முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க உண்ணாவிரத போராட்டம்: உணவகங்களில் நிரம்பி வழிந்த உடன்பிறப்புகளால் பரபரப்பு:

புதன்கிழமை, 22 பெப்ரவரி 2017      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- தமிழக சட்டமன்றத்தில் தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தாக்கப்பட்டதாக கூறி திருமங்கலம் நகரில் மதுரை தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தின் போது பெரும்பாலான உடன்பிறப்புகள் உணவகங்களில் குவிந்தபடி இருந்த சம்பவம் மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

தி.மு.க உண்ணாவிரதம்:

தமிழக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்ற சமயத்தில் தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிப்பதாக கூறி நேற்று தமிழகம் முழுவதிலும் தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்கள்.இதன் ஒருபகுதியாக மதுரை புறநகர் மாவட்டம்,திருமங்கலம் நகரில் மதுரை தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. திருமங்கலம் தாலுகா அலுவலகம் எதிரில் நடைபெற்ற இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு முன்னாள் சபாநாகர் சேடபட்டி முத்தையா தலைமை தாங்கினார்.மதுரை தெற்கு மாவட்டச் செயலாளர் மணிமாறன்,வடக்கு மாவட்ட செயலாளர் மூர்த்தி எம்.எல்.ஏ.,ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ஆர்.ஜெயராம் வாழ்த்துரை வழங்கினார்.இதில் தி.மு.க நகர செயலாளர் நாகராஜன்,ஒன்றிய செயலாளர் தனபாண்டியன்,கட்சி நிர்வாகிகள் ஈஸ்வரன்,ஏர்போர்ட் காசி,சோலைரவி,முருகன்,ஈஸ்வரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

உணவகத்தில் உடன்பிறப்புகள்:

உண்ணாவிரதம் தொடங்கியது முதலே உண்ணாவிரத பந்தலில் அமர்ந்திட ஆர்வம் காட்டாத அக்கட்சியின் அருகிலுள்ள கையேந்தி பவன்களுக்கு படையெடுத்துச் சென்று தங்களது வயிற்றை நிரப்பிட ஆரம்பித்தனர்.பின்னர் மதிய நேரத்தில் எடுத்திட்ட பசியை பொறுத்திட முடியாத முக்கிய தலைவர்கள் சிலர் பாத்ரூம் சென்று வருகிறோம் என்று கூறிவிட்டு மறைவிடங்களுக்கு சென்று காரில் அமர்ந்தபடி மதிய உணவை முடித்துவிட்டு தெம்பாக உண்ணாவிரத பந்தலுக்கு திரும்பினார்கள். இதைக்கண்ட தொண்டர்களும் தங்களது பங்கிற்கு உண்ணாவிரத பந்தலை விட்டு வெளியேறி அசைவ உணவகங்களுக்குள் அச்சமின்றி நுழைந்து உணவை ஒருவெட்டு வெட்டிவிட்டு திரும்பினார்கள்.இதனிடையே மதியத்திற்கு மேல் கட்டிங் போட்ட உடன்பிறப்புகள் அவ்வப்போது பந்தலுக்கு முன்பாக வந்து தள்ளாடி தள்ளாடி நடந்து சென்று தலைவர்களுக்கு வெறுப்பேற்றினார்கள்.அதே போன்று பேசிட வாய்ப்பு கிடைக்காத சில இரண்டாம் கட்ட தலைவர்களும் உண்ணாவிரதத்தை பாதியில் முடித்துக் கொண்டு வீடு திரும்பினார்கள்.மொத்தத்தில் திருமங்கலத்தில் தி.மு.க வினர் நடத்திய உண்ணாவிரத போராட்டம் உணவகங்களில் நிரம்பிக் கிடந்த தி.மு.க உடன்பிறப்புகளால் பிசுபிசுத்துப் போனது என்பதே நிஜம்..

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்