முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமநாதபுரத்தில் தேசிய வாக்காளர் தினம்

புதன்கிழமை, 25 ஜனவரி 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,-ராமநாதபுரத்தில் தேசிய வாக்காளர்தின விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் முனைவர் நடராஜன் தொடங்கி வைத்தார்.

                  வாக்காளர் தினம்

ராமநாதபுரத்தில் தேசிய வாக்காளர் தினத்தினை முன்னிட்டு மாவட்ட கலெக்டர்  முனைவர்.ச.நடராஜன் தலைமையில் பல்வேறு வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. 1950-ஆம் ஆண்டு ஜனவரி 25-ஆம் நாள் இந்திய தேர்தல் ஆணையம் துவங்கப்பட்ட நாளாகும்.  பொதுமக்களிடத்தில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து வலியுறுத்தும் வகையில் இத்தினத்தினை தேசிய வாக்காளர் தினமாக ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.  அதனை முன்னிட்டு ராமநாதபுரம் நகரம் அரண்மனை வளாகத்திலிருந்து கல்லூரி மாணவிகள் பங்கேற்ற வாக்காளர் விழிப்புணர்வு பேரணியினை கொடியசைத்து துவக்கி வைத்து பங்கேற்றார். இப்பேரணியில் ராமநாதபுரம் அரசு மகளிர் கல்லூரியைச் சார்ந்த 300 மாணவிகள் கலந்து கொண்டு வாக்காளர் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்திய படி பேரணியாகச் சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இப்பேரணியானது அரண்மனை வளாகத்தில் இருந்து துவங்கி வண்டிக்காரத் தெரு வழியாக ராமநாதபுரம் அரசு மகளிர் கல்லூரி வளாகத்தில் நிறைவு பெற்றது.  அதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் தலைமையில் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்று தேசிய வாக்காளர் தின உறுதிமொழியினை எடுத்துக்கொண்டனர். 

அதன்பின்பு ராமநாதபுரம் அரசு மகளிர் கலைக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற தேசிய வாக்காளர் தின விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையேற்று வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்கப்பட்டுள்ள இளைஞர்களுக்கு புதிய வண்ணப்புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டைகளையும், தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட வாக்காளர் விழிப்புணர்வு பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் ஓவியப்போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். இவ்விழாவில் மாவட்ட கலெக்டர் பேசியதாவது:- இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி,ஆண்டுதோறும் ஜனவரி 25-ஆம் நாள் தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி,  18 வயது பூர்த்தியானவர்கள் அனைவரும் வாக்குரிமை பெற தகுதியானவர்கள். வலிமையான ஜனநாயகத்திற்கு பொதுமக்களின் தேர்தல் வாக்கானது மிகவும் முக்கியமாகும்.  எனவே, 18 வயது பூர்த்தியானவர்கள் அனைவரும் தாமாக முன்வந்து வாக்காளர் பெயர் பட்டியலில் வாக்காளர்களாக தங்களது பெயர்களை சேர்த்து கொள்ள முன்வர வேண்டும்.   இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள 'ஒவ்வொரு வாக்கும் முக்கியமே" என்ற சொற்றொடரின் அடிப்படையில் ஒவ்வொரு வாக்காளரும் தங்களது பொறுப்பை உணர்ந்து தேர்தல் தொடர்பான அனைத்து பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு  தேர்தலின்போது எவ்வித அச்சமின்றியும், மத, இன மற்றும் மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமல் எந்தவொரு தூண்டுதலுமின்றியும் வாக்களிப்பது ஒவ்வொரு வாக்காளரின் கடமையாகும். இவ்வாறு பேசினார்.

இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் மு.அலி அக்பர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) எஸ்.சேது மாதவன், ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் இரா.ராம்பிரதீபன், தேர்தல் வட்டாட்சியர் நித்யானந்தம், ராமநாதபுரம் வருவாய் வட்டாட்சியர் சுகுமாறன் உள்பட அரசு அலுவலர்கள், மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

.................................................

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்