முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா குணமடைந்தார்: மருத்துவமனை நிர்வாகம் தகவல்

வெள்ளிக்கிழமை, 23 செப்டம்பர் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை, முதல்வர் ஜெயலலிதாவுக்கு காய்ச்சல் குணமாகிவிட்டது  என்றும், முதல்வர் ஜெயலலிதா வழக்கமான உணவு உட்கொள்கிறார் என்றும் சென்னை அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்திருக்கிறது.

கடந்த 21-ம் தேதி முதல்வர் ஜெயலலிதா, சின்னமலையில் இருந்து விமானநிலையம் வரையிலான மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து ராமநாதபுரம் கமுதியில் சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையம், 200 புதிய பேருந்துகள், 12 ஆயிரத்து 500 பேருக்கு தாலிக்கு ஒரு சவரன் தங்கம் வழங்கும் நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு காணொலி காட்சி மூலம் அவற்றை தொடங்கி வைத்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 10.50 மணிக்கு  முதல்வர் ஜெயலலிதாவுக்கு திடீரென  காய்ச்சல் மற்றும் நீர்சத்துக்குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இதன்பின் அவர் உடல் நலம் சீரானது. இது தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி சுப்பையா விஸ்வநாதன் ஒரு செய்திக்குறிப்பு வெளியிட்டார். அதில், “முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை சீராக உள்ளது. தொடர்ந்து அவர் உடல் நிலையை கண்காணித்து வருகிறோம்“ என்று கூறப்பட்டிருந்தது.

முதல்வருக்கு தற்போது காய்ச்சல் குணமடைந்து, நலமாக இருப்பதாகவும், அவர் வழக்கமான உணவை சாப்பிட்டு வருவதாகவும் அப்பல்லோ மருத்துவமனை  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைந்து இன்று மாலைக்குள் வீடு திரும்புவார் என்று தெரிகிறது. முதல்வர்  ஜெயலலிதாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்ட தகவல் அறிந்ததும் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள், அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அப்பல்லோ மருத்துவமனை முன்பு திரண்டனர். முதல்வர் ஜெயலலிதா நலமாக உள்ளார் என்ற தகவல் கேட்டதும்  தொண்டர்கள் மகிழ்ச்சியும் உற்சாகமும் அடைந்தனர்.

நேற்று  மதியம் 1 மணி அளவில் அப்பல்லோ மருத்துவமனை, முதல்வர்  ஜெயலலிதா உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டது. முதல்வர்  ஜெயலலிதாவுக்கு காய்ச்சல் குணமடைந்து விட்டது. ஜெயலலிதா வழக்கமான உணவு உட்கொண்டார். தொடர்ந்து டாக்டர்கள் கண்காணிப்பில் இருக்கிறார் என அந்த அறிக்கையில் மருத்துவமனையின் நிர்வாக அதிகாரி சுப்பையா விஸ்வநாதன் கூறியுள்ளார். அ. தி.மு.க. அமைப்பு செயலாளர் பண்ருட்டி ராமச்சந்திரன்  கூறுகையில், முதல்வர் அம்மாவை பார்த்தோம். நலமுடன் இருக்கிறார். மருத்துவர்களும் அவர் நலமுடன் இருக்கிறார் என்று கூறினார்கள். அவருக்கு  ஓய்வு தேவை. எனவே ஓய்வு எடுக்கிறார். விரைவில் வீடு திரும்புவார் என்று  கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்