முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதியில் பிரம்மோற்சவ விழா: இன்று கருட சேவை நடப்பதை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

வியாழக்கிழமை, 6 அக்டோபர் 2016      ஆன்மிகம்
Image Unavailable

திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 3-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.

4-ம் நாள் விழாவான நேற்று காலை, தங்க கல்ப (கற்பக) விருட்ச வாகனத்தில் ஏழுமலையான் வீதி உலா வந்தார். அப்போது, மாட வீதிகளில் குவிந்திருந்த பக்தர்கள் "கோவிந்தா கோவிந்தா" என பக்தி கோஷம் முழங்கினர்.

நேற்று இரவு, சர்வ பூபால வாகனத்தில் ஏழுமலையான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருட சேவை இன்று (வெள்ளிக்கிழமை) இரவு நடக்கிறது. கருடனுக்கு பெருமாளின் சேவையில் முக்கிய பங்கு உண்டு. இதற்காகவே கருட சேவை நடத்தப்படுகிறது. கருட சேவையை தரிசிப்பதற்காக கோவிலில் கூட்டம் அலை மோதும்.
அதன்படி, இன்று இரவு நடைபெறும் கருட சேவையை காண திருப்பதியில் 5 லட்சம் பக்தர்கள் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையட்டி, 4,700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். திருமலை ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா கருட சேவையின் போது, பெருமாளுக்கு ஆண்டாள் மாலைகள் அணிவித்து புறப்பாடு செய்யும் வழக்கம் இருந்து வருகிறது. அதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் நிர்வாகம் சார்பில் ஆண்டு தோறும் மாலைகள் தயாரிக்கப்பட்டு அவற்றை ஆண்டாளுக்கு அணிவித்து அழகு பார்த்த பின்னர் அவற்றை திருப்பதிக்கு அனுப்பி வைத்து, திருமாலுக்கு சமர்ப்பிக்கின்றனர்.

அந்த வகையில் இந்த ஆண்டு திருமலையில் இன்று கருட சேவை நடக்கவுள்ளதால் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து நேற்று முன்தினம் அதிகாலை புறப்பட்ட மாலைகள் நேற்று மதியம் திருப்பதிக்கு வந்தடைந்தனர். பேடி ஆஞ்சநேயர் சன்னதி அருகே திருமலை கோவில் நிர்வாகம் சார்பில் ஆண்டாள் மாலைக்கு வரவேற்பு அளிக்கப்பட்டு மேள தாளத்துடன் மாட வீதிகளில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு ஏழுமலையான் கோவிலில் சமர்ப்பிக்கப்பட உள்ளன.

ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்து திருமலை கோவில் மூலவர் வெங்கடாஜலபதி, உற்சவர் மலையப்ப சுவாமி ஆகியோருக்கு தனித்தனி மாலைகள் கொண்டு வந்து சமர்ப்பிக்கப்பட உள்ளன. ஆண்டாளின் அடையாளமாக மலர்களினால் தயாரிக்கப்பட்ட கிளியும் இவற்றுடன் சமர்ப்பிக்கப்படவுள்ளது. திருப்பதி பிரம்மோற்சவத்தின் 5-ம் நாள் காலை புறப்பாடாக நடக்கவுள்ள மோகினி அலங்கார புறப்பாட்டின் போது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் மாலைகளைத் உற்சவர் மலையப்ப சாமி சூடிவருவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்