்டாவது வெற்றிநிலை உள்ளதோ அதை முதல்நிலை வெற்றி இடத்திற்கு கொண்டு வரவும் பணிகளை தொண்டர்கள் செய்து வருகிறார்கள்.

உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி உண்டா என்பது பற்றி தேர்தல் தேதி அறிவித்த பிறகு அனைத்து நிர்வாகிகளையும் கலந்து ஆலோசித்து முடிவை அறிவிப்போம்.தமிழகம் நதிநீர் பிரச்சனையில் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறது. காவிரி, முல்லைபெரியாறு, பாலாறு, சிறுவாணி பிரச்சனைகளில் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது. தமிழகத்தில் 5 லட்சம் விவசாயிகள் பசி, பட்டினியால் வேதனைப்படுகிறார்கள்.

எனவே 15 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் திறந்து விடவேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்த பிறகும், கர்நாடக அரசு மதிக்காமல் உள்ளது.கர்நாடக மாநில காங்கிரஸ் முதல்வர் சித்தராமையா உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் கர்நாடகாவில் சட்டம்- ஒழுங்கு பிரச்சனைகள் இருப்பதுபோல நாடகம் ஆடிக்கொண்டு இருக்கிறார்.இதற்கு அங்குள்ள பா.ஜனதாவும், அங்கு விரைவில் வருகிற சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு காங்கிரசுக்கு துணை போய்க் கொண்டு இருக்கிறது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி ஆகஸ்டு 31-ந்தேதி வரை 96 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடக அரசு திறந்துவிட்டிருக்க வேண்டும். ஆனால் வெந்தபுண்ணில் வேலை பாய்ச்சும் வேலையாக கர்நாடக அரசு தமிழர்களை மீண்டும், மீண்டும் வஞ்சிக்கிறது.தமிழக விவசாயிகளின் நலனை கருதி கர்நாடக அரசு 15 டி.எம்.சி. தண்ணீரை உடனடியாக திறந்துவிட வேண்டும். இதை மத்திய அரசு கண்காணிக்க வேண்டும். நதிநீர் பிரச்சனையில் தமிழக அரசு அனைத்து கட்சிகளையும் அழைத்து பேசி டெல்லிக்கு சென்று பிரதமரை சந்தித்து பேச வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். ஆனால் இது கண்டுகொள்ளப்படாமலேயே இருக்கிறது.காவிரி பிரச்சனையில் நாங்கள் பதவியில் இருந்த காலங்களில் ஒரு மத்திய அமைச்சர் என்பதையும் தாண்டி பல நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்