முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக மீனவர்கள் 20 பேர் விரைவில் விடுதலை : இலங்கை அமைச்சர் தகவல்

புதன்கிழமை, 28 டிசம்பர் 2016      உலகம்
Image Unavailable

கொழும்பு  - இலங்கை சிறையில் உள்ள 20 தமிழக மீனவர்கள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என்று இலங்கை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தொடரும் கைது சம்பவம்
தமிழக மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க செல்லும்போது இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதும், சிறைபிடிக்கப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நீண்டகாலமாக இருந்துவரும் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக இரு நாட்டு மீனவர் சங்க பிரதிநிதிகள், அதிகாரிகள், அமைச்சர்கள் கொண்ட கூட்டு செயல்திட்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் பேச்சுவார்த்தை
இந்த குழுவினர் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஜனவரி 2-ந் தேதி இருநாட்டு அமைச்சர்களும் கொழும்பில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இந்நிலையில் இலங்கை சிறையில் உள்ள இந்திய மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று இந்திய அரசு இலங்கை அரசுக்கு கோரிக்கை விடுத்தது. அதனை இலங்கை அரசும் ஏற்றுக் கொண்டுள்ளது.

இதுபற்றி இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீரா கூறியதாவது:-

இந்திய அரசு வேண்டுகோள்
இலங்கை சிறையில் உள்ள இந்திய மீனவர்களை விடுவிக்கும்படி இந்திய அரசு வேண்டுகோள் விடுத்தது. எனவே நல்லெண்ணத்தின் அடிப்படையில் இலங்கை சிறையில் உள்ள 20 மீனவர்களை விடுதலை செய்ய மீன்வளத்துறை அமைச்சகம் அட்டார்னி ஜெனரலுக்கு பரிந்துரை அனுப்பியுள்ளது. இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டாலும், அவர்களது படகுகள் திரும்ப ஒப்படைக்கப்படமாட்டாது.

விரைவில் விடுதலை
மிக விரைவில் இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள். இந்த பரிந்துரை அட்டார்னி ஜெனரலுக்கு கிடைத்ததும், அவர் கோர்ட்டுக்கு இந்திய மீனவர்களை விடுதலை செய்வதில் ஆட்சேபனை இல்லை என்று தெரிவிப்பார். உடனே மீனவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.இதுவரை, இலங்கை சிறைகளில் 51 தமிழக மீனவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். 114 மீன்பிடி படகுகளும் இலங்கையால் கைப்பற்றப்பட்டு என்று தமிழக அரசு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்