முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முறைகேடாக கடன் வழங்கிய வங்கி மேலாளருக்கு 5 ஆண்டு சிறை

வெள்ளிக்கிழமை, 9 டிசம்பர் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை, போலி ஆவணங்கள் மூலம் முறைகேடாக கடன் வழங்கி கனரா வங்கிக்கு ரூ.58 லட்சம் இழப்பீடு ஏற்படுத்திய அந்த வங்கி மேலாளருக்கு சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.

போலி ஆவணங்கள் தயாரித்து கடந்த 2001 மற்றும் 2002-ம் ஆண்டு காலகட்டத்தில் திருவல்லிக்கேணி கனரா வங்கி கிளையில் கடன் பெற்று வங்கிக்கு ரூ.58 லட்சம் வரை இழப்பு ஏற்படுத்தியதாக வங்கி மேலாளர் வி.விஜயராகவன், கடன் வாங்கிய பி.ஏ.டேவிட் மற்றும் மோசடிக்கு உதவிய ஜைனா தாமஸ், ராஜேந்திரபிரசாத், கோவிந்தராஜூலு, இளங்குமரன், லோகநாதன், ஆர்.லட்சுமிபதி உள்ளிட்ட 9 பேர் மீது சி.பி.ஐ. போலீசார் கடந்த 2007-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை சி.பி.ஐ. 11-வது சிறப்பு கோர்ட்டு நீதிபதி கே.வெங்கடசாமி வழக்கை விசாரித்து நேற்று தீர்ப்பளித்தார். அந்த தீர்ப்பில், “வங்கிக்கு இழப்பு ஏற்படுத்திய வங்கி மேலாளர் விஜயராகவனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.6 லட்சம் அபராதமும், கடன் வாங்கிய டேவிட்டுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.30 லட்சம் அபராதமும் விதித்தார். மேலும் மற்ற குற்றவாளிகளுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.4 லட்சம் முதல் ரூ.6 லட்சம் அபராதம் விதித்தார்.இதன் மூலம் விதிக்கப்பட்ட மொத்த அபராதத் தொகையான ரூ.67 லட்சத்தில், ரூ.58 லட்சத்தை திருவல்லிக்கேணி கனரா வங்கிக்கு ஏற்பட்ட இழப்பிற்காக இந்த வழக்கின் மேல்முறையீட்டு காலத்திற்குப்பின் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

மேலும் நீதிபதி தனது உத்தரவில், “மத்திய அரசு கருப்பு பணம் மற்றும் ஊழலை அறவே ஒழிக்க வேண்டும் என்பதற்காக ரூ.15 லட்சம் கோடி உயர் மதிப்புடைய நோட்டுகளை செல்லாது என அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தினந்தோறும் வங்கிகளில் பல மணி நேரம் காத்திருந்து ஓரிரு ரூ.2 ஆயிரம் புதிய நோட்டுகளை பெற்றுச்செல்கின்றனர்.பாதி பேருக்கு அதுவும் கிடைக்கவில்லை. 70-க்கும் மேற்பட்டவர்கள் சுருண்டு விழுந்து இறந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இருப்பினும் நாட்டின் நலன் கருதி துன்பங்களை மக்கள் தாங்கி கொள்கின்றனர்.ஆனால் கோடி கோடியாக ரூ.2 ஆயிரம் புதிய நோட்டுகள் பெரும் செல்வந்தர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டதாக அறியும் போது மத்திய அரசுக்கு துணை நிற்க வேண்டிய வங்கி அதிகாரிகளே பெரும் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளனர் என்பது அம்பலமாகியுள்ளது.கமிஷனுக்கு ஆசைப்படும் இதுபோன்ற கருப்பு ஆடுகளால் தான் இந்திய பொருளாதாரம் சீர்குலைந்து போய் உள்ளது. கமிஷன் தொகைக்காக எந்த ஆவணங்களையும் சரிபார்க்காமல் வங்கி அதிகாரிகள் கோடி, கோடியாக கடன் கொடுத்துள்ளனர். நாட்டில் 100 நபர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள வராக்கடன் மட்டுமே ரூ.14 லட்சம் கோடி என மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.போலியான ஆவணங்களை பெற்றுக்கொண்டு கடன் கொடுத்து நாட்டிற்கு இழப்பு ஏற்படுத்திய வங்கி அதிகாரிகள் மீது எத்தருணத்திலும் கருணை காட்ட வேண்டிய அவசியமே இல்லை.

எனவே மத்திய அரசு ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகளை செல்லாது என அறிவித்தது போல நாட்டின் நலன் கருதி வராக்கடன் விஷயத்திலும தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுத்து வசூலிக்க வேண்டும். அப்போது தான் இந்தியா முன்னேற்றம் அடையும்.

இவ்வாறு நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்