முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசியலில் ஈடுபட்டாலும் தொடர்ந்து நடிப்பேன் சரத்குமார் பேட்டி

வெள்ளிக்கிழமை, 9 செப்டம்பர் 2016      சினிமா
Image Unavailable

சென்னை, அரசியலில் ஈடுபட்டாலும், சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன். சினிமா, என் தொழில். நல்ல கதையும்சத்துடன் கூடிய முக்கிய கதாபாத்திரங்கள் என்னை தேடி வந்தால், அதை ஏற்றுக்கொள்வேன் என்று நடிகர் சரத்குமார் கூறினார்.

சமத்துவ மக்கள் கட்சி தலைவரும், நடிகருமான சரத்குமார் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நான் அரசியலில் ஈடுபட்டாலும், சினிமாவில் நடிப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறேன். சினிமா என் தொழில். நல்ல கதையம்சம் உள்ள படங்களும், எனக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களும் என்னை தேடி வரும்போது, அதை ஏற்றுக்கொண்டு தொடர்ந்து நடிப்பேன். எம்.எஸ்.சரவணன் தயாரிக்கும் 'அடங்காதே' என்ற புதிய படத்தில் நானும், ஜி.வி.பிரகாசும் இணைந்து நடிக்கிறோம். சண்முகம் முத்துசாமி டைரக்டு செய்கிறார்.

இதேபோல் புனித் ராஜ்குமாருடன், 'ராஜ்குமாரா' என்ற கன்னட படத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறேன். மேலும் 2 படங்களில் நடிக்க கதை கேட்டு வருகிறேன். சமீபத்தில் என் மகள் திருமண பத்திரிகையை கொடுப்பதற்காக சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரியை சந்தித்தேன். அப்போது, "அதிகமான வெற்றி படங்கள் கொடுத்த கதாநாயகன் நீங்கள்தான். உங்களை வைத்து மறுபடியும் படம் தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறேன்" என்று கூறினார். சந்தோஷமாக இருந்தது.வாழ்க்கையில் உயர்வும், தாழ்வும் சகஜமானதுதான். அது எல்லோருக்கும் ஏற்படும்.

சைக்கிளில் உள்ள இரண்டு பெடல்களில் ஒன்று மேலே போகும்போது, இன்னொன்று கீழே இறங்கும். சைக்கிள் போன்றதுதான் வாழ்க்கை. ஆனால், நான் அந்த சைக்கிளை தொடர்ந்து ஓட்டாமல், திடீர் என்று கீழே இறங்கி விட்டேன். அதை இப்போது உணர்கிறேன்.'சூர்யவம்சம்' படத்தில் நடித்து முடித்ததும், நான் அரசியலில் ஈடுபட்டேன். அதனால், சினிமாவில் எனக்கு பாதிப்பு ஏற்பட்டது உண்மை. அதை சரி செய்ய, தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்துவேன். தமிழ் படங்களில் இப்போது வில்லன் வேடங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

கதாநாயகனுக்கு இணையாக வில்லன் வேடங்கள் உருவாக்கப்படுகின்றன. இதற்கு உதாரணமாக, 'தனி ஒருவன்' படத்தில் அரவிந்தசாமி நடித்த வேடத்தை கூறலாம். அதுபோன்ற கதாபாத்திரங்கள் என்னை தேடி வந்தால், கதைக்கு தேவைப்படும் பட்சத்தில், அதை ஏற்றுக்கொள்வேன்.சமீபத்தில் திரைக்கு வந்த 'தர்மதுரை' படத்தில் என் மனைவி ராதிகா கதாபாத்திரம் சிறப்பாக அமைந்து இருந்தது. குறிப்பாக, அந்த படத்தில் வரும் போலீஸ் நிலைய காட்சியில் அவருடைய நடிப்பு பேசப்பட்டது. அதுபோன்ற முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடிக்க அழைத்தால், மறுக்க மாட்டேன். அடுத்து, வெங்கடேஷ் டைரக்ஷனில் 'ஏய்' படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது. திரைக்கதை இப்போது தயாராகி வருகிறது. அந்த படத்தில் நான் நடிக்க சம்மதித்து இருக்கிறேன்.

இவ்வாறு சரத்குமார் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்