முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாசி மாத திருவிழாவையொட்டி தமிழகத்தில் பிரசித்திபெற்ற ஆலயங்களில் சிறப்பு வழிபாடு

ஞாயிற்றுக்கிழமை, 12 மார்ச் 2017      ஆன்மிகம்
Image Unavailable

சென்னை : மாசி மாததிருவிழாவையொட்டி , தமிழகத்தில் உள்ள பிரசித்திபெற்ற ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோயிலில் மாசி மாததிருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய நிகழ்ச்சியான தசாவதாரம் நேற்றிரவு தொடங்கி விடிய விடிய நடைபெற்றது. அம்மன், காளி அவதாரம், மச்ச அவதாரம், கூர்ம அவதாரம் உள்ளிட்ட பல்வேறு உருவங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளித்தார். விழாவில் அமைச்சர் திண்டுக்கல். சி.சீனிவாசன் உள்ளிட்ட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

திருச்செந்தூர்

திருச்செந்தூர் முருகன் கோயிலில், மாசி மாததிருவிழாவையொட்டி தெப்ப திருவிழா சிறப்பாக நடைபெற்றது. முருகர், வள்ளி, தெய்வானையுடன் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பசப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கும்பகோணம்

108 வைணவத் தலங்களில் 3-வதாக விளங்கும் கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் தெப்பத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. ஸ்ரீ சாரங்கபாணி, ஸ்ரீ தேவி, ஸ்ரீ பூமி தேவியுடன் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளித்தார். விழாவில், அமைச்சர்  இரா.துரைக்கண்ணு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

திருப்போரூர்

திருப்போரூர் அருள்மிகு கந்தசாமி திருக்கோயிலில் மாசி மாத பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான தெப்பத் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை சாந்தாரம்மன் கோயிலில் மாசி மகத்தையொட்டி தெப்பத்திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

பள்ளிகொண்டாப்பட்டு

திருவண்ணாமலை அடுத்த பள்ளிகொண்டாப்பட்டு கிராமத்தில் உள்ள துரிஞ்சலாற்றின் கவுதம நதிக்கரையில் தீர்த்தவாரி நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு செய்தனர்.

மயிலாடுதுறை

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள புகழ்பெற்ற அருள்மிகு பரிமள ரெங்கநாதர் கோயிலில் மாசிமக சமுத்திர தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

காரைக்கால்

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த மண்டபத்தூர் கடற்கரையில் மாசிமகத்தை முன்னிட்டு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.

நாகப்பட்டினம்

மாசி மாததிருவிழாவையொட்டி நாகப்பட்டினம் மாவட்டம் விழுந்தமாவடியை அடுத்த கண்ணிதோப்பு கிராமத்தில் உள்ள சொளந்தரராஜபெருமாள் கோயிலில் தீமிதி திருவிழா சிறப்பாக நடைபெற்றது. பல நாட்கள் விரதம் இருந்த பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

கரூர்

கரூர் தாந்தோணிமலை அருள்மிகு கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலில்தேர் திருவிழா விமர்சையாக நடைபெற்றது. இதில் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

ஊட்டி

மாசி மாததிருவிழாவையொட்டி நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள ரங்கநாதர் கோயிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்