முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசியல் ஆதாயத்திற்காக கொலை மிரட்டல் என்று புகார் கொடுப்பதா? மதுசூதனனுக்கு டிடிவி தினகரன் கண்டனம்

புதன்கிழமை, 22 மார்ச் 2017      தமிழகம்
Image Unavailable

 சென்னை  - அரசியல் ஆதாயத்திற்காக கொலை மிரட்டல் என்ற கீழ்த்தரமான முயற்சியில் மதுசூதனன் ஈடுபடுவதாக அ.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆர்.கே. நகர் தொகுதியில் மக்கள் தமக்கு வியக்கத்தக்க வெற்றியை அளிக்க காத்திருப்பதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

பன்னீர்செல்வத்தின் பலிஆடு
அ.தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,  பன்னீர்செல்வத்தின் துரோகத்திற்கு பலி ஆடு ஆகியிருக்கும் மதுசூதனன், "தம்மை கொலை செய்துவிடுவதாக மிரட்டுவதாகவும், அதன்மூலம் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை தள்ளி வைக்க முயற்சி நடப்பதாகவும்" ஒரு மர்ம நாவல் எழுத்தாளர் கணக்காக காவல்துறை ஆணையாளரிடம் புகார் தெரிவித்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

வருத்தம் அளிக்கிறது
மேலும், மதுசூதனன் அளித்த புகாரில், மிரட்டுபவர்கள் தமது பெயரை பயன்படுத்துவதாக தெரிவித்திருப்பது, ஆச்சரியத்தையும், மிகுந்த வருத்தத்தையும் அளிப்பதாகவும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அரசியலுக்காக, இவ்வளவு கீழ்த்தரமான முயற்சியில்  மதுசூதனன் ஈடுபடுவதை நினைத்து உண்மையிலேயே தாம் வேதனைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அடிப்படையிலேயே அம்மா அவர்களால் பொதுவாழ்வுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட மாணவன் தாம் என்றும்,  அம்மா அவர்களால் பெரியகுளம் நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை உறுப்பினர் முதலான பதவிகளையும், கழகத்தில் அம்மா பேரவைச் செயலாளர், கழக அமைப்புச் செயலாளர், கழகப் பொருளாளர் உள்ளிட்ட பொறுப்புகளையும் தாம் வகித்தபோது, ஒருநாளும் அரசியலில் வன்முறையை கனவிலும் நினைத்ததில்லை என்றும் டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.

வன்முறைக்கு வக்காலத்து வாங்குபவன் அல்ல
வன்முறைக்கு வக்காலத்து வாங்குபவன் தாம் அல்ல என்பதையும், அவ்வப்போவது தானொரு முன்னாள் ரவுடி என்பதையே தனக்கான தகுதியாகச் சொல்லிக்கொள்ளும்  மதுசூதனனின் மனச்சாட்சி நன்கு அறியும் எனவும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மேலும், தமக்கென வாழா தவமாக, தமிழர் நலத்துக்கே வாய்த்த வரமாக, தம் ஆயுளையே அர்ப்பணித்து உழைத்த அம்மாவின் நெஞ்சமெல்லாம் நிறைந்த ஆர்,கே.நகர் தொகுதி மக்கள், அ.தி.மு.க.வேட்பாளராக போட்டியிடும் தமக்கு, வரலாறு வியக்கும் வெற்றியை வழங்க காத்திருக்கின்றனர்.

அ.தி.மு.க.வின் எதிரி தி.மு.க  தான்
தேர்தலில் பிரதான போட்டியென்பதே கழகத்தின் ஒரே எதிரியான திமுகவுடன் தான் என்றிருக்கையில், மதுசூதனனை மிரட்ட வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என்பதை மக்கள் நன்கு அறிவார்கள் என்றும், கழகத்தின் மீது எதிரிகளாலும், துரோகிகளாலும் திட்டமிட்டு பரப்பப்படும் வந்திகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வாய்ப்பாக ஆர்.கே.நகர் சட்டமன்ற தேர்தல் வாய்த்திருக்கும் நிலையில், இந்த தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்ற ஆசை எங்களுக்கு வர வாய்ப்பில்லை என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். ஆனால், மர்மம் என்ற ஒற்றைச் சொல்லை வைத்தே, தங்களுக்கான அரசியல் பிழைப்பை ஓட்டலாம் என்று ஆசைப்படும் துரோகிகளுக்கு வேண்டுமானால், அதுபோன்ற திட்டங்க்ள இருக்கலாம் - எனவே, மலிவான விளம்பரத்துக்காக திரு.மதுசூதனன் மர்மக் கதைகள் புனைவதை விட்டுவிட்டு, உண்மையிலேயே அவரை யாராவது, தமது பெயரைச் சொல்லி மிரட்டியிருந்தால் அதனை திரு. மதுசூதனன் நிரூபிப்பாரானால், அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கையை மேற்கொள்ள தாமும் தயாராக இருப்பதாக டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

அதைவிட்டுவிட்டு, பொய்யாக கொலை மிரட்டல் என்பதாக புகார் கொடுப்பதும், அதற்கு தம் பெயரை இணைத்து கதை புனைவதும், கிரிமினல் தனங்களில் ஊறிப்போனவர்களின் காரியமே ஆகும் - அப்படிப்பட்ட மலிவான வேலையில் திரு. மதுசூதனன் போன்றோர் ஈடுபட்டிருப்பது விசாரணையில் உறுதி செய்யப்பட்டால்,பொய்ப் புகார் அளித்ததற்காக அவர்மீது தக்க நடவடிக்கையை தமிழகக் காவல்துறை மேற்கொள்ளவேண்டும் என்றும் இத்தருணத்தில் கேட்டுக்கொள்வதாக திரு. டிடிவி தினகரன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்