முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடலூர் மாவட்டத்தில் வறட்சி நிலை குறித்து வசுதா மிஸ்ரா, தலைமையில் மத்திய குழுவினர் ஆய்வு

வியாழக்கிழமை, 26 ஜனவரி 2017      கடலூர்
Image Unavailable

கடலூர்,

தமிழ்நாட்டில் உள்ள வறட்சி நிலையை ஆய்வு மேற்கொண்டு மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பிப்பதற்காக தமிழகம் வந்துள்ள இந்திய வேளாண்மை அமைச்சகத்தின் தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக்கழக மேலாண்மை இயக்குநர்  வசுதா மிஸ்ரா,  தலைமையில் 10 நபர்கள் கொண்ட குழு தமிழகம் வந்துள்ளது. இக்குழு நான்கு அணிகளாக பிரிந்து தமிழகத்தில் உள்ள மாவட்டங்களுக்குச் சென்று வறட்சி நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியின் காரணமாக 367 கிராமங்களில் உள்ள 3,33,315 கால்நடைகளுக்கு உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்றும், தற்போதைய வறட்சி நிலையில் கடலூர் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டபயிர்களில் நெல் 18109 ஹெக்டேரும், மக்காச்சோளம் 18442 ஹெக்டேரும், உளுந்து 13713 ஹெக்டேரும், பருத்தி 4800 ஹெக்டேரும் ஆக மொத்தம் 55064 ஹெக்டேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டு கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டுவருகிறது என்றும் குழுவிடம் தெரிவித்தார்.

கடலூர் மாவட்டத்தில் வறட்சி நிலை குறித்து ஆய்வுமேற்கொண்டு மதிப்பீடு செய்ய கடலூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்த இந்திய வேளாண்மை அமைச்சகத்தின் தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக்கழக மேலாண்மை இயக்குநர் வசுதா மிஸ்ரா,  தலைமையில் மத்திய நிதி ஆணையப்பிரிவின் ஆலோசகர் தீனா நாத் மற்றும் மத்திய எரிசக்தி அமைச்சகத்தின் துணை இயக்குநர் சுமீத்குமார் ஆகியோர் அடங்கிய மத்தியக்குழு, தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் முனைவர் கே.சத்யகோபால்,  மற்றும் கடலூர் கலெக்டர் டி.பி.ராஜேஷ்,  ஆகியோர்களுடன்  கீராப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொடியாளம் மற்றும் குமராட்சி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பரிவிளாகம் ஆகிய கிராமங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட நெல் வயல்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

இக்குழுவினர் கொடியாளம் மற்றும் பரிவிளாகம் கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தனர். மேலும், இப்பகுதிகளைச் சார்ந்த விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகளிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றனர்.

இந்திய வேளாண்மை அமைச்சகத்தின் தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக்கழக மேலாண்மை இயக்குநர்  வசுதா மிஸ்ரா,   கடலூர் மாவட்டம் உட்பட தமிழகத்தில் இதுவரையில்லாத அளவிற்கு பருவ மழை குறைவாக பெய்துள்ளதால் ஏற்பட்டுள்ள வறட்சி நிலை குறித்து ஆழமாகவும் விரிவாகவும் மதிப்பீடு செய்து மத்திய அரசுக்கு விரைந்து அறிக்கை சமர்ப்பிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர்  கோ.விஜயா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் எஸ்.எஸ்.குமார், சிதம்பரம் வருவாய் கோட்டாட்சியர்  விஜயலட்சுமி, வேளாண்மைத்துறையின் இணை இயக்குநர் மனோகரன்,  வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலவலர்கள், வேளாண்மைத்துறை அலுவலர்கள் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்