முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு நிதி வழங்க பி.சி.சி.ஐ.க்கு சுப்ரீம் கோர்ட் தடை

வெள்ளிக்கிழமை, 21 அக்டோபர் 2016      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி  - மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு நிதி வழங்க பி.சி.சி.ஐ.க்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது. மேலும் லோதா கமிட்டி பரிந்துரைகலை ஒரு வாரத்திற்குள் அமல்படுத்த வேண்டும் என்றும் அது உத்தரவிட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பி.சி.சி.ஐ) நிர்வாகத்தில் செய்யப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான கமிட்டியின் சிபாரிசுகளை இந்திய கிரிக்கெட் வாரியம் அமல்படுத்தாமல் காலம் தாழ்த்தி வருகிறது. இதனை எதிர்த்து லோதா கமிட்டி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் ‘லோதா கமிட்டி சிபாரிசுகளை இந்திய கிரிக்கெட் வாரியம் அமல்படுத்தாமல் தொடர்ந்து மறுத்து வருகிறது. எனவே இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளை நீக்கி விட்டு, இடைக்கால நிர்வாகியை நியமித்து உத்தரவிட வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இது தொடர்பான வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற விசாரணையின் போது, மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு தன்னிச்சையாக பிசிசிஐ நிதி வழங்க சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது. இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி தாகூர் தலைமையிலான 3 பேர் கொண்ட பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள். லோதா கமிட்டி பரிந்துரைகளை ஏற்று மாநில கிரிக்கெட் சங்கங்கள் பதில் மனு தாக்கல் செய்யாத வரை அச்சங்கங்களுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் நிதி உதவி அளிக்க கூடாது என்று அதிரடி உத்தரவு பிறப்பித்தனர். மேலும், கிரிக்கெட் வாரிய நிர்வாக கணக்குகள், பண பரிவர்த்தனைகளை ஆராய லோதா கமிட்டி தனியாக ஆடிட்டர்களை நியமிக்க வேண்டும்.

மேலும் ஆடிட்டர்கள் மூலம் கிரிக்கெட் வாரியத்தின் அனைத்து உயர் அளவிலான ஒப்பந்தங்களையும் ஆராய வேண்டும். கிரிக்கெட் வாரிய தலைவர் அனுராக் தாகூர் லோதா கமிட்டி பரிந்துரைகளையும், கோர்ட்டு உத்தரவுகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு மற்றும் லோதா கமிட்டி முன்பு அவர் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். லோதா கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்தியது தொடர்பாக அனுராக் தாகூர், செயலாளர் ஆகியோர் பிரமாண பத்திரங்களை டிசம்பர் 3-ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும்.  இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது. அடுத்த விசாரணை டிசம்பர் 5-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர்.

நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவின் முக்கிய அம்சங்கள் :-
1) லோதா கமிட்டி பரிந்துரைகளை ஏற்று மாநில கிரிக்கெட் சங்கங்கள் பதில் மனு தாக்கல் செய்யாத வரை அச்சங்கங்களுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் நிதி உதவி அளிக்க கூடாது.
2) கிரிக்கெட் வாரிய நிர்வாக கணக்குகள், பண பரிவர்த்தனைகளை ஆராய லோதா கமிட்டி தனியாக ஆடிட்டர்களை நியமிக்க வேண்டும்.
3) மேலும் ஆடிட்டர்கள் மூலம் கிரிக்கெட் வாரியத்தின் அனைத்து உயர் அளவிலான ஒப்பந்தங்களையும் ஆராய வேண்டும்.
4) கிரிக்கெட் வாரிய தலைவர் அனுராக் தாகூர் லோதா கமிட்டி பரிந்துரைகளையும், கோர்ட்டு உத்தரவுகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு மற்றும் லோதா கமிட்டி முன்பு அவர் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்.
5) லோதா கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்தியது தொடர்பாக அனுராக் தாகூர், செயலாளர் ஆகியோர் பிரமாண பத்திரங்களை டிசம்பர் 3-ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்