முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவிரி தொடர்பாக தமிழகம் தொடர்ந்த வழக்குகளை விசாரிக்க உரிமை உண்டு: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு

வெள்ளிக்கிழமை, 9 டிசம்பர் 2016      இந்தியா
Image Unavailable

காவிரி நடுவர் மன்ற உத்தரவு தொடர்பாக தமிழகம் தொடர்ந்த வழக்குகளை விசாரிக்க உரிமை உண்டு: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு
தமிழகத்திற்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீரை திறக்கவும் உத்தரவு
புதுடெல்லி, காவிரி நடுவர் மன்ற உத்தரவு தொடர்பாக தமிழகம் தொடர்ந்த வழக்குகளை விசாரிக்க உரிமை உண்டு என்றும், மேலும், இது தொடர்பான வழக்கை சுப்ரீம் கோர்ட் விசாரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த கர்நாடகம் மற்றும் மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்து நேற்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது. வரும் 15-ம் தேதி வரை காவிரியில் தமிழகத்திற்கு 2 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீரை திறக்கவும் உத்தரவிட்டது.

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு

காவிரி நீர் பங்கீடு பிரச்சினையில், காவிரி நடுவர் மன்றம் 2007-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. மேலும், இது தொடர்பாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதோடு தமிழ்நாட்டுக்கு 192 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகா வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. காவிரி நடுவர் மன்றம் திறந்துவிட உத்தரவிட்ட நீரின் அளவு போதாது, கூடுதலாக வழங்க வேண்டும் என்று தமிழக அரசு முறையிட்டது.

கர்நாடகம் அப்பீல்

காவிரி நடுவர் மன்றம் 2007-ல் வழங்கிய இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தது. இதை தொடர்ந்து இந்த தீர்ப்பில் விளக்கம் கோரி தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி அரசுகளும் மனு தாக்கல் செய்தன. இந்த அனைத்து மனுக்களும் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமித்வா ராய், ஏ.எம்.கன் வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. அப்போது இந்த மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு விசாரிப்பதற்கான முகாந்திரம் உள்ளதா? என விவாதிக்கப்பட்டது.

மத்திய அரசு எதிர்ப்பு

தமிழ்நாடு, கேரளா சார்பில் சுப்ரீம் கோர்ட்டு விசாரிக்க ஆதரவு தெரிவிக்கப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டு விசாரிக்க கர்நாடகாவும், மத்திய அரசும் எதிர்ப்பு தெரிவித்தன. அனைத்து தரப்பு வாதங்களும் கடந்த 19-ம் தேதி முடிவடைந்த நிலையில் நீதிபதிகள் இந்த மனுக்களை விசாரிப்பதற்கான முகாந்திரம் குறித்த தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர். மேலும் அனைத்து தரப்பினரும் எழுத்து பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

கோரிக்கை நிராகரிப்பு

அதன்படி தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களின் தரப்பில் எழுத்துபூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டன. மத்திய அரசு 2 நாட்கள் அவகாசத்துக்கு பிறகு எழுத்துபூர்வ வாதத்தை தாக்கல் செய்தது. இந்த வழக்கில் நேற்று நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர். காவிரி நடுவர்மன்ற உத்தரவு தொடர்பாக தமிழகம் தொடர்ந்த வழக்குகளை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டுக்கு அதிகாரம் உள்ளது என்று தெரிவித்து கர்நாடகாம் மற்றும் மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்தனர்.

தண்ணீர் திறக்க உத்தரவு

வழக்கின் கூடுதல் உத்தரவுகள் டிசம்பர் 15-ம் தேதி பிறப்பிக்கப்படும் என்று நீதிபதிகள் அறிவித்தனர். அன்று வரை, அதாவது டிசம்பர் 15-ம் தேதி வரை காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீரை கர்நாடகா திறந்து விட வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.நடுவர்மன்ற தீர்ப்பில் திருத்தம் கோரும் தமிழக அரசின் மனு குறித்து டிசம்பர் 15-ம் தேதி முடிவு செய்யப்படும் என்றும் நீதிபதிகள் அறிவித்தனர். காவிரியில் கழிவுகள் கலக்கப்படுவது தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு 8 வார காலத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்