முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோடு மாவட்டத்தில் நபார்டு வங்கியின் மூலம் 2017-2018 நிதியாண்டிற்கு ரூ.9,566 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை, 23 டிசம்பர் 2016      ஈரோடு

ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் இன்று (23.12.2016) நடைபெற்ற வங்கியாளர்களுக்கான கூட்டம் மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.பிரபாகர்   தலைமையில் நடைபெற்றது.

          இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.பிரபாகர்   தெரிவித்ததாவது,

          ஈரோடு மாவட்டத்தில் அடுத்த நிதியாண்டில் நபார்டு வங்கியின் மூலம் ரூ.9,566 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த திட்ட அறிக்கையின்  மூலம் முன்னுரிமை கடனாக ரூ.9,566 கோடி கொடுப்பதற்கான வாய்ப்பு உள்ளது. இதில் விவசாயத்திற்கு 62 சதவீதம் ரூ.5,879 கோடி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. பயிர்கடனாக ரூ.3,430 கோடியும், விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த மற்ற தொழில்களுக்கு முதலீட்டுக் கடனாக ரூ.2,447 கோடியும், சிறு, குறு தொழில்களுக்கு ரூ.1,854 கோடியும், இதர முன்னுரிமை கடன்களுக்கு ரூ.1,831 கோடியும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள வங்கிகள் மாவட்டத்தில் உள்ள ஏதாவது ஒரு கிராமத்தினை தேர்வு செய்து அப்பகுதியில் உள்ள மக்களிடையே வங்கிகளில் சேமிப்பு கணக்கு துவங்குவது குறித்தும், ஏ.டி.எம். கார்டு பெறுதல் குறித்தும், கைப்பேசி மூலம் வங்கி கணக்கில் தங்களது சேமிப்பு கணக்கில் இருந்து பணபரிவர்த்தனை எவ்வாறு செய்வது என்பது குறித்தும், வங்கி பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் பொதுமக்களிடையே உரிய பயிற்சியினை அளித்து விழிப்புணர்வை 100 சதவீதம் ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தார். இதன் மூலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் வசிக்கும் மக்களிடையே வங்கிகளின் செயல்பாடுகள் குறித்து நன்கு தெரிந்துகொள்ளும் அளவிற்கு விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும்.

இக்கூட்டத்தில் 2017-2018-ம் ஆண்டிற்கான நபார்டு வங்கியின் ரூ.9,566 கோடி கடன் திட்ட அறிக்கையை மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.பிரபாகர்   வெளியிட  கனரா வங்கி உதவி பொது மேலாளர் எஸ்.சோலை  பெற்றுக்கொண்டார்.

மேலும் இக்கூட்டத்தில் நபார்டு வங்கியின் திட்ட அறிக்கை குறித்து நபார்டு வங்கி உதவி பொதுமேலாளர் சி.ஆர்.அபுவராஜன்  விரிவாக எடுத்து கூறினார்.

                இக்கூட்டத்தில் தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கு.ராதாமணி, ரிசர்வ் வங்கி உதவி பொதுமேலாளர் சரவணன், ஈரோடு மாவட்ட முன்னோடி வங்கிமேலாளர் சந்தரசேகரன், இணை இயக்குநர் (வேளாண்மை) ஆர்.எம்.சுப்பிரமணியம், திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) டி.பழனிகுமார், இயக்குநர், கிராம சுய வேலைவாய்ப்பு திட்டம் கே.சுதர்சனன் மற்றும் வங்கிகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்